-
19th December 2014, 05:57 PM
#2261
Senior Member
Senior Hubber
வாவ்..கல் நாயக் சார்..தாங்க்ஸ்.. எவ்ளோ அழகா இருக்கு கன்னுக்குட்டி ..வெகு நல்ல பாடல்.
உங்களுக்குத் தெரியுமா நான் சின்னஞ்சிறுவனாக இருந்தது முதல் இப்போதுவரை எங்கு கன்னுக்குட்டியைப் பார்த்தாலும் மெய்மறந்து அருகில் சென்றுவிடுவேன்..அதன் கண்கள் துறுதுறு துள்ளல்.. சிலவை கழுத்தைக் காட்டும்..சிலவை முட்டவரும் இருப்பினும் பிடிக்கும்..போ\னவருடம் ஓரிக்கை போன போது சில கன்றுகள் சமர்த்தாய் நான் கொஞ்சியதை உள்வாங்கின..
என் எருமைக் கன்னுக்குட்டி பாட்டு ஒண்ணு இருக்கு வாசு சார் போட்டுட்டார்..வேற கன்றுப் பாட்டு என்\ன இருக்கு
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th December 2014 05:57 PM
# ADS
Circuit advertisement
-
19th December 2014, 09:42 PM
#2262
Senior Member
Senior Hubber
கவிதையும் பாட்டும் – 2
**
நண்பர் ஒருவர் முக நூலில் அரேபியக் காதை- பொட்டி கட்டும் படலம் என ஒரு கவிதை அற்புதமாக எழுதியிருந்தார்.. நான் கொஞ்சம் யோசித்து எழுதிப் பார்த்தது இது..இப்பொழுது..சுடச் சுட உங்களுக்கு..
*
பொட்டி கட்டவிழும் படலம்
**
ஆடற் காரியாய் அசைவது இறக்கி.
அணைத்தே இழுத்துத் தரையில் வைத்து
ஊடலாய் வாகன ஊர்தியை அனுப்பி
உணர்வுடன் கூந்தலைப் பற்றியே இழுத்து
வேடமாய் நின்றால் கைப்பிடி பற்றியே
விஷயங் கனக்க வேகமாய் நடந்து
வாடா என்னும் அன்னை தந்தை
வாஞ்சையில் நோக்கும் தங்கை தனயன்
நாடிப் புன்னகை உதிர்த்தே உள்ளே
நல்ல விதமாய் வைத்தே பின்பு
தேடிய உறவுடன் சிரித்தே பேசி
தெளிவாய்க் கொஞ்சம் ஓய்\வும் எடுத்து
வாடி இங்கே என்றே தங்கை
வளைக்கரம் தன்னில் வண்ணச் சேலை
வயணமாய்ப் பார்த்த தனயன் கையில்
வாழ்க்கைக் காலம் காட்டும் கருவி
கனிவாய் ப் பார்த்த தந்தை தனக்கு
கருப்பு வெள்ளை கட்டச் சட்டை
இருப்பைக் காட்டும் வங்கிக் கணக்கு
எடுத்துக் கொடுத்தால் முகமும் மலரும்
அழகாய் மிளிரும் பட்டுச் சேலை
அன்னை சொல்வாள் ஏண்டா செலவு
உடலிளைத் திருக்கு விழிகளைத் திருக்கு
உணர்வடன் சொல்லக் கண்ணீர் பூக்கும்.!
***
http://www.youtube.com/watch?feature...&v=fSe3lPOAhtY
*
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th December 2014, 09:57 PM
#2263
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalnayak
சி.க.,
National award winning song for you:
national award lost it's charm ... oh my god. are people deaf
-
20th December 2014, 11:10 AM
#2264
Senior Member
Seasoned Hubber
பாடல்: "அருணகிரணம் அணியும் உதயம்..."
திரைப்படம்: கிழக்குணரும் பக்ஷி (1991)
வரிகள்: கே. ஜெயகுமார்
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
ராகம்: லவங்கி
பாடகர்: சித்ரா with யேசுதாஸ்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th December 2014, 12:11 PM
#2265
Senior Member
Diamond Hubber
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 25) சிறப்புப் பதிவு
அடுத்து ராஜா நம் எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்ட 'முள்ளும் மலரும்'. தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு அத்திப்பூ. குறிஞ்சிப்பூ.
இசைக்கு முன் முதலில்
'முள்ளும் மலரும்' ஒரு விவரமான அலசல் பார்வை (புத்தம் புது பதிவு)
மகேந்திரன் என்ற மந்திர வித்தை அறிந்த மாயாவி 'தங்கப்பதக்க'மாய் நமக்கு அளித்த பொக்கிஷம். ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்த படம். ஆயிரம் அண்ணாமலைகளும், பாட்ஷாக்களும், முத்துக்களும், வீராக்களும், ஐ .வி.சசியின் காளிக்களும் நெருங்க முடியாத மகேந்திரனின் காளி இந்த ரஜினி. நெஞ்சில் குத்துக்கால் இட்டு இன்றுவரை நம் நெஞ்சில் உட்கார்ந்து இருக்கும் அந்த நிஜ முரட்டுக்கா(ளை)ளி முள்ளான ரஜினி.
கல்கி வெள்ளிவிழா மலரில் உமா சந்திரன் எழுதி பரிசு பெற்ற கதை. கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு பாடல்களை எழுத, பாலா, ஜேசுதாஸ், வாணி, ஜான்ஸி (ஜென்ஸி என்று போட மாட்டார்கள்) பின்னணி பாட, ஒளிப்பதிவை ஆர்வோ கலரில் தந்து ஆச்சரியப் படுத்தியவர் பாலு மகேந்திரா. வி. மோகன் தயாரிப்பில் ஆனந்தி பிலிம்ஸ் எடுத்த இக்காவியத்தை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, தனக்கென தமிழ் ரசிகர் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள்.
பாடல்களுக்கு முன்னால் இந்த அழியாத அமரத்துவ ஓவியத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
ஒரு நாலே வரிக் கதை. ஒரு நானூறு ஃபிரேம்களாய் நெஞ்சாங்கூட்டில் ஊடுருவி இன்று வரை நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் காவியம்.
கதை
அனாதையான கழைக் கூத்தாடி சிறுவன் காளி தன் தங்கை வள்ளியின் மேல் உயிரையே வைத்திருக்கிறான். ஒரு அழகான கிராமத்தில் அடைக்கலம் புகுந்து தன்மான சிங்கமாக வளர்கிறான். கண் அங்கமாக தங்கையை வளர்க்கிறான். இப்போது வளர்ந்த வாலிபன் அவன். முரடன். ஊரே அவனைக் கண்டு நடுங்கும். ஆனால் ஊருக்கு உதவும் நல்லவன். மனதில் பட்டதை சொல்பவன். செய்பவன் கூட. தங்கையோ புத்தம் புது மலராக வாசம் வீசுகிறாள்.
மலைப் பகுதியில் பவர் ஹவுஸில் டிராலி ஆபரேட்டர் வேலை அவனுக்கு.
அங்கு அவனுக்கு அதிகாரியாய் வருகிறான் டிவிஷன் என்ஜினியர் ஒருவன். காளியை ஒத்த வயதுடையவன்தான். கடமையில் கண்ணானவன். சட்ட திட்ட விதிகளின்படி ஒழுங்காக வேலை நடக்க வேண்டும் என்று எண்ணுபவன்.
சும்மா இருக்கையில் கிராமத்து மக்களை டிராலியில் அடுத்த ஊருக்கு கொண்டு சென்று விடும் உதவியை செய்பவன் காளி. 'சட்டப்படி இது கூடாது' என்று தடுக்கிறான் என்ஜினியர். 'இந்த உதவியை கூடவா செய்யக் கூடாது? என்று அவனிடம் வாதிடுகிறான் காளி. ஆரம்பத்திலேயே என்ஜினியருக்கும் காளிக்கும் ஒத்துப் போகவில்ல. காளி அதிகாரியை பகையாளியாய் பார்க்கத் தொடங்குகிறான். ஆனால் அதிகாரி காளியிடம் வஞ்சம் பாராட்டவில்லை. வேலை விஷயங்களில் மட்டுமே அவனைக் கண்டிக்க்றான்.
ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் அந்த கிராமத்துக்கு வரும் ஒரு மூதாட்டிக்கும், அவள் பெற்ற வயதுப் பெண் மங்காவிற்கும் வள்ளி அடைக்கலம் தந்து பக்கத்திலேயே வைத்துக் கொள்கிறாள். மங்கா தோற்றத்தில்தான் கன்னியே தவிர ஆண்பிள்ளைத்தனமாக ஊர் சுற்றித் திரிபவள். பயங்கர சாப்பாட்டுப் பிரியை. அவளுடைய வயதான தாயாருக்கு வேலையும் வாங்கிக் கொடுக்கிறான் காளி தன் தங்கையின் வேண்டுகோளின்படி.
மங்காவின் விளையாட்டுத்தனத்தால் காளி ஒரு நாள் வேலை பார்க்க முடியாமல் போக, அவன் மேல் ஆக்ஷன் எடுக்கிறான் அந்த என்ஜினியர். 10 நாட்கள் வேலையில் இருந்து அவனை சஸ்பெண்ட் செய்கிறான். தன் மேல் அதிகாரி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான் என்று காளி கறுவுகிறான். ஊர் அவமானப்படுத்துமே என்று ஆத்திரம் மேலிட குடித்துவிட்டு ரோட்டில் மயங்கிக் கிடக்க, கை மேல் ஏறும் லாரியால் இடது கையை இழக்கிறான். என்ஜினியர் காளியின் மேல் அனுதாபப்ப்பட்டு அவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்து கவனித்துக் கொள்கிறான்.
அண்ணனை கவனித்துக் கொண்டதால் வள்ளிக்கு என்ஜினியர் மேல் மதிப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. அது காதலா இல்லையா என்று கூட அவளுக்குத் தெரியாது. அதிகாரியும் வள்ளியின் குணம் அறிந்து அவளை நேசிக்கிறான்.
ஆனால் கை போனதால் காளிக்கு வேலையும் பறி போகிறது. தான் எவ்வளவோ முயன்றும் காளிக்கு வேலையைத் தர தன்னால் முடியவில்லை என்று காளியிடம் உண்மையாகவே வருத்தப்படுகிறான் என்ஜினியர். ஆனால் காளி அதை நம்பவில்லை. தன் வேலைக்கு உலை வைத்ததும் அதிகாரிதான் என்று அவன் மீது மேலும் வெறுப்பாகிறான் காளி பழைய தன்னுடைய பகை தீக்கு மண்ணெண்ணெய் ஊற்றியபடியே.
கைகளை இழந்த அண்ணன் காளிக்கு ஊர் சுற்றி மங்காவைத் திருமணம் செய்து வைக்கிறாள் வள்ளி. முதலில் மறுத்த காளி முடிவில் மனம் ஒப்புகிறான். தனக்கு சோறு போட்டு ஆதரித்த வள்ளியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நன்றி உணர்வாலும், காளியை முழுதும் புரிந்தவள் ஆதலாலும் மங்காவும் அவனை மகிழ்ச்சியுடன் அவனை மணக்க சம்மதிக்கிறாள். திருமணமும் இனிதே நடந்தேறுகிறது.
திருமணத்திற்கு வரும் என்ஜினியரரை வரவேற்காமல் கண்டும் காணாமல் இருக்கிறான் காளி. தன்னுடைய இந்த நிலைமைக்கு அவன்தானே காரணம் என்று உள்ளூற பொருமிக் கொண்டிருக்கிறான் காளி. ஆனால் மங்காவும் வள்ளியும் அவனைப் புரிந்து கொண்டு வரவேற்கிறார்கள்.
வேலை இல்லாமல் கஷ்டத்தை நோக்கி குடும்பம் நகரத் தொடங்குவதால் அண்ணனுக்குத் தெரியாமல் கூலி வேலைக்குப் போகத் தொடங்குகிறாள் வள்ளி அண்ணியான மங்காவின் சொல்லையும் மீறி. இது தெரிந்த காளி மிகுந்த கோபமுற்று இருவரையும் கடிந்து கொள்கிறான். தான் இருக்கும் வரை யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்று கட்டளை இடுகிறான்.
பிழைக்க ஒரு கடை வைக்க எண்ணி பெட்டிக்கடை வைத்திருக்கும் முருகேசனிடம் பணம் கேட்கிறான் காளி. முருகேசனும் காளியின் மேல் உள்ள பிரியத்தால் பணத்தைத் தந்து உதவுகிறான். ஆனால் முருகேசன் தெரிந்தும் தெரியாமலும் ஒருத்தியை அந்த ஊரில் வைப்பாட்டியாக வைத்திருக்கிறான்.
இதற்கிடையில் அதிகாரி வள்ளியைச் சந்தித்து தான் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுகிறான். காளியிடமே வந்து அவளைப் பெண் கேட்கப் போவதாகவும் கூறுகிறான். வள்ளி மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். அவளுக்கும் அவனைப் பிடித்தமே.
என்ஜினியர் காளியின் வீட்டிற்கு வந்து வள்ளியைப் பெண் கேட்கிறான். இதை சற்றும் எதிர்பாராத காளி சமாளித்துக் கொண்டு முடிவை அடுத்த நாள் முருகேசன் கடை அருகே சொல்வதாகக் கூறி என்ஜினியரை அனுப்புகிறான்.
அடுத்த நாள் என்ஜினியர் ஆவலுடன் வந்து காளி என்ன சொல்லப் போகிறான் என்று அமர்ந்திருக்க, காளி மிகச் சரியான சந்தர்ப்பமாக அதிகாரியைப் பழி வாங்க அதைப் பயன்படுத்திக் கொள்கிறான். யாருமே சற்றும் எதிர்பாராவகையில் தனக்கு கடை வைக்க பணம் கொடுத்து உதவிய முருகேசனை வள்ளிக்கு மாப்பிள்ளையாக அங்கேயே அறிவித்து அதிகாரி மேல் தனக்கிருந்த ஒட்டு மொத்த பகை உணர்வையும் ஒரு வினாடியில் தீர்த்துக் கொள்கிறான். முருகேசனை பரிசம் போடவும் அழைக்கிறான்.
ஆனால் காளியின் இந்த முடிவு அவனைச் சுற்றி சுற்றி வரும் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட பிடிக்கவில்லை. மங்காவுக்கு அறவே பிடிக்கவில்லை. வள்ளிக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அண்ணனின் அன்பு என்ற வளைக்குள் மாட்டிய முயலாய் பேச இயலாமல் துடிக்கிறாள்
பரிசம் போட வரும் முருகேசனை நிச்சயம் பண்ண விடாமால் தடுக்கிறாள் மங்கா. இதனால் பெரும் கோபமாகும் காளி மங்காவை அடித்து விடுகிறான். இதைத் தடுக்கும் வள்ளி அண்ணியை மறுத்துப் பேசி 'தன் அண்ணன் இஷ்ட்டப்படியே திருமணம் நடக்கட்டும்' என்று மனத்தைக் கல்லாக்கிக் கூறி விடுகிறாள்.
திருமணம் நடக்கத் தயாரான நிலையும் வந்து விடுகிறது. யாருமே திருமணத்தில் இஷ்டம் இல்லாமல் 'தேமே' என்று இருக்கின்றனர். காளி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் ஒற்றை ஆளாக நின்று கல்யாண வேலைகளை கவனிக்கிறான்.
இதற்கிடையில் நிலைமை விபரீதமாவதைக் கண்டு மங்கா என்ஜினியரைச் சந்திக்கிறாள். வள்ளியைக் கூட்டிக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சுகிறாள். "அது படித்தவர்கள் செய்யும் வேலை அல்ல... மேலும் பரிசம் போட்டு கல்யாணத்துக்கும் நாள் குறித்த நிலையில் தான் ஒன்றும் செய்ய இயலாது" என்று என்ஜினியர் வேதனையுடன் மறுக்கிறான். வள்ளி மனதில் ஆசையைத் தூண்டிவிட்டு இப்படி பேசுவது அழகல்ல என்று மங்கா அவனைக் கடிந்து விட்டு வந்து விடுகிறாள். அத்தோடு தன்னால் முடிந்த காரியமாய் ஊர்ப் பெண்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு முருகேசன் கடைக்குப் போய் 'பெண் பொறுக்கியான நீ வள்ளியைத் திருமணம் செய்யக் கூடாது' என்று மிரட்டி விட்டும் வந்து விடுகிறாள்.
இதற்கிடையில் முருகேசனின் வைப்பாட்டி முருகேசன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டால் பின் தன் கதி அதோ கதிதான் என்று எண்ணி ஒரு சதிவலை பின்னுகிறாள். வள்ளி அதிகாரியிடம் பழகி கர்ப்பமுற்று இருப்பதாகவும், 'அவளை உன் தலையில் கட்டப் பார்க்கிறன் காளி' என்று முருகேசனிடம் சுயநலப் பேயாக தூபம் போடுகிறாள் அவள். இதை நம்பும் முருகேசன் இந்த நிலையில் கல்யாணம் வேண்டாம் என்றால் காளி தன்னைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சுகிறான். வைப்பாட்டியோ அவனிடம் ஊரை விட்டு இருவரும் ஓடி விடலாம் என்று சொல்கிறாள்.
இதற்கிடையில் மங்கா திருமணம் பிடிக்காமல் அழும் வள்ளியிடம் பேசுகிறாள். 'உன் அண்ணனை விட்டு என்னை நம்பி வரமுடியுமா? என்று கேட்கிறாள். ஆனால் வள்ளி எதுவும் பேசாமல் இருக்கிறாள். மங்கா 'நான் உயிரை விட்டாவது இந்தக் கல்யாணத்தைத் தடுப்பேன்' என்று கூறுகிறாள்.
கல்யாண வேலைக்காக தனியாக அலையும் காளி முருகேசனை சந்தித்து 'உதவி செய்யக் கூடாதா? என்று கேட்கிறான். ஆனால் முருகேசன் 'என்ஜினியரிடம் கெட்டுப் போன உன் தங்கை வள்ளியை என் தலையில் கட்டப் பார்க்கிறாயே.. கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல எவ்வளவு நாழியாகும்? என்று கேட்டு விடுகிறான் துணிவோடு. இதைக் கேட்ட காளி கொதித்துப் போய் முருகேசனை புரட்டி எடுத்து விட்டு 'மரியாதையாக தாலி கட்ட வந்து சேர்... இல்லையென்றால் உன்னைக் கொன்று விடுவேன்' என்று மிரட்டிவிட்டுப் போய் விடுகிறான்.
அடுத்த நாள் கல்யாணம். வேலை செய்த அலுப்பில் தூங்கிவிட்ட காளி எழுந்து திகைக்கிறான். கல்யாண வீட்டில் யாருமே இல்லை. தங்கையைத் தேடி ஓடுகிறான். வழயில் முருகேசன் கடை. முருகேசன் நக்கலாக அமர்ந்திருக்கிறான். ஒன்றுமே புரியாமல் நிற்கும் காளியிடம் வள்ளிக்கு அதிகாரியுடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், எல்லோரும் அங்கு போய் இருப்பதாகவும் கூறுகிறான் முருகேசன் .
பதறியபடி ஓடுகிறான் காளி. அங்கே அவன் கண்ட காட்சி. அவன் கண்களை அவனால் நம்ப முடிகிறதா? மணக்கோலத்தில் அதிகாரியும், வள்ளியும் வர, உடன் மங்காவும், காளியின் உற்ற நண்பர்களும். வழயில் ஒற்றைக் கையுடன் ஒத்தையாக நிற்கும் காளியை மங்காவும், அவன் நண்பர்களும் வள்ளி நன்றக இருக்க வேண்டும் என்றுதான் இந்த முடிவெடுத்ததாகக் கூறி அவனையும் திருமணத்திற்கு அழைக்கிறார்கள். எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறான் காளி. எல்லாமே எல்லை மீறி விட்டது.
தன்னைக் கடந்து போக இருக்கும் தன் அன்புத் தங்கையிடம் மட்டும் நெகிழ்ச்சியுடன் பேசுகிறான் இன்னமும் தன் தன்மானத்தை விடாமல். அவள் மீது தான் கொட்டிய அன்பை அவளுக்கு ஞாபகப் படுத்துகிறான். தன்னை விட்டு அவள் மீறிப் போய் அந்தத் திருமணத்தை செய்து கொள்ளக் கூடாது என்று முடிவாகத் தடுத்து வள்ளியின் கையைப் பிடிக்கிறான். ஆனால் வள்ளி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறாள். அண்ணன் பாசமா அல்லது அமையவிருக்கும் நல்ல வாழ்வா...(கல்நாயக், பயப்பட வேண்டாம். தொங்கலில் விடாமல் முடித்தே விடுகிறேன்.). குழம்புகிறாள் வள்ளி. நம்பிக்கையோடு அவளைப் பார்க்கிறான் அண்ணன். ஆனால் வள்ளி ஒரு முடிவு எடுக்கிறாள். தன் கரத்தைப் பற்றியுள்ள தன் அண்ணனின் கரத்தை விடுவிக்கிறாள். இருந்த ஒரு நம்பிக்கையும் பறி போனது காளிக்கு. அழுதபடி அப்படியே நிலை குலைந்து சிலையாய் செய்வதறியாது நிற்கிறான் காளி. தங்கை தன்னை மீறிப் போகிறாள். அதோ போய்க் கொண்டிருக்கிறாள். அனைவரும் அவனைக் கடந்து செற்று விட்டனர். அவனுக்கும் அவர்களுக்கும் இல்லை இல்லை... அவன் தங்கைக்கும் உள்ள தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்கள் கலங்க வள்ளி திரும்பித் திரும்பி அண்ணனைப் பார்த்தபடி செல்கிறாள். அண்ணன் சிலையாக அந்த சிறு நதியோடும் மலைச் சரிவில் தனி ஆளாக யார் ஆதரவும் இல்லாமல் நிற்கிறான்.
நடந்து கொண்டே சென்றவள் அண்ணனிடம் திரும்பி ஓடியே வந்துவிடுகிறாள். அவனைக் கட்டிப் பிடித்து சிறு குழந்தையாய் தேம்பித் தேம்பி அழுகிறாள். 'யார் என்ன சொன்னாலும் நீ தான் என் தெய்வம்' என்று சொல்லாமல் சொல்கிறாள். 'உன் பேச்சை மீறி எதுவும் என்னால் செய்ய முடியாது' என்றும் அந்த மென்மலர் முள்ளான அண்ணன் மேல் பாசக் கொடியாய் படர்கிறாள்.
தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில் காளி தன் தங்கை தன்னை வந்து சேர்ந்ததுமே பழைய வீரவேசக் காளியாய் புத்துணர்வு புத்துயிர் கொண்டு சிலிர்க்கிறான். தன் தங்கையை அணைத்துக் கொண்டு கர்வத்துடன் பெருமிதப்பட்டு 'இப்ப என்னடா செய்வீங்க?' என்று எல்லோரையும் பார்த்து கொக்கரிக்கிறான். 'அவள் என் தங்கைடா... ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிறவளாடா அவ?' என்று எகத்தாளமாய்க் எல்லோரையும் கேள்வி கேட்கிறான். தங்கையுடன் இஞ்சினீயரிடம் வருகிறான்.
'எனக்கு உங்களைப் பிடிக்கல சார்' என்று முகதிலடித்தாற் போலக் கூறியவன் அடுத்த கணம் 'என் தங்கச்சிக்கு உங்களைப் பிடிச்சிருக்கு...ஆனா உங்க எல்லாரையும் விட நான் தான் முக்கியம்னு காண்பிச்சுட்டாளே... அந்த கர்வத்துலேயும், திமிரிலேயும் இப்ப ஒன்னு செய்யப் போறேன்' என்று தங்கைக்கு தன் மேல் இருக்கும் தரம் குறையா பாசத்தை மனத்தில் நிறுத்தி, தன் அன்புத் தங்கையை தனக்குப் பிடிக்காத இஞ்சினீயருக்கு மனமுவந்து தாரை வார்த்துக் கொடுக்கிறான் அனைவரும் ஆச்சரியப்படும்படி.
அவன் என்றுமே தங்கை என்ற ரோஜா மீது முரட்டுப் பாசம் கொண்ட முள் தான்.
இசை பின்னால் தொடரும்.
Last edited by vasudevan31355; 20th December 2014 at 03:03 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
20th December 2014, 12:12 PM
#2266
Senior Member
Diamond Hubber
முள்ளும் மலரும் தொடர்ச்சி...
ரஜினி பிறந்த மாத சிறப்புப் பதிவு
அண்ணன் 'காளி'யாக ரஜினி.
அளந்து எடுத்தாற் போன்று அண்ணன் ரோல். முரட்டுக் காளி. அனுபவித்துப் பண்ணியிருப்பார் ரஜினி. அந்தக் கால ரஜினி. வேகத்தோடு விவேகத்தையும் கொண்ட ரஜினி. காளி பாத்திரம் அவருக்காகவே பிரத்தியோகமாக வார்த்தெடுக்கப் பட்டதோ என்பது போல இருக்கும். தங்கை மேல் பாசம், கனிவு, அதே சமயம் கோபம் என்று அளந்து வைத்த நடிப்பு. "பயபுள்ள... பயபுள்ள' என்று 'துருதுரு'வென்று கிராம மக்களிடம் பரிவு காட்டுவது அவரது தனித்தன்மை. உள்ளங்கையில் அடிக்கடி புகையிலையை வைத்து நசுக்கி வாயில் போட்டு மெல்வது என்று வேறு மனிதர் கிளப்புவார்.
ஒரு முடியாத வேலைக்காரனை காருக்காக இம்சைபடுத்தும் சேஷாத்திரியின் கொடுமையைக் காண சகிக்க முடியாமல் அந்தக் கார் அருகே வந்து தனக்கே உரித்தான ஸ்டைலில் காலருகே கிடக்கும் கல்லை காலால் விருட்டென்று தூக்கிப் போட்டுப் பிடித்து யாரும் பார்க்காத சமயம் காரின் லைட்டை உடைக்கும் போது ஆரம்பிக்கும் காளியின் ராஜாங்கம் படம் வணக்கம் போடும் வரை சும்மா வரிந்து கட்டுகிறது. அந்த ஒரு காட்சியிலேயே ரஜினி கேரக்டர் என்னவென்று ஈஸியாக நமக்குப் புரிந்து விடுகிறது.
அனாதைகளாய் வந்த 'படாபட்' குடும்பத்துக்காக ஷோபா ரஜினியிடம் பரிந்து பேசும் போது ஷோபாவிடம் செல்லக் கோபமாக பேசும் ரஜினி அழகாக நம்மைக் கவர்வார். படாபட்டிற்கு தங்க 'பக்கத்தில் இருக்கும் காலி வீட்டைக் கொடுக்கலாமா?' என்று ஷோபா ரஜினியைத் தயங்கியபடி 'அண்ணே!' எனக் கேட்கத் தயாராக, ரஜினி 'என்ன?' என்று கேட்டு விட்டு, கேட்க முடியாமல் தயங்கும் ஷோபாவை 'என்னடா? என்று செல்லமாக கேட்பது அருமை. தங்கை மேல் வைத்துள்ள பாசத்தை அந்த வார்த்தையில் அழகாகப் பிரதிபலிப்பார் ரஜினி.
ஓடையில் படகில் பயணம் செய்யும் போது பக்கத்தில் படகில் வரும் சாமிக்கண்ணுவின் மனைவியை (ஒரு மாதிரி மனைவி) ரஜினி கலாய்ப்பது ரசனையான காட்சி. "நீங்கள்லாம் வந்து என்கிட்டே மாட்டி இருக்கணும்டி...தொலைச்சிருப்பேன்" என்று ஆண்பிள்ளைக்கே உரிய அகம்பாவ லட்சணத்துடன் வெடிப்பது ரசமான காட்சி.ஃ
சரத்பாபுதான் தனக்கு வந்திருக்கும் உயர் அதிகாரி என்று தெரியாமல் முதலில் அலட்சியப்படுத்துவதும், பின் அதிகாரி என்று தெரிந்ததும் சற்றே பணிவும், அடக்கமும் காட்டி அதே சமயம் கொஞ்சமும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் பேசும் கட்டங்கள் கற்கண்டு. டிராலியை ஊர் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப் போக, சரத்பாபு அதைக் கண்டித்ததும் ஊர்மக்களை டிராலியிலிருந்து கடுப்பாக இறங்கச் சொல்வதும், பின் டிராலியில் சரத்பாபுவை ஏற்றிவிட்டு, நடுவழியில் கீழே சரிவில் அதை நிற்குமாறு வேண்டுமென்றே என்ஜினை ஆஃப் செய்துவிட்டு, 'அப்படியே நடந்து போங்க' மேலே நின்றபடி கூவி பழி வாங்குவதும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு காளி ஒளிந்திருக்கிறான் என்று உணர்த்தும் அருமையான தத்ரூபக் காட்சி. காரின் லைட்டை உடைத்த ரஜினியின் அடுத்த அழகான பழிவாங்கல்.
தன்னைப்பற்றி மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்த இன்னொரு தொழிலாளியை ரஜினி ஊரார் மத்தியில் புரட்டி எடுக்கும் காட்சி அட்டகாசம். ரியலிசம். 'டிஷ்யூம்' சப்தங்கள் இல்லாமல் கிராம மக்களின் களேபரக் கூக்குரல்களோடு இந்தக் காட்சி மிக இயல்பாக படமாக்கப் பட்டிருக்கும். தன்னைத் தடுக்கும் அத்தனை பேரையும் மீறி கைலியோடு ரஜனியின் ஆக்ரோஷமான உதைகள் நிஜ உதைகளாகவே நம் கண்களுக்குப் புலப்படும். அவிழ்ந்த கைலியைக் கட்டியவாறு திரும்பி திரும்பி ரஜினி முறைத்துக் கொண்டு வருவதும் வெகு இயல்பு.
அடித்துவிட்டு சக தோழர்களிடம் புலம்புவதும் டாப் ரகமே. ("இவுங்க ஆத்தாகிட்ட போய் சோறா கேட்டேன்") சர்த்பாபுவுக்கு 'லா பாய்ன்ட்' என்று பெயர் வைத்துக் கூப்பிடுவது செம கலாட்டா.
தோழர்களுடன் தண்ணி அடித்துவிட்டு, வெற்றிலை புகையிலை போட்டுக் கொண்டு, ரோட்டோர டீக்கடை பெஞ்சில் அமர்ந்து ரஜினி செய்யும் அலம்பல்கள் அமர்க்களம். காஞ்சி ரங்கமணி கோஷ்டி சரத்பாபு தலைமை ஏற்று நடத்தும் ஒரு திருமணத்திற்கு நாதஸ்வரம் மேளம் வாசிக்கச் செல்ல, போகும் வழியில் ரஜினி கண்ணில் மாட்டிவிட, ரஜினி அவர்களை அழைத்து அங்கேயே சிறிது நேரம் மேளதாளம் வாசிக்கச் சொல்லி மிரட்ட, அந்த நாதஸ்வர கோஷ்டியும் ரஜினிக்கு பயந்து வாசிக்க, ரஜினி அந்த மேளதாள சத்தத்திற்குத் தக்கபடி நக்கலாக லயித்து ஆடுவது ரொம்ப ஜோர். ரொம்ப இயற்கையான காட்சி. '16 வயதினிலே' அலம்பல் ரஜினியை மீண்டும் இந்தக் காட்சியில் காண முடியும்.
வீட்டில் ஷேவிங் செய்து கொண்டிருக்கும் ரஜினியை எஞ்சினியர் கையோடு கூப்பிட்டு வரச் சொன்னதாய் வந்த ஆள் சொல்ல, சரத்பாபுவைப் பார்க்க அப்படியே பாதி ஷேவ் செய்த முகத்துடன் கைலியோடு ரஜினி வந்து நிற்பது அந்த பாத்திரத்தின் தன்மையை மேலும் நம்முள் ஆழப்படுத்துகிறது. சரத்பாபு வார்ன் செய்ததும் தாங்க மாறாமல் டிராலியில் தனியாக ஆத்திரத்துடன் அமர்ந்து, சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடச் சொல்லும் தங்கை ஷோபாவையும் ஆத்திரத்தில் திட்டி, சாப்பாட்டை கோபத்தில் தட்டி விட்டு, பின் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து தங்கையிடம் 'அடித்து விட்டேனே' என்று கலங்குமிடமும் அருமை. ("எந்தெந்த நாயெல்லாமோ என்னைத் திட்டுது") அருமையான நடிப்பை சிந்தும் இந்த காளி ரஜினியை திரும்ப பார்க்க மாட்டோமா என்று ஏக்கம் நெஞ்சில் நிறைகிறது.
கண்டதையும் தின்னபடி ஊர் சுற்றியபடி வரும் 'படாபட்'டை ரஜினி கடித்துக் குதறுவதும் நன்றக இருக்கும்.
டிராலியை ஒரு சமயம் சம்பந்தமே இல்லாத சாமிக்கண்ணு ஆபரேட் செய்துவிட, அதைக் கண்டு பிடித்துவிட்ட சரத் ரஜினியைத் தேட ரஜனி 'படாபட்' செய்த கலாட்டாவில் அங்கில்லாமல் போய் பின்பு லேட்டாய் வர, சரத்பாபு ரஜினியைக் 'காய் காய்' என்று காய்ந்துவிட, ரஜினி சரத் முன்னால் இடுப்பை ஒடித்தவாறு கூனிக் குறுகி நிற்பது அருமை என்றால் வீட்டில் தங்கையுடனும், படாபட் உடனும் முதலில் கோபமாகக் கத்திவிட்டு பின் அதை சூழ்நிலைக்கேற்ப சிரிப்பாய் மாற்றி ரசித்து சிரிப்பது இன்னும் அருமை.
ரஜினி வேலையில் அலட்சியமாய் இருந்து விட்டதால் சரத் 10 நாட்கள் அவருக்கு தற்காலிக வேலை நீக்கம் செய்து கடிதம் அனுப்ப ரஜினி ஆத்திரத்துடனும், கோபத்துடனும், இயலாமையுடனும் சரத்திடம் ஓடி வந்து விளக்கம் கேட்கும் சீன் வெகு அற்புதம். "ஆரம்பத்திலிருந்தே பார்க்கிறேன். "உங்களுக்கு என்னைப் பிடிக்கல... ஏன் சார்?" என்று சரத்திடம் தைரியமாக நெஞ்சடைக்கப் பொங்கும் காட்சியில் ரஜினி நடிப்பில் அசத்துவார். ஒரு பாதிக்கப்பட்ட அவரது எண்ணப்படி வஞ்சிக்கப்பட்ட ஒரு தொழிலாளியின் குமுறல்களை வெகு அற்புதமாய் சரத்திடம் காட்டுவார் ரஜினி. ("வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம்... கால் பட்டாலும் குத்தம். சார்! இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க நீங்க') லெட்டரைக் காட்டி நியாயம் கேட்டுக் குமுறுவது ஜோர். சரத் ஒத்துக் கொள்ளாத நிலையில் ஊர் தன்னை அவமானப்படுத்துமே என்று கோபமாக் கூறி விட்டு 'இதுக்கு என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியும் சார்' என்று கடிதத்தை சுக்கு நூறாக கிழித்துவிட்டு கிளம்பும் இடமும் சூப்பர்.
பின் ஆத்திரத்தில் தண்ணியடித்துவிட்டு ("ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்") விறைப்பாக பாட்டுப் பாடி, (முரட்டு ஆண்மைக் கம்பீரம் 100%) ஆட்டம் ஆடி குடி போதையில் ரோட்டில் விழுநது லாரியில் ஒரு கையை கொடுத்து பரிதாபமாக இழந்து தங்கையிடம் கையில்லாமல் நிற்பதும், அண்ணனுக்கு ஒரு கை போய் விட்டது என்று தெரிந்து தங்கை உடைந்து அழும் போது 'ஒன்னுமில்லடா' என்று நெஞ்சு நிறைய சோகத்தைத் தேக்கி தேற்றுவதும் அனுதாபங்களை அள்ளும் அருமை நடிப்புதான்.
கை போனதால் வேலை போய் விட்டது என்று ரஜினியிடம் சரத் கவலையுடன் சொல்ல, அப்போதும் சரத்தை நம்பாமல் வார்த்தைகளால் ரஜினி அவரைக் குத்துவது ஷார்ப். "ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட கூட காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பையன் சார் அவன்"...என்று தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசி 'வேலை இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம்?' என ஒரு கணம் தடுமாறி, விட்டத்தைப் பார்த்து கண்கள் கலங்கிய நிலையில் வெதும்புவதில் ரஜினி கொடி கட்டுகிறார். படத்திலேயே இந்த இடத்தில் டாப் கியரில் எகிறுவார் ரஜினி. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த அற்புதமான நடிப்பு.
'படாபட்'டை திருமணம் செய்து முதலிரவில் அவர் பாடும் 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' பாட்டைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டு இம்சை அடைவது ஜாலி. அது போல குடும்பத்தை ஓட்ட தங்கை தனக்குத் தெரியாமல் கூலி வேலைக்குப் போய்விட்டாள் என்று தெரிந்து 'படாபட்'டிடம் முதலில் குமுறுவது செம டாப். "ஏண்டி! எனக்குத் தெரியாம அவளை வேலைக்குப் போக விட்டிருக்கியே...உன்னை'' என்று நிறுத்தி 'வெட்ட வேண்டாம்?'என்று ஆத்திர சிரிப்பை உதிர்த்து 'படாபட்'டை காய்வாரே! அப்படியே நம் திலகத்தை ஞாபகப்படுத்துவார். அதே போல் தங்கையிடமும். "10 வயசு பையனா இருக்கும் போதே உங்களை கஷ்ட்டப்பட வைக்கல... நல்லா சாப்ட்டுட்டு வீட்டோட இருந்தாப் போதும்" என்று மனம் புழுங்கி வேதனைப்படுவதும் அருமை.
சரத் பெண் கேட்டு ரஜினி வீட்டுக்கு வரும் ஒரு அருமையான காட்சி. நடிப்பை ரொம்ப என்ஜாய் செய்யலாம். வீட்டுக்கு வெளியில் தயங்கி நிற்கும் சரத்தை பழைய பகையை மனதில் வைத்து கூப்பிடாமல் நிற்பதும், பின் மனைவி வற்புறுத்தியவுடன் வேண்டாவெறுப்பாக பட்டும் படாமல் 'வாங்க' என்று எங்கேயோ பார்த்து சொல்வதும் இயல்பு. உள்ளே தரையில் பாயில் அமர்ந்து சரத்தைப் பார்க்காமல் முகத்தை படு இறுக்கமாக வைத்து "என்ன கேட்கப் போகிறானோ?' என்ற ரீதியில் ரஜினி உட்கார்ந்திருக்கும் கம்பீரம் ரகளை. சரத் பூடகமாக மேட்டரை ஆரம்பித்ததும் "என்ன சார்! என் வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்துகிட்டு என்கிட்டேயே லா-பாயிண்ட் பேசறீங்க!" என்று வாருவது டக்கர். சரத் ஷோபாவைப் பெண் கேட்டதும் சற்று அதிர்ந்து பின் சுதாரித்து 'இப்படி திடீர்னு வந்து பொண்ணு கேக்கறீங்களே! அது எப்படி? இந்த காதல் கீதல்ம்பாங்களே! அப்படியெல்லாம் ஏதாவது?".... என்று பல்லைக் கடித்தவாறு அதே சமயம் நிறுத்தி ஆழமாக நிதானத்துடன் கேட்பது படு தீர்க்கம்.
அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக மூர்த்தியை மாப்பிள்ளை ஆக்கி சரத்தை வஞ்சம் தீர்ப்பதும், மூர்த்தி பின்னால் மனம் மாறி தன் தங்கையின் மானத்தைப் பற்றி தப்பாய் பேசி விட்டதைப் பொறுக்க முடியாமல் அவரைப் புரட்டி எடுப்பதும், இறுதியில் தங்கை தன்னை விட்டுக் கிளம்பிவிட்டாள் என்று பதைபதைக்க ஓடி வந்து கல்யாணம் பண்ணிக் கொள்ள அனைவருடனும் செல்லும் தங்கையை நிறுத்தி, சுற்றி நிற்கும் மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட எவரைப் பற்றியும் துளியும் கவலை கொள்ளாமல் தங்கையின் முடிவு ஒன்றையே பிரதானமாக எதிர்பார்த்து, அவள் மீது தனக்கிருக்கும் பாசத்தை சுட்டிக் காட்டி, அவளைப் போகக் கூடாது என்று தடுத்து, முடியாமல் கையை இழந்து உயிருக்கும் மேலான தங்கையை இழக்கப் போகிறோமோ என்ற பயத்தில் அழுதபடி ஊமையாய் நிறப்து ஏ.ஒன் . தங்கை தன் சொல்லையும் மீறி தாண்டி அடிகள் எடுத்து வைக்க ஆரம்பித்தவுடன் செய்வதறியாது ஒத்தையாக தன்னந்தனி ஆளாக வெறித்த பார்வையுடன் சிலை போல நிற்பது பரிதாபம். பின் மனம் மாறி எல்லோரையும் விட்டு தங்கை ஓடி வந்து தன்னைச் சேர்ந்தவுடன் நொடியில் மாறிக் காட்டும் பழைய காளியின் வேகம், திமிர், தெனாவட்டு, அனைவரிடமும் எகத்தாளப் பேச்சு என்று ரஜினி வெளுத்து வாங்கி விடுவார். ரோலும் அப்படிப்பட்ட ரோல்.
ரஜினி...ரஜினி... ரஜினி... படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம்தான். ரஜினியின் மிகச் சிறந்த 5 படங்களை எடுத்துக் கொண்டால் என்னுடைய முதல் சாய்ஸ் 'முள்ளும் மலரு'க்கும் தான்.
இப்பேற்பட்ட நடிகர் ஆக்ஷன், காமெடி என்ற குறுகிய இமேஜ் வளையத்துக்குள் சூழ்நிலையால் தன்னைப் புகுத்திக் கொண்டு வசூல் என்ற அரக்கனின் பிடியில் மாட்டி பணத்தைக் கொட்டித் தரும் மெஷினாக மாறியது காலத்தின் கொடுமைதான். இது அவரும் உணர்ந்த்ததுதான். எவ்வளவுதான் பணம் ஈட்டினாலும் என்னதான் 'பாட்ஷா' வசூல் அள்ளினாலும், என்னதான் 'அண்ணாமலை' அமர்க்களம் பண்ணினாலும் இந்த ஒரு காளி என்ற முரட்டுப் பயலுக்கு ஈடு உண்டோ சொல்லுங்கள் சார்!
எனக்கு... எனக்கு மட்டுமல்ல...என்னைப் போன்ற நடிகர் திலகம் ரசிகர்கள் பலருக்கும் மிகப் பெரிய வருத்தம் ஒன்று உண்டு. இந்த 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி செய்த காளி ரோல் நடிகர் திலகத்திற்குக் கிடைக்கவில்லையே என்று இன்றுவரை ஆதங்கம் எங்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட ரோல் அது. அதை ரஜினி மிக அழகாக உள்வாங்கி, மிக அற்புதமாக அதை தன் அருமையான நடிப்பால் மெருகேற்றி காலாகாலத்துக்கும் மறக்க முடியாத 'காளி'யாக தமிழக மக்களின் உள்ளங்களில் உலா வருகிறார் இன்று வரை. நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான ரஜினி இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்தது மிகப் பொருத்தமே.
ரஜினி பிறந்த மாதமான இந்த டிசம்பரில் அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாகவும், மதுரகானத் திரியின் அன்பு உள்ளங்கள் சார்பாகவும் இந்த முள்ளும் மலரும் பதிவை அவருக்கு என் அன்புப் பரிசாக அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் ரஜினி!
இப்படத்தின் மற்றவர்களின் பங்கு விரைவில் தொடரும்.
Last edited by vasudevan31355; 20th December 2014 at 02:43 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
20th December 2014, 02:35 PM
#2267
அன்புள்ள வாசு,
சூப்பர்! காளி என்ற சூப்பர் கதாபாத்திரம் பற்றிய உங்கள் பதிவிற்கு இதைவிட சூப்பரான வேறு வார்த்தை தெரியவில்லை.
இந்த கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் என்னும் உங்கள் எண்ணம் பற்றி படித்தபோது 1978 ஆகஸ்ட் 15 அன்று மதுரை அலங்காரில் காலைக் காட்சி ஓபனிங் ஷோ பார்த்தபோது நானும் என் நண்பனும் [இருவருமே நடிகர் திலகம் ரசிகர்கள்] என்ன பேசிக் கொண்டோமோ அதை அப்படியே நினைவுப்படுத்தியது.
வாழ்த்துகள் வாசு!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th December 2014, 03:59 PM
#2268
Senior Member
Senior Hubber
//என்னுடைய முதல் சாய்ஸ் 'முள்ளும் மலரு'க்கும் தான்.// எனக்கும்..
கலக்கல் கலர்ஃபுல் அலசல் வாசு சார்.. அதுவும் அந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இல் நடனம (டான்ஸ் மாஸ்டர் சுந்தரம்) ஒரு வித வெறுப்பான முகம் என கலக்கியிருப்பார் ரஜினி.. கெட்ட புள்ள சார் இந்தக் காளி... காளியா, வயசுப் பொண்ணுங்க கூட விளையாடிக்கிட்டே இருப்பான் (உடனே வயதான மூதாட்டிகளுடன் சிரித்துக் கொண்டே பேசும் காட்சி)..என் தங்கை நான் தான் முக்கியம்னு வந்துட்டா.அதனால நான் ஒண்ணு செய்ய ப் போறேன் என சஸ்பென்ஸ் பேச்சு..பின் சரத்துடன் இணைத்து விடுவது..
ஷோபா பற்றிச் சொல்லவேண்டியதில்லை..bhaaவங்கள் முகத்தில் குத்தகை எடுத்திருந்த சரஸ்வதிப் பெண் அவர்..அதனால் தான் சீக்கிரமேமேலே போய்விட்டார் போலும்.. சரத்திடம் மெல்லிய வெட்கம், அண்ணனிடம் ஃபடாபட்டைப் பற்றிச் சொல்லும் நைச்சியம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.. அடி பெண்ணே பொன்னூஞ்சலாடுது கறுப்பு இளமை பாடலும் அழகு..
ஃபடாபட்ம் சரி இணை என்றால் வெகு பொருத்தம்.. கொஞ்சம் வெளுப்பான நிறம்..வெள்ளை மனம் எல்லாம் சாப்பிடும் வயிறு என ஜொலிப்பார்.. என்னடா.. அவருக்குக் கையில்லைன்னா என்ன நானிருக்கேன் என மங்காவாய்ப் பொங்கி நீர் வாங்கிப் பானையை அடிக்கும் திறன்.. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - பாடல் எழுதியது ஒரு பாடலாசிரியர்.. காட்சிப் படுத்தவேண்டுமே..அதற்கு நடிக்க வேண்டுமே.. கடைசி வரியில் சூடாக இருக்கறச்சே சாப்பிட வாங்க எனச் சொல்லும் வெட்கத்துடன் கூடிய நளினம் (காளியின் பாய்ச்சல் வேறு..)
கொஞ்சம் பொங்கலுக்கு இடையில் கல்லாய் நிரடுவது வெ.ஆ. மூர்த்தி தான்..பட் வாட் டு டூ.. ஹிஸ் கேரக்டர் இஸ் லைக் தட் இன் த மூவி..
//அளந்து எடுத்தாற் போன்று அண்ணன் ரோல். முரட்டுக் காளி. அனுபவித்துப் பண்ணியிருப்பார் ரஜினி. அந்தக் கால ரஜினி.// வெகு உண்மை..ஏனெனில்
முந்தா நாள் தான் தியேட்டர் சென்று இரவுக்காட்சி லிங்கா பார்த்தேன்.ம்ம்..(முதன் முதலில் மஸ்கட்டில் நிறைய மால்கள், மற்றும் ஹிந்தி இங்க்லீஷ் மட்டும் போட்டுவரும் பல தியேட்டர்களில் லிங்கா ரிலீஸ்.. பதினொன்றாம் தேதியே..)
அலங்கார் தியேட்ட்ரில் முதலில் பார்த்தது பின் ரீரன் தேவியிலும் பார்த்திருக்கிறேன்.பின் இடைப்பட்ட வருடங்களில் குறைந்த பட்சம் இரண்டுமுறையாவது பார்த்திருப்பேன்..என்னை மிகவும்கவர்ந்தபடம்.. மிக மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் வாசு சார்.. தாங்க்ஸ் அண்ட் வாழ்த்துக்கள்..
Last edited by chinnakkannan; 20th December 2014 at 04:02 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th December 2014, 04:11 PM
#2269
Senior