-
10th January 2012, 10:37 AM
#11
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் அடுத்தடுத்த பதிவுகளாக வந்துள்ள 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே' மற்றும் 'பனி படர்ந்த மலையின் மேலே' பாடல் ஆய்வுகள் மிகமிகப் பிரமாதம்.
"தூக்கு தூக்கி(1954)" பாடலுக்கு இசை நமது திரை இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன். நமது நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் மிளிர்ந்த அசல் பக்திப்பாடலாகவே அன்றும், இன்றும் இப்பாடல் பார்க்கப்படுகிறது. பின்னணிப் பாட்டுக்குரலாக டி.எம்.எஸ், பார் போற்றுகின்ற அளவு பரிமளிப்பத்ற்கு, அவருக்கு ஒரு Baseஐ அமைத்துக் கொடுத்த காவியம். "தூக்கு தூக்கி". சௌந்தரராஜனை, வெள்ளித்திரை இசையின் வெண்குலக்குரலோனாக, Soundக்கே ராஜனாக ஒரு 'தூக்கு தூக்கி' விட்டது "தூக்கு தூக்கி". பத்மினி-ராகினிக்கு லீலா-கோமளா பின்னணி பாட, அவர்கள் பாடும்பாங்கிலேயே நடிகர் திலகத்துக்கு பாடகர் திலகம் பாட்டுக்குரல் கொடுக்க, ஆஹா...ஆஹா...அமைந்தால் ஒரு பாடல் இப்படி அமைய வேண்டும். கவிஞர் மருதகாசியின் பக்திமணம் கமழும் வரிகளுக்கு மயிலிறகு மெட்டை வார்த்தெடுத்திருப்பார் ராகதேவன் ராமநாதன். மறைந்த எனது அன்னையாரின் திருப்பெயர் 'சுந்தரி' என்பதால், அவ்வப்பொழுது அவரிடம் என்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்ள, இந்தப் பாடலை அவர்முன் சென்று அடியேன் பாடுவது வழக்கம். காரியமும் கைகூடிவிடும். அவர் மறைவுக்குபின்னும் அவரது புகைப்படத்தருகே நின்று அவ்வப்பொழுது இப்பாடலை இன்றும் அவர்முன்னே பாடிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுதும் காரியம் சித்தியாகிவிடுகிறது. அன்னை இல்லத்து நாயகரின் அன்புள்ளங்களாகிய நமக்கு, தாய்மேல் கொண்டுள்ள பக்தி என்பது, அவரைப்போலவே, உதிரத்துடன் கலந்த உணர்வு ஊற்றாயிற்றே ! 'சுந்தரி சௌந்தரி' பாடல் ஆய்வுக்காகவே தங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். புயலெனப் புகுந்து இப்பாடலின் வீடியோவை வழங்கிய வீடியோ வித்தகர் வாசு அவர்களுக்கு நமது நன்றி !
திரை இசைத் திலகத்தின் தீர்க்கமான இசையில் வெளிவந்த "இரத்தத்திலகம்(1963)" காவியப்பாடலான 'பனிபடர்ந்த மலையின்மேலே' பாடலில் நமது நடிகர் திலகத்தின் performance, காண்பவரது ஐம்புலன்களையும் ஆக்கிரமித்துவிடும். பின்னணியில் பாடகர் திலகமும் நம்மை ஒரு குலுக்குகுலுக்கிவிடுவார். திராவிட வனவாசம் முடிந்து வந்த கவியரசர், தன் மனவாசத்தில் தேசியத்தை நிலைநிறுத்திக் கொண்டபின் எழுதிய அர்த்தபுஷ்டியுடன் கூடிய வைரவரிகள், நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த நடிப்பில் மிளிரும்போது, தேசபக்தி என்பது நமக்கு வெள்ளித்திரைமூலமாகவே ஊட்டப்ப்ட்டுவிடுகிறது. அதனை நமக்கு ஊட்டிய தேசிய திலகத்தின் புகழ் என்றென்றும் வாழ்க !
நமது நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் உருவான பாடல்கள், தங்களின் மிகச் சிறந்த வித்தியாசமான எழுத்துநடையில் பதிவுகளாக உருப்பெறும்போது அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாக வடிவம் பெற்றுவிடுகின்றன.
தொடர்ந்து புளகாங்கிதத்துடன் தொடரட்டும் தங்களின் திலகப் பாட்டுப்பயணம்...!
[தங்களது கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கும் "மோகனப்புன்னகை" விளம்பரத்தை கண்டு களித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் !]
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 10th January 2012 at 10:43 AM.
pammalar
-
10th January 2012 10:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks