-
8th October 2014, 05:39 PM
#11
Junior Member
Seasoned Hubber
திரியில் தனக்குத் தானே மானியம் விட்டுக் கொள்ளும் அறிவாளி (உபயம் :திரு.ஆர்.கே.எஸ்) நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,
நடிகர் ஆனந்தன் கூட 3 திரைப்படங்களில் காதல் காட்சிகள், நடனம், சண்டை என்று அசத்தியுள்ளதால் அவர் முதல்வராகும் தகுதி கொண்டவர் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள்? முதல்வராவதற்கு இவையெல்லாம்தான் தகுதிகள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருப்பது வேடிக்கை. அவை மட்டுமே தகுதி என்றிருந்தால் நடிகர் ஆனந்தனையும் மக்கள் முதல்வராக்கியிருப்பார்களே? இதை நினைவுபடுத்த வேண்டி இருப்பதற்காக வருந்துகிறேன். ஆனந்தனை விட திறமையாளரான திரு.சிவாஜி கணேசன் அவர்களை (இப்போது திருப்தியா?) எம்.எல்.ஏ.வாக கூட மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே?
இருந்தாலும் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்பதுதானே ஜனநாயகம்? அந்த வகையில் ஆனந்தன் என்ன? அவரைப் போல ஆடல், பாடல், சண்டை போன்ற திறமைகள் இல்லாத நீங்களே கூட (மன்னிக்க வேண்டும். உங்களுக்கு ஒருவேளை அந்த திறமைகள் இருக்கலாம். எனக்கு தெரியாததால் கூறுகிறேன். இருந்தால் தெரியப்படுத்துங்கள். மகிழ்கிறோம்) முதல்வராகலாம். ஆனால், உங்களையெல்லாம் விட்டு விட்டு புரட்சித் தலைவரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்களே ஏன்? வெறும் நடிகர், பன்முகத் திறமையாளர் என்ற வட்டங்களையெல்லாம் தாண்டி, ஏழைகளின் துயர் துடைக்க நீ்ண்ட அவர் கரங்களை பலப்படுத்த மக்கள் முடிவு செய்ததுதான் காரணம்.
ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை சிறப்பாக செய்பவன் சிறந்த நடிகன். இல்லாவிட்டால் சிறந்த நடிகன் இல்லை. இதுதான் பொதுவான அளவுகோல். இதில் ஒரு சில பாத்திரங்களோடு அந்த நடிகர்களின் திறமைகள் சுருங்கிவிடும் என்றெல்லாம் கூறுவதில் அர்த்தமில்லை. தருமி, வைத்தியாக வாழ்ந்த நாகேஷ், தவில் வித்வானாக விளங்கிய முத்துராக்கு, தொழுநோய் பாதித்து துயருற்றவரை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய எம்.ஆர்.ராதா (நவராத்திரி படத்தில் தொழுநோயாளி வேடத்துக்கு அண்ணன் ராதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று சிவாஜி கணேசன் அவர்களே கூறியிருக்கிறார்) ஆகியோர் செய்த பாத்திரங்களை வேறு யாராவது செய்ய முடியுமா? காதலிக்க நேரமில்லையில் பாலையா, நாகேஷ் போன்று யாரும் நடிக்க முடியாது என்று ரவிச்சந்திரன் திரியில் ஒருவர் எழுதினால் அதை நீங்கள் மீள்பதிவு செய்கிறீர்கள். அதையே நான் கூறினால் கோபப்படுகிறீர்கள். திரிக்கு ஒரு கொள்கையா?
நீங்கள் கூறுவதுபோல எங்களிடமும் ஏகப்பட்ட சர்ச்சைப் பதிவுகள், ஆதாரங்கள் உண்டு. கலைத்துறை, அரசியல் ஆகிய இரண்டிலும். அவற்றை இங்கே விளக்கினால் சிலரது மனம் புண்படும். மேலும், உங்கள் மீது உள்ள கோபத்தில் மறைந்து விட்ட ஒரு கலைஞனை கறைப்படுத்த வேண்டுமா? என்று யோசிக்கிறோம்.
சில நேரங்களில் என் எழுத்தில் ஒரு பளிச் தெரிவதாக கூறுகிறீர்கள். வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் நான் பதிவிட்டதை படித்தபோது உங்களுக்கு அது பளிச் என்று தெரிந்திருக்கலாம். மற்றபடி எங்கள் சகோதரர்கள் யாரும் எழுத்தில் இளைத்தவர்கள் அல்ல. உங்கள் திரியில் சாரதா, கார்த்திக், கல்நாயக் என்று பல பெயர்களில் வருபர்கள் ஒருவரா? பலரா? என்ற சந்தேகம் நண்பர் ஆர்.கே.எஸ்.சுக்கு உண்டு. அதை அவர் கேட்டும் இருக்கிறார். சமீபத்தில் கூட கொல்கத்தாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராமதாஸ் என்ற பெயரில் ஒருவர் வந்தாரே; அதுபோல, ஒரே ஐடியில் பலர் வரும் வழக்கம் எங்களுக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக உணர்வுபூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் திரியில் எல்லாரிடம் நான் இருப்பேன். என்னிடம் எல்லாரும் இருப்பார்கள். காரணம், எங்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.
