Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ‘சிரித்து வாழ வேண்டும்’

    ‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

    படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

    * இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

    *தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

    *ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

    *தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

    *அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

    * இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

    *சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

    * நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

    *பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

    *‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

    *படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

    சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்.

    சமீபத்தில் படித்த ஒரு செய்தியை.... செய்தி என்பதை விட வாழ்க்கையில் 24 மணி நேரத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட வேதனையை, கசப்பான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் கென்னத் டேட். அட்லான்டா நகரில் உள்ள நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தவர். ‘எபோலா வைரஸ் தடுப்பு முறை குறித்து அறிய இங்கு வரும் அதிபர் ஒபமாவை நீங்கள்தான் அருகில் இருந்து அழைத்து வர வேண்டும்..’ என்று கென்னத் டேட்டின் மேலதிகாரி கூறியபோது அவருக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.

    சிகாகோ நகரில் பிறந்த ஆப்ரிக்க-அமெரிக்கரான டேட், தான் மிகவும் மதிக்கும் கறுப்பின வம்சாவளியை சேர்ந்த அதிபர் ஒபாமாவை வரவேற்பது தனக்கு கிடைத்த பிறவிப் பயன் என்று கருதிக் கொண்டார். பாதுகாப்பு பணிக்கான கைத்துப்பாக்கியையும் அதில் போடுவதற்கான தோட்டாக்களையும் நிர்வாகத்தினர் டேட்டுக்கு அளித்தனர். நிகழ்ச்சி நிரல்படி, சரியான நேரத்துக்கு வந்த ஒபாமாவையும் உடன் வந்த அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் இ.ரைஸையும் வரவேற்று அழைத்துச் சென்று அவர்கள் போக வேண்டிய இடம் வரை கொண்டு போய் விட்டார் டேட். லிப்டில் செல்லும்போது, ‘‘எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பெயர் என்ன?’’ என்று ஒபாமா தன்னிடம் கேட்டதை அதிபரின் மெய்காவலர்களில் ஒருவரிடம் பெருமிதம் பொங்க கூறினார் . ‘‘அதிர்ஷ்டக்காரரய்யா நீர்! என்னிடம் அவர் 2 ஆண்டுகள் கழித்துதான் பேசினார்’ என்று அந்த காவலர் சொன்னபோது உலகையே ஜெயித்து விட்ட மகிழ்ச்சியை அடைந்தார் டேட்.

    பணிகளை பார்வையிட்டு விட்டு ஒபாமா மீண்டும் வந்ததும் அவரை வாசலுக்கு அழைத்துச் சென்று கார் வரை கொண்டு விட்டார் கென்னத் டேட். அதிபரின் கார் புறப்படும் சமயத்தில் அவருக்கு ஒரு ஆசை. காரையும் அதிபரையும் தனது செல்போனில் படம் பிடித்தார். அதுதான் பிரச்னையே. செல்போனில் படம் பிடித்தது மட்டுமின்றி அவரிடம் நிர்வாகம் அளித்திருந்த துப்பாக்கியை பார்த்த அதிபரின் மெய்க்காவலர்கள் பாதுகாப்பு குறைபாடு என்று கோபப்பட, வேலையை இழந்து நிற்கிறார் கென்னத் டேட். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது மகனும் ஆட்குறைப்பு என்ற பெயரில் நீக்கப்பட்டது இன்னும் கொடுமை.

    முதல் நாள் அதிபர் ஒபாமாவை வரவேற்கப் போகும் மகிழ்ச்சியில் தூக்கம் இல்லாமல் இருந்த கென்னத் டேட், மறுநாள், தான் எந்த தவறும் செய்யாத நிலையில் வேலை போன வேதனையில் தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறார்.

    ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் பத்மபிரியா வந்து போன பிறகு, அங்கு வரும் நம்பியாரைப் பார்த்து ‘பெருமைக்கு பின்னாலேயே சிறுமையும் வரும் என்று எனக்கு தெரியும். இளவரசிக்கு பின்னாலேயே நீங்கள் வரவில்லையா?’’ என்று தலைவர் கேட்பாரே? அது கென்னத் டேட் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? அதே படத்திலேயே, ‘அரசியலில் நான் சந்திக்காத சூழ்ச்சியா?’ என்றும் தலைவர் கேட்பார். வாழ்க்கையில் அவர் சந்திக்காத கஷ்டங்களா? அரசியலில் அவர் சந்திக்காத சூழ்ச்சிகளா? இரண்டையும் தனது முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் எதிர்த்து போராடி முறியடித்து அவர் பார்க்காத வெற்றிகளா?

    தலைவரின் படங்கள் மட்டுமல்ல, படத்தின் தலைப்புகளும் பாடங்களே. விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு கிடைக்கும் விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது ஏற்றம் வரும், இறக்கம் வரும், பெருமை வரும், சிறுமை வரும். இந்த எதார்த்தத்துக்கு பெயர்தான் வாழ்க்கை. இன்பம் வரும்போது துள்ளாமலும், துன்பம் வரும்போது துவளாமலும் இருக்க, எந்த நிலை வந்தாலும் எப்போதும் சம நிலையில் இருந்து அனைவரும் ‘சிரித்து வாழ வேண்டும்’.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 30th November 2014 at 03:27 PM.

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •