கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.
1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.
ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.
2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.
தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.
எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.
4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா
சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!
5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.
படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக
தென்னையை பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே
போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.
எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.
படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.
படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா
அன்புடன்
Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part I
இங்கே ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் திலகத்தின் படங்களுக்கு 70-களின் தொடக்கத்திலிருந்து விகடனின் விமர்சனங்கள் எதிர்மறையாக எழுதப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தார் சுவாமி. நான் அதை பற்றி எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை பற்றிய செய்திகளுக்கு செல்லும் முன் அன்றைய காலகட்டத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது. இந்த திரிக்கு இது ஒரு Digression என்றாலும் அதை எழுதினாலே இதன் பின்னணியை புரிந்துக் கொள்ள முடியும் என்ற வகையில் இதோ.
நான் எழுதப் போகும் விஷயங்களில் நமது திரியின் நாயகன் நடிகர் திலகம் இடம் பெறப் போவதில்லை. மாறாக இரண்டு நபர்கள் தங்கள் பரஸ்பர தேவைகளுக்காக செயல்பட்டது எப்படி அதில் எந்த பங்கும் இல்லாத நடிகர் திலகத்தின் படங்களை பாதித்தது [அதாவது மக்கள் மத்தியில் படத்தைப் பற்றி ஒரு நெகடிவ் கருத்தை உருவாக்கியது] என்பது பற்றிய பதிவே இது.
ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் ஒரு தேசியவாதி. காங்கிரஸ் பேரியக்கத்தை பெரிதும் ஆதரித்தவர். 1967 தேர்தலின்போது கூட தி.மு.க.கூட்டணியை எதிர்த்து தன் பத்திரிக்கையில் எழுதியவர். அந்த தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1968-ல் சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் சில பணிகளை [அலங்கார ஊர்திகள் முதலியன] அன்றைய அரசாங்கம் அவரிடம் ஒப்படைக்க அதை சிறப்பாக செய்து முடித்தார். விகடன் தவிர அவர் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் என்பது அனைவரும் அறிந்திருப்பர். இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்கு முன்னர்தான் முதன் முறையாக தன் ஜெமினி நிறுவனம் சார்பில் எம்,ஜி,ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். அப்போதுதான் பிற மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் நடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிட்டிமார்(?) என்ற இந்தி படம் குடியிருந்த கோயிலாக உருவாகி கொண்டிருந்தபோது பூல் அவுர் பத்தர் படத்தை வாங்கி ஒளிவிளக்கு என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தார் வாசன். இயக்குனர் பொறுப்பை சாணக்கியாவிடம் ஒப்படைத்தார். தயாரிப்பு நிர்வாகத்தை வாசனின் புதல்வர் பாலசுப்ரமணியனும் [எஸ்.எஸ்.பாலன்] அன்றைய விகடன் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த மணியனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த இடத்தில் மணியனை பற்றி சொல்ல வேண்டும். 1950-களில் விகடனில் 13-வது உதவி ஆசிரியராக சேர்ந்த மணியன் நாளைடைவில் வளர்ந்து வாசனுக்கு மிகவும் நெருக்கமானார். கதைகள் எழுதிக்கொண்டிருந்தவரை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி வைத்து இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் எழுத வைத்தனர் வாசனும் பாலனும். அதன் மூலம் மணியன் அடைந்த வளர்ச்சி அபாரமானது. மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம்.
ஒளிவிளக்கு எம்.ஜி.ஆரின் 100-வது படமாக 1968 செப்டம்பர்-ல் வெளியானது. ஏ.வி.எம். போல் ஜெமினியும் அந்த ஒரு எம்.ஜி.ஆர். படத்துடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர். மனியனுடனான உறவை தொடர்ந்தார். அது மணியனுக்கும் தேவையாய் இருந்தது. இது எந்தளவிற்கு இருந்தது என்றால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தினசரி மாலை வேலையில் மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்கு செல்வதை மணியன் வழக்கமாக்கி கொண்டிருந்தார். [மணியனே எழுதியுள்ளபடி அங்கே அவர் சென்றவுடன் இருவருக்கும் பாசந்தி மற்றும் முந்திரிப்பருப்பு பக்கோடா வருமாம். தினசரி அதை சாப்பிட்டதனால்தான் உங்கள் உடல் மிகவும் பெருத்து விட்டது என்று மணியனின் மனைவி திருமதி லலிதா மணியன் அவரை கிண்டல் செய்வாராம்] இந்த பரஸ்பர புரிதல் காரணமாக அடுத்து வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்களான அடிமைப் பெண், நம்நாடு போன்ற படங்களுக்கு விகடனின் விமர்சனம் உறுதுணையாய் இருந்தது.
இப்படி இருந்த நேரத்தில் 1969 ஆகஸ்ட் 26 அன்று எஸ்.எஸ்.வாசன் காலமானார். ஆசிரியர் பொறுப்பு பாலனின் மேல் விழுந்தது. ஆனால் எப்போதும் இது போன்ற பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டிய பாலன் பெயரளவில் தான் ஆசிரியராக இருந்துக் கொண்டு பத்திரிக்கையை நடத்தி செல்லும் முழுப் பொறுப்பையும் மனியனிடம் கொடுத்து விட்டார். மணியன் வைத்ததுதான் சட்டம் என்றாகிப் போனது.
இந்நிலையில் எம்.ஜி.ஆருடனான நட்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் மணியன். அவரிடம் சென்று விகடனில் ஏதாவது எழுதும்படி கேட்டுக் கொள்ள முதலில் மறுத்த எம்.ஜி.ஆர். பின் அதைப் பற்றி யோசிக்க தொடங்கினார். அன்றைய நாளில் பிரபலமான வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அவை குமுதம், விகடன், கல்கி, தினமணி நாளிதழின் ஞாயிறு பதிப்பாக வெளிவந்துக் கொண்டிருந்த தினமணி கதிர், கல்கண்டு மற்றும் ராணி ஆகியவை ஆகும். இவற்றில் எந்த இதழுமே எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ் கிடையாது. இவற்றில் கல்கண்டு மற்றும் கதிரை ஒதுக்கி விடலாம். கல்கிக்கு குமுதம், விகடன் போல் reach கிடையாது. ராணி தி.மு.க. ஆதரவு இதழாக இருந்தபோதினும் சந்திரோதயம் படத்தின் மூலமாக சி.பா. ஆதித்தனாரோடு ஏற்பட்ட பிணக்கு முற்றிலுமாக தீராத நேரம். மிச்சம் இருப்பது குமுதம் மற்றும் விகடன் மற்றுமே. இதில் குமுதம் நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடிய இதழ். அது எந்தளவிற்கு என்பதை அரசு எழுதிய ஒரு கேள்வி பதில் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
கேள்வி இப்படி இருந்தது
ஒரே நேரத்தில் சிவாஜி படத்திற்கும் எம்.ஜி.ஆர். படத்திற்கும் ஓசி பாஸ் கிடைத்தால் நீங்கள் எதற்கு போவீர்கள்?
அதற்கு அரசு அளித்த பதில்
இரண்டையும் கிழித்துப் போட்டுவிட்டு சிவாஜி படத்திற்கு காசு கொடுத்துப் போவேன்.
நான் சொல்லும் இந்த பதில் 1973 - 74 காலக்கட்டத்தில்தான் வந்தது. ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பதோ 1970-ன் தொடக்கம். இருந்தாலும் கூட குமுதத்தின் stand எல்லாக் காலங்களிலும் எப்படி இருந்தது என்பதை வாசகர்கள் எளிதில் விளங்கி கொள்ளவே இதை குறிப்பிடுகிறேன்.
எனவே அன்றைய நாளில் பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையின் ஆதரவு தேவை என்பதை சிந்தித்துப் பார்த்த எம்.ஜி.ஆர். விகடனில் எழுத ஒப்புக் கொண்டார். அது மணியனின் master stroke -ஆக பத்திரிக்கை உலகில் பார்க்கப்பட்டது. எதைப் பற்றி எழுதுவது என்று ஆலோசித்த எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கை வரலாற்றையே நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எழுத தொடங்கினார். 1970-ம் வருடம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெள்ளிகிழமையன்று தமிழ் புத்தாண்டு சிறப்பிதழாக வெளியான விகடன் இதழில் தொடர் ஆரம்பித்தது. இதற்கிடையில் 70 ஜனவரியில் வெளியான மாட்டுக்கார வேலன் படத்திற்கும் விகடனின் ஷொட்டு கிடைத்தது.
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part II
நான் மேற்குறிப்பிட்டுள்ள தேதியின் அடுத்த நாளன்றுதான் [அதாவது 1970 ஏப்ரல் 11] நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு வெளியானது. 1964-ல் வெளியான புதிய பறவை சிவாஜி பிலிம்ஸ் பானரில் தயாரிக்கப்பட்டது. அதற்கு ஆறு வருடங்களுக்கு பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு வியட்நாம் வீடு வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பிய வி.சி.சண்முகம் அதற்கான முயற்சியை ஆரம்பித்தார். சிவந்த மண் ஏற்படுத்திய தாக்கத்தினால் வெளிநாடுகளில் சென்று படமாக்க முடிவு செய்தார். அந்நேரத்தில் அந்த வருடம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் எக்ஸ்போ 70 என்ற மாபெரும் கண்காட்சி நடைபெறப் போவதை அறிந்த அவர் அந்த நேரத்தில் அங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ள விரும்பினார். அன்னை இல்லத்தின் குடும்ப நண்பரும் நடிகர் திலகதிற்காக மதி ஒளி என்ற மாதம் இருமுறை பருவ இதழை நடத்திக் கொண்டிருந்த மதி ஒளி சண்முகம்
அவர்களிடம் off the record ஆக இதை விசிஎஸ் சொல்ல , ஆர்வக் கோளாறு என்று சொல்லலாமா இல்லை வேறு ஏதாவது காரணம் இருந்ததா என்று தெரியவில்லை, மதி ஒளி இதழில் இந்த செய்தி வெளியாகி விட்டது. இதை பார்த்த மாற்று முகாமிற்கு ஒரே அதிர்ச்சி.
முதல் வாய்ப்பு போய்விட்டது. இந்தப் படத்தையும் விட்டு விட்டால் அது தமக்கு ஒரு அவமானமாகி விடும் என்பதை உணர்ந்த அவர் உடனே காய்களை நகர்த்த தொடங்கினார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள விரும்பிய எம்.ஜி.ஆருக்கு முதலில் நினைவு வந்தது மணியனைதான். காரணம் முன்பே சொன்னது போல் இதயம் பேசிகிறது என்ற தலைப்பில் பல வெளிநாட்டு சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண்டவர். பத்திரிக்கை உலக தொடர்புகளை அதிகமாக உடையவர் என்பதால். அவரும் அவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் சென்றனர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் குன்னக்குடி இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட செய்திகள் எல்லாம் இங்கே பலரும் அறிந்ததே. இந்நிலையில் குன்னகுடியை மாற்றி விட்டு மெல்லிசை மன்னரை இசையமைப்பாளராக அறிவித்தார்கள். எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் சொன்னது போல 15 நாட்கள் எஸ்.எஸ்.வியை கசக்கி பிழிந்து பாடல்களை வாங்கினார் எம்.ஜி.ஆர். அதற்கு காரணம் வெளிநாட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு அவருக்கு நேரம் குறைவாக இருந்ததனால்தான். வெகு வேகமாக நடிக நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மணியனின் கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரோடு கிளம்பினார்.
இதற்கிடையில் எம்.ஜி.ஆர். எக்ஸ்போ 70-ல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் சிவாஜி புரொடக்சன்ஸ் தங்கள் படத்தை ட்ராப் செய்துவிட்டனர். படப்பிடிப்பு நேரத்தில் குடும்பத்துடன் போவதாக இருந்த நடிகர் திலகம் தன் பயணத்தை ரத்து செய்து விட்டு ராம்குமார் பிரபு, சண்முகத்தின் மகன்கள் ஆகியோரை அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டு படப்பிடிப்பு என்பது அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதல்ல. அது மட்டுமல்ல அன்றைய நாட்களில் அந்நிய செலவாணி இன்றைய நாள் போல் அவ்வளவு எளிதாகவோ அல்லது அதிகமாகவோ கிடைக்காது. படப்பிடிப்பு திட்டங்களை முறையாக வகுத்துக் கொண்டு போகும் தயாரிப்பு நிறுவனங்களுக்கே கூட கிடைத்திருக்கும் அந்நிய செலவாணிக்குள் செலவை சுருக்குவதே கடினம் எனும் போது கதையை கூட முடிவு செய்யாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் செலவு என்னத்துக்கு ஆகும்? படப்பிடிப்புக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதெல்லாம் மணியன் தன் வெளிநாட்டு தொடர்புகளை பயன்படுத்தி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் கடைசி வாரத்தில் [அக்டோபர் 25 அன்று] சென்னை திரும்பி வந்தார்கள்.
மணியன் செய்த உதவிகளால் பெரிதும் மனம் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஒரு 40 நாட்களுக்கு பிறகு 1970 டிசம்பர் 7 அல்லது 8 -ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருந்த மணியனின் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். எந்த தகவலும் சொல்லாமல் எம்.ஜி. ஆர் வந்ததும் மணியனுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பிடிப்புக்கு மணியன் செய்த உதவிகளை பாராட்டி விட்டு தான் ஏதாவது பிரதி உபகாரம் செய்ய விரும்புவதாகவும் சொல்லி விட்டு, நான் கால்ஷீட் தருகிறேன். உடன் ஒரு படத்தை தயாரியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் தான் எம்.ஜி.ஆர். படத்தின் தயாரிப்பாளரா என்று மலைத்து போய் நிற்க எம்.ஜி.ஆரே ஒரு பேப்பர் பேனா எடுத்து உதயம் புரொடக்சன்ஸ் என்ற பெயரையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார். பத்திரிகை அலுவலக பணி சுமையை சுட்டிக் காட்டிய மணியனிடம் வித்வான் வே.லட்சுமணனையும் தயாரிப்பில் சேர்த்துக் கொள்ள செய்திருக்கிறார். கதையை தயார் செய்யும்படியும் உடனே படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லி விட்டு சென்றார்.
உடனே கதை தேடும் படலம் துவங்கியது. மணியனுக்கு தான் விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையை படமாக்க ஆசை. அப்படி பார்க்கும்போது அவர் எழுதிய இதய வீணை கதை பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது. எம்.ஜி.ஆரிடம் கதை சொல்ல அந்த கதையின் நாயகன் சுந்தரம் பாத்தரத்தை சிறிது மாற்றங்களோடு எம்.ஜி.ஆர். ஓகே செய்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் 1971 ஜனவரியில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். அதை பின்பற்றி இங்கே தமிழகத்திலும் சட்டமன்றத்தின் ஆயுள் ஒரு வருடம் மீதம் இருக்கும்போதே அதை கலைத்துவிட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்,ஜி,ஆர். தேர்தல் பிரசாரத்திற்கு போனதன் காரணமாக இதயவீணை படப்பிடிப்பு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 1971 ஜூலை மாதம் பூஜை போட்டு படப்பிடிப்பு ஆனந்தம் இன்று ஆரம்பம் பாடல் படமாக்கத்துடன் தொடங்கியது. அன்றைய முதல்வர் மு.க. கிளாப் அடித்து துவக்கி வைத்தார். படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடந்த சில நிகழ்வுகளை பற்றி மணியன் எழுதியிருக்கிறார். அவை இங்கே தேவையில்லை என்பதால் அதை விட்டு விடுவோம்.
ஒரு பக்கம் ஆசிரியர் பணி, மற்றொரு பக்கம் தயாரிப்பாளார், இத்துடன் வெளிநாட்டு பயணங்கள் என்று மணியனின் பயணம் தொடர அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு மேலும் இறுகியது. நான் ஏன் பிறந்தேன் தொடரும் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. இதை தவிர தினசரி மாலையில் எம்.ஜி.ஆரை சந்திப்பதும் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் கலந்து கொள்ளும் அரசியல் பொதுக் கூட்டங்களுக்கும் கூட போக ஆரம்பித்தார் மணியன். ஆனால் அவரே எழுதியுள்ளபடி பொதுக்கூட்ட மேடை வந்ததும் மணியன் காரிலேயே இருந்துக் கொள்வாராம். எம்.ஜி.ஆர். மட்டும் இறங்கி சென்று பேசிவிட்டு கூட்டம் முடிந்ததும் தன் காரிலேயே மணியனை அவர் வீட்டில் விட்டுவிட்டு போவாராம்.
Last edited by Murali Srinivas; 9th November 2014 at 11:52 PM.
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part III
71-72 காலகட்டங்களில் தி.மு.க.வில் புகைச்சல் தொடங்கி வளர்ந்தது பற்றி நாம் பலமுறை பேசிவிட்டதால் அதை விட்டுவிடலாம். சரியாக எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க.வை தொடங்கும் நேரத்தில் மணியனின் முதல் படமான இதய வீணை, 1972 அக்டோபர் 20-ந் தேதி வெளியானது. படத்தின் ரிசல்ட் average என்ற போதிலும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. அன்றைய ஆளும் கட்சியினரின் சில அடாவடி செயல்களினால் எம்.ஜி.ஆர். படத்திற்கு முதுகெலும்பான தாய்மார்கள் கூட்டம் குறைந்தது. மணியனுக்கு மீண்டும் ஒரு படம் செய்து தருகிறேன் என்று எம்.ஜி.ஆர். வாக்கு கொடுத்தார்.
மாறி விட்ட சூழலால் சில வாரங்கள் நான் ஏன் பிறந்தேன் தொடர் வெளிவரவில்லை. அதன் பிறகு வந்த இதழில் எம்.ஜி.ஆர். ஒரு அறிவிப்பு செய்கிறார். நாம் என்னுடைய வாழ்க்கை பயணத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மாறி விட்ட அரசியல் சூழலில் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு என்னுடைய அரசியல் பயணத்தை பற்றி எழுதப் போகிறேன். ஆகவே இப்போது முதல் நான் ஏன் பிறந்தேன் என்ற இந்த தொடரின் பெயர் மாற்றப்பட்டு நான் கடந்து வந்த அரசியல் பாதை என்ற தலைப்பில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார். அந்த பெயரில் ஒரு சில வாரங்கள் மட்டுமே வெளிவந்தது. பின்னர் அதுவும் நின்று போனது. எம்.ஜி.ஆர் பிசியாக இருக்கிறார். விரைவில் மீண்டும் அந்த தொடர் வெளியாகும் என்று விகடனில் அறிவிப்பு வந்தது. ஆனால் தொடர் தொடரவேயில்லை.
ஆனால் அரசியலில் அவர் முழு வீச்சில் ஈடுபட தொடங்கியதால் அவரது அரசியல் வேலைகளுக்கு மணியன் தேவைப்பட்டார். குறிப்பாக டெல்லியில் மணியனுக்கு இருந்த செல்வாக்கு எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திராவிடம் தனிப்பட்ட செல்வாக்கு படைத்திருந்த மணியன் அவரிடம் பேசி எம்.ஜி.ஆர் இந்திராவை சந்திக்க appointment வாங்கி கொடுத்தார். அவரே எம்.ஜி.ஆருடன் கூட சென்று இந்திராவுடன் நடந்த சந்திப்பின் போது உடனிருந்தார். அதன் தொடர்ச்சியாகதான் எம்.ஜி.ஆரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம். கல்யாணசுந்தரம் அவர்களும் சேர்ந்து அன்றைய குடியரசு தலைவரான வி.வி.கிரி அவர்களை சந்தித்து அன்றைய தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள் பட்டியலை கொடுத்த நிகழ்வும் நடந்தேறியது. [பிற்காலத்தில் அந்த பட்டியலின் அடிப்படையில்தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது].
மணியனால் அரசியல் தொடர்புகள் மட்டுமல்ல ஆன்மீக தொடர்புகளும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டன. ஆம், அன்றைய நாளில் காஞ்சி மகாப்பெரியவரையும் சந்திக்கும் பேறையும் எம்.ஜி.ஆருக்கு மணியன் ஏற்படுத்தி கொடுத்தார். காஞ்சிக்கு அருகிலுள்ள கலவை எனும் கிராமத்தில் மகாப்பெரியவர் வந்து தங்குவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாலையில் பெரியவரை சந்திக்க ஏற்பாடு ஆனது. சென்னையிலிருந்து அதிகாலை இரண்டு மணிக்கு கிளம்பி இருள் பிரியாத விடியற்காலை நான்கு மணிக்கு பெரியவர் குளிக்க வரும் குளக்கரைக்கு அருகே எம்.ஜி.ஆர் வந்து காத்திருக்க பெரியவர் அவரை பார்த்து பேசி ஆசி கூறினார். மணியன் உடன் இருந்தார். ஆக அரசியல் ஆன்மிகம் மற்றும் பத்திரிக்கை தளங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக மாறிப் போனார் மணியன்.
தவப்புதல்வன் விமர்சனம் பற்றி கார்த்திக் இங்கே வருத்தப்படிருந்தார். அது பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் அமைந்தது ராஜ ராஜ சோழன் விமர்சனம். அதை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் 1973 மே மாதம் 11-ந் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. ஆனந்த விகடன் விமர்சனம் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது!
[அதை கூட நமது ஹப்பில் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டிருந்தனர். அந்த நேரத்தில் அருமை சகோதரர் ராஜாராம் அவர்கள் விமர்சனம் வெளி வந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் திரைப்பட விமர்சனத்தில் மார்க் போடும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த படத்திற்கு 90 மார்க் கிடைத்திருக்கும் என்று சொல்ல நமது நண்பர் மகேஷ் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் விகடன் அதிக பட்சமாக அளித்த மார்க் 62 1/2 தான் என்று சுட்டிக் காட்டினார். உடனே நமது மற்றொரு நண்பரும் ரஜினி ரசிகரும் எம்.ஜி.ஆர் அபிமானியுமான bayarea, என் மனதிற்கு இந்த படம் இத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. அதில் நான் சந்தோஷம் அடைகிறேன், அதை கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என பதில் கேள்வி எழுப்பினார். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கூடப் பணியாற்றி, வேண்டிய உதவிகளும் செய்து விட்டு பின் இந்த உ.சு.வா, வெளிவருவதற்கு முன்னரே எம்.ஜி.ஆர். பட தயாரிப்பாளராகவும் மாறி அந்தப் படத்தையும் வெளியிட்டு விட்டு அடுத்த படத்திற்கு அதே கதாநாயகனிடம் கால்ஷீட் எதிர்பார்த்து நிற்கும் ஒருவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கும் பட்சத்தில் அந்த பத்திரிக்கையின் விமர்சனம் புகழாரங்களின் தொகுப்பாக இல்லாமல் நேர்மையான விமர்சனமாகவா இருக்கும்? இதை அன்றே அந்த திரியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நண்பர்களின் மனது புண்படுவதை நான் விரும்பவில்லை].
அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்க தாமதமானதால் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் தனது இலவு காத்த கிளியை, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் தயாரித்து வெளியீட்ட மணியன் 1974 -ம் வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் வாங்கிவிட்டார். Zanjeer படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வந்த அவர், அந்த வருட பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கோவை பாராளுமன்ற மற்றும் கோவை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைதேர்தல்களுக்குபின் தொடர்ச்சியாக படப்பிடிப்பை வைத்துக் கொண்டவர் அந்தப் படத்தையும் அதே 1974 வருடம் நவம்பர் 30 அன்று வெளியிடவும் அனுமதி வாங்கி விட்டார்.
இதை சினிமா உலகமே ஆச்சரியத்தோடு பார்த்தது. காரணம் தன்னுடைய எந்த படம் வெளியாகும் போதும் சரி அந்த படத்திற்கு போதிய இடைவெளி விட்ட பிறகே அடுத்தப் படத்தை வெளியிடுவது எம்.ஜி.ஆர். வழக்கம். அப்படி இருக்கையில் 1974 நவம்பர் 7 அன்று உரிமைக்குரல் வெளியாகியிருக்க அதற்கு 23 நாட்கள் இடைவெளியில் எம்,ஜி,ஆரின் அடுத்த படமும் வெளியாக அவர் அனுமதி கொடுக்கிறார் என்றால் மணியன் எந்தளவிற்கு அவருக்கு நெருக்கமாக இருந்தார் என்று தெரிந்துக் கொள்ளலாம்!
அது மட்டுமா? 1975-ம் ஆண்டு பிப்ரவரியில் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் விளம்பரமும் வருகிறது. அதுவும் எப்படி? பிரபல இயக்குனர் சாந்தாராம் இயக்கிய தோ ஆன்கேன் பாரா ஹாத் திரைப்படம் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்படுவதாகவும் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விளம்பரத்திலேயே அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 வெளியாகிறது என்று கொடுத்திருந்தார்கள். 1967-க்கு பிறகு பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட முதல் எம்.ஜி.ஆர். படம் பல்லாண்டு வாழ்க. 44 வருடங்கள் கூடவே இருந்த வீரப்பனாலும் முடியாத காரியம் மணியனால் முடிந்தது. மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அறிவித்தது போல் செப்டம்பர் 15 அன்று படம் வெளியாகவில்லை. காரணம் சென்சார் பிரச்னை [எமெர்ஜென்சி நேரம்] என்று ஒரு தகவலும், இல்லை ஆகஸ்ட் 22 அன்று வெளியான இதயக்கனிக்கு போதிய இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று மற்றொரு தகவலும் உலவின. படம் இறுதியில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அக்டோபர் 31 அன்று வெளியானது.
1976 வருடம் மார்ச் மாதம் மீண்டும் அடுத்த படம் அறிவிப்பு வருகிறது. மண்ணில் தெரியுது வானம் என்ற தலைப்பு. ஜோடி ஹேமமாலினி என்று. ஆனால் அந்த காலகட்டத்தில் சென்சார் கெடுபிடிகள் அதிகமானதால் படம் அறிவித்தப்படி தொடங்கவில்லை. அதன் பிறகு உதயம் புரொடக்சன்ஸ் நிறுவனம் எம்.ஜி,.ஆர். படங்களை தயாரிக்கவில்லை என்றாலும் விகடனின் ஆதரவு தொடர்ந்தது. அதே போன்று நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய நெகடிவ் விமர்சனமும் தொடர்ந்தது. [முதலில் சொன்னபடி சிவாஜி நடிப்பை மட்டும் பாராட்டி விடுவார்கள்].
அதற்கு பின்னர் நடந்த 1977 பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல்கள் அதன் முடிவுகள், எம்.ஜி.ஆர்.முதல்வராக பதவியேற்றது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தான் ஆதரவு தெரிவித்தவரே முதல்வராக பதவியேற்றவுடன் மணியன் தன் நெடுநாள் கனவை நிறைவேற்ற முயன்றார். ஆம், சொந்தமாக ஒரு வார இதழ் தொடங்கும் ஆசையைத்தான் சொல்கிறேன். அதுவும் நிறைவேறியது. 1978 ஜனவரி 1 அன்று இதயம் பேசுகிறது இதழ் வெளியானது.
வாடகை வீட்டில் இருக்கும்போதே அவ்வளவு செய்தவர்கள் சொந்த வீடு வந்தவுடன் இன்னும் எவ்வளவு செய்வார்கள். அதையும் செய்தார்கள். இம்முறை நேரிடையாகவே. மணியனுடன் விகடனை விட்டு வெளியேறிய தாமரை மணாளன் இதயம் பேசுகிறது இதழில் பல புனை பெயர்களில் எழுதினார். அதில் ஒன்றுதான் நக்கீரன்! அப்படி அவரால் எழுதப்பட்ட கட்டுரைதான் நடிகர் திலகம் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கட்டுரை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ரசிகர்களையும் கொச்சைப்படுத்தினார்கள். அதாவது இருபது பேர் மட்டுமே இருந்தார்கள் என்று கூசாமல் பொய் எழுதினார்கள். தியாகம் படத்தின் விமர்சனமும் இதே பாணியில் அமைய பாலாஜி கோவப்பட்டு விளம்பரம் கொடுத்ததெல்லாம் எல்லோரும் அறிந்த கதை. இப்படிப்பட்ட தாக்குதல்கள் கிட்டத்தட்ட 1981 மே மாதம் வெளியான கல்தூண் வரை நீடித்தது.
பொதுவாக தன் மேல் செலுத்தப்படும் எந்த எதிர்ப்புக் கணைகளையும் பொருட்படுத்தாத நடிகர் திலகமே இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் கூட அதை மறக்க முடியாமல் 1997-ல் தினமணிக்கு அளித்த பேட்டியில் மணியனின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் அந்த வேதனை எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடியும்.
இவ்வளவு ஏன்? விகடன்-மணியனின் இந்தப் போக்கு அவரை அப்போதே மன வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதற்கு வேறு ஒரு சம்பவமும் சாட்சி. நடிகர் திலகமும் மணியனும் ஒரே லயன்ஸ் கிளப்-ல் உறுப்பினர்கள். ஆனால் இருவருமே அபூர்வமாகவே அரிமா சங்க கூட்டத்திற்கு செல்பவர்கள். ஒரு முறை ஒரு முக்கியமான கூட்டத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். இந்த கூட்டம் நடைபெற்றது 1972 இறுதி அல்லது 1973 ஆரம்பம் என்று நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு பின் நடிகர் திலகத்தை சந்தித்த மணியன் அந்த காலகட்டத்தில் அவர் படங்கள் தொடர் வெற்றி பெற்றதற்கு பாராட்டி விட்டு குறிப்பாக பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை இவற்றின் இமாலய வெற்றியை குறிப்பிட்டு பெரிய இடத்திற்கு போய்டீங்க என்று சொன்னாராம். அதற்கு உடனே நடிகர் திலகம் ஆமாம், ஆனால் நீங்கதான் நம்மளை விட்டு வேற எங்கேயோ போய்டீங்க என்று பதில் சொன்னாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் ஒரு நிமிடம் திகைத்து பின் சிரித்து சமாளித்தாராம். இதை மணியனே எழுதியிருந்தார்.
சுருக்கமாக சொன்னால் ஒரு நாள் இரு நாள் அல்ல பல வருடங்கள் நடந்த பல சம்பவங்களை இங்கே எழுதுவதற்கு காரணமே, எந்த நியாயமும் இல்லாமல் நடிகர் திலகம் குறி வைக்கப்பட்டார் என்பதை சுட்டி காட்டவே. அதிலும் ஒரு பழம் பெரும் பத்திரிக்கை இப்படி நடந்துக் கொண்டது பலரையும் காயப்படுத்தியது.
இங்கே எழுதியிருப்பது அனைத்தும் பல நேரங்களில் வெளிவந்த மணியனின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ஆகவே இதில் உண்மையை தவிர வேறொன்றுமில்லை.
நடிப்பு என்பது, பாத்திரமாக மாறி ,அதன் உள்ளுணர்வை,பிரதிபலிக்கும் ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும். பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று ,அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி விடும் திறன் கொண்டவராக நடிகர் விளங்க வேண்டும்.
ஒரே காலகட்டங்களில், துள்ளல் நிறை வாலிபனாக தெய்வ மகன்,80 வயது முதியவராக திருவருட்செல்வர்,ஒரு நடுத்தர குடும்ப 58 வயது தலைவனாக வியட்நாம் வீடு,ஒரு புரட்சி எண்ணம் கொண்ட வீர இளைஞனாக சிவந்த மண்,நாதஸ்வர கலைஞனாக தில்லானா மோகனாம்பாள்,jamesbond பாத்திரத்தில் தங்க சுரங்கம் ,ரௌத்ரம் கொண்ட பனையேரியாக
காவல்தெய்வம் என்று எல்லாவற்றிலும் பல ரக நடிப்பில் ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத பாத்திரங்களில் ,ஒரே காலகட்டத்தில் பரிமளிப்பதுதான் நடிப்பு.
பொத்தாம் பொதுவாக ,தன்னை பற்றி ஒரு இமேஜ் வளயத்தை ,கட்சி,பத்திரிகை என்று திட்டமிட்டு ஏற்படுத்தி, எல்லா படத்திலும் ஒரே மாதிரி வந்து கை கால்களை சுழற்றி கொண்டிருப்பது நடிப்பே அல்ல. இளைஞர் என்று எண்ணி கொண்டு ,வயோதிகர்கள் நடித்தாலும்,சாதாரண பொது மக்களாக அதை பார்க்கும் போது ,சங்கடமான நகைப்புக்கே இடமளிக்கும்.
ஒரு சாதாரண பொழுது போக்கு படங்களில் நடிப்பது எந்த சிரமும் அல்ல என்று நடிகர்திலகம் நமக்கு காட்டி சென்றாரே தங்கை,திருடன்,ராஜா,எங்கள் தங்க ராஜா,உன்னை போல் ஒருவன் என்று.
அதிலும் வாமனன் சொல் படி கண்ணுக்கும்,காதுக்கும்,மனதுக்கும் சிரமம் தராமல்.
Last edited by Gopal.s; 5th November 2014 at 07:57 AM.
''பொதுவாக ,தன்னை பற்றி ஒரு இமேஜ் வளயத்தை ,கட்சி,பத்திரிகை என்று திட்டமிட்டு ஏற்படுத்தி, எல்லா படத்திலும் ஒரே மாதிரி வந்து கை கால்களை சுழற்றி கொண்டிருப்பது நடிப்பே அல்ல. இளைஞர் என்று எண்ணி கொண்டு ,வயோதிகர்கள் நடித்தாலும்,சாதாரண பொது மக்களாக அதை பார்க்கும் போது ,சங்கடமான நகைப்புக்கே இடமளிக்கும்.'' -திரு கோபால்
டியர் கோபால்
கண்ணுக்கும்,காதுக்கும்,மனதுக்கும் சிரமம் தராமல்.
அது தனிப்பட்ட உங்கள் கருத்து கோபால் . மனதில் தனிப்பட்ட குரோத வார்த்தைகளே வெளிபடுத்தியுள்ளது . இமேஜ் - கட்சி , பத்திரிகை , திட்டமிடுதல் ,இயற்கையான நடிப்பு , வயதானாலும் இளமை தோற்றத்துடன் , உலக பேரழகனாக திகழ்ந்தவர் , இன்றும் கோடிகணக்கான
உள்ளங்களில் சங்கடமில்லாமல் , நகைப்பு இல்லாமல் மக்கள் அவரின் பண்பட்ட நடிப்பை மகிழ்ந்தார்கள் .ரசித்தார்கள் -
கண்ணுக்கும்,காதுக்கும்,மனதுக்கும் சிரமம் தந்து நடித்தவரையும் உங்களை போன்றவர்கள்
ரசித்தார்கள் . அதுதான் திரை உலகம் . அவரவர் பாணி . எனவே இனிமேலாவது கிண்டல்
பதிவுகள் வேண்டாம் கோபால் .
Bookmarks