களமாடப் புகும் முன் மாற்றான் வலிமையையும் திறமையும் அறிந்து கொள்வது தலைவரின் பாணி. அதைப் பின்பற்றுபவர்கள் நாங்கள். அந்த வகையில் உங்கள் திரியை ஊன்றி படித்தபோது உங்கள் எழுத்துக்களையும் கவனிக்க நேர்ந்தது. அப்படி படிக்க நேர்ந்த போது திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் பேசும் ‘ரெண்டு இட்லி ஒரு வடை’ வசனத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘நிலவிலும் களங்கம் உண்டு என்பதைப் போல அவர் இப்படி பேசிவிட்டாரே என்று நினைத்து மருகுகிறோம்’ என்று கூறிய திரு. சிவாஜி செந்தில் அவர்கள் போன்ற பண்பாளர்கள், கண்ணியவான்கள் தென்பட்டார்கள். நீங்களும் சில சமயங்களில் நன்றாகவே எழுதுகிறீர்கள். நாடோடி மன்னன் படத்தைப் பற்றிய உங்கள் சுருக்கமான விமர்சனம் அருமை. ‘மாற்று முகாம் என்ன? மாற்று முகம் கூட அறியாதவன் நான்’ என்று எழுதிய தாங்கள் நாடோடி மன்னனை மட்டும் ஒளிந்து கொண்டு பார்த்திருப்பீர்கள் போலிருக்கிறது. அதற்கே இவ்வளவு ஞானம்.
எனக்கு முன்கூட்டியே வரவேற்பளிக்கிறோம் என்று நீங்கள் கூறியதற்கு நன்றி. ஆனால், தலைவரின் ரசிகனாக இருந்து பின்னர் அதைத் தாண்டி அந்த மனிதப் புனிதரிடம் நான் கொண்டுள்ள அன்பும் பக்தியும் விசுவாசமும் என்றென்றும் மாறாதவை. நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்ததைப் போல உங்களுக்கும் எங்கள் திரிக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம் என்றால், ‘அடுத்தவன் கழிந்ததை, வாந்தியெடுத்ததை, விடாய் காலம்’ என்று நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தடுக்கின்றன. மக்கள் திலகம் திரிக்கென்று ஒரு மாண்பு உண்டு என்பதால் உங்களை அழைக்க முடியவில்லை.
திரு.ராகவேந்திரா அவர்களின் நியாயமான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களைப் பார்த்து ஊர் இரண்டு பட்டால்... என்கிறீர்கள். ஆனால், என்னை நீங்கள் அழைப்பதை பார்க்கும்போது ஊர் இரண்டுபட வேண்டும் என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையல்ல; சீனத்துப் பெருஞ்சுவர் நாங்கள்.
இறுதியாக கூறுகிறேன். கேலி கிண்டல்களால் உங்கள் அறிவும், திறமையும், எழுத்துக்களும் பின்னுக்குத் தள்ளப்படுகிறதே? அதை நீங்கள் கவனிக்கவில்லையா? எவ்வளவுதான் அறிவும் திறமையும் இருந்தாலும் ஆணவம் அவற்றை அழித்து விடும். இன்று கூட உயர் பொதுமக்களின் பிரதிகள் நாம் என்று கூறியுள்ளீர்கள். அறிவும், திறமையும் ஒரு சாதிக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ மட்டும் சொந்தமானது அல்ல நண்பரே.
எந்த இடத்தில் எந்த நேரத்தில் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது அதிகம் படித்த உங்களுக்கு தெரியாமல் போனது விந்தைதான். கடவுள் பெயராக இருந்தாலும் அதை எங்கு சொல்ல வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. திருமண வீட்டில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் என்னதான் கடவுள் பெயராக இருந்தாலும் திருப்பதியில் கோஷம் போடுகிற மாதிரி கைகளை உயரக் குவித்து ‘‘கோவிந்தா...... கோ........விந்தா’’ என்று கூவினால் ஒட்டுமொத்த கூட்டமும் அந்த நபரை அடிக்கத்தான் வரும். அந்த நபரின் நிலையில் இருக்கும் தங்களைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.
உங்களுக்கு அறிவுரையாக அல்ல. ஆலோசனையாக கூறுகிறேன். அய்யா பெரியார் பாணி அவருக்குத்தான் சரிப்படும். அவர் பாணியில் கைம்பெண்களை ‘முண்டச்சிகள்’ என்று கூறாமல் பேரறிஞர் அண்ணா பாணியில் ‘வாழ்விழந்த வனிதா மணிகள்’ என்று கூறிப் பழகுங்கள். உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால் மகிழ்ச்சி. ஆனாலும் நம்பிக்கை இல்லை. அப்படி மாறிவிட்டால்தான் நீங்கள் கோபால் இல்லையே. ஹூம்.... இருந்தாலும் all the best.
ஏழைகள், நலிந்தோர், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் எங்கள் தலைவர் அன்பும் பாசமும் அதிகம் காட்டுவார். அவர் வழிவந்தவர்கள் நாங்கள். அந்த அடிப்படையில் விசாரிக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு முன் நீங்கள் போட்ட பதிவில் குறிப்பிட்ட நினைவு. கடல் கடந்து வாழும் உங்களுக்கு பணிவிடை செய்யும் அந்த மலாய் வேலைக்காரியை நான் விசாரித்ததாக சொல்லுங்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
பின்குறிப்பு: தங்கள் தரப்பில் இருந்து provocation ஏற்பட்டாலும் தவறு தவறுதான் என்று ஒப்புக் கொண்ட திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களின் நேர்மைக்கு மீண்டும் ஒரு சிறப்பு நன்றி.
-
8th October 2014 05:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks