-
12th January 2012, 12:07 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
'தானே' புயலின் பாதிப்புகளை அருமையாகக் கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறியது போல முந்திரிக்கு பெயர் போன பண்ருட்டியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் முந்திரித்தோப்பு என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு அழிவுகள். வாழை மரங்கள், குறிப்பாக பலா மரங்கள், ஏராளமான பஞ்சு மரங்கள், மாமரங்கள் அனைத்தும் காலி. இயற்கையின் கோரத் தாண்டவத்தால் கடலூர் மாவட்டமே பொலிவிழந்து விட்டது. ஏற்கனவே சராசரிக்கும் கீழே இருந்த மாவட்டம் இப்போது அதல பாதாளத்தில் தள்ளப் பட்டுவிட்டது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு தொழிலாளிகள், உயர் அதிகாரிகள், மற்றும் தன்னார்வ அமைப்புகள், சேவா சங்கங்கள், பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்று கூடி மீட்புப் பணிகளை செய்யும் போது உலகில் இன்னும் மனிதாபிமானம் அழிந்து விடவில்லை எனும் உணர்வு தோன்றுகிறது. வெளியிலிருந்து வந்து பணிகளை கவனிக்கும் தொழிலாளிகளுக்காக திருமண மண்டபங்களில் இரவு பகலாக உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளியூர்களிலிருந்து மீட்புப் பணி புரிய வந்திருக்கும் தொழிலாளிகள் மண்டபங்களிலோ, அல்லது சொந்தக்காரர்களின் வீடுகளிலோ, நண்பர்களின் இல்லங்களிலோ தங்கி சேவை செய்கின்றனர். இரவில் கூட பணிகள் இடைவிடாது நடக்கின்றன. முக்கியமாக மின்சார சீரமைப்புப் பணிதான் உயிரை எடுக்கிறது. அனைத்து மின் கம்பங்களும் சாய்ந்து விட்டதனால் தேனி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மின்கம்பங்கள் (சிமெண்ட் போஸ்ட்) வந்து இறங்கியபடியே இருக்கின்றன. மின்துறை அதிகாரிகள் கொளுத்தும் வெயிலில் ஒப்பந்த மற்றும் மின்வாரிய தொழிலாளிகளை வைத்து மின்கம்பங்களை மாற்றி மின் இணைப்பு கொடுப்பதைக் காணும் போது இதயம் கனக்கிறது. எங்கெல்லாம் சிறு ஓட்டல்கள் இருக்கிறதோ அங்கே கிடைக்கும் உணவுப் பொட்டலங்களை அனைவரும் பாகுபாடின்றி பகிர்ந்து உண்ணுகின்றனர். மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. மிகவும் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்காக சிறப்பாக அரசாங்கம் ஏதாவது செய்தால் தேவலை. அரசாங்கத்தின் உதவி போதவில்லை என்று அனைவரும் புலம்புகின்றனர். மத்திய அரசு புயல் பாதிப்பு நிவாரணங்களுக்காக ஒதுக்கிய நிதி மிக மிக சொற்பம். நாங்களெல்லாம் தெருவாரியாக ஒவ்வொரு வீட்டிற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு ஒரு தொகையை வசூல் செய்து நாங்களே ஒரளிவிற்கு எல்லாவற்றையும் சீரமைத்துக் கொண்டோம். மரம் அறுக்கும் சீனா மிஷினுக்கு ஏக கிராக்கி. கிட்டத்தட்ட ஒரு மிஷினின் விலை ஆறாயிரம் ரூபாய். மரங்களையும், வீடுகளில் விழுந்து கிடக்கும் மரக் கிளைகளையும் அறுத்துக் கொடுப்பதற்காக தொழிலாளிகள் சைக்கிளில் சுற்றியபடியே மிஷினுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். ஒரு கிளையை அறுத்துக் கொடுக்க ரூபாய் ஐந்நூறு வாங்குகின்றனர். இதற்கு நடுவில் மரங்களை அறுத்து திருடும் கூட்டமும் இதில் உண்டு. இதற்காக பல இடங்களில் சோதனைச் சாவடி போடப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணி மந்த வேகத்தில் கூட நடைபெற வில்லை. எல்லோரும் களைத்து காணப்படுகின்றனர். யாரையும் குற்றம் கூற முடியவில்லை 'தானே'வைத் தவிர.
தங்கள் அன்புப் பிரார்த்தனைக்கும், எங்களுக்கு இயல்புநிலை திரும்ப வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 12th January 2012 at 12:53 PM.
-
12th January 2012 12:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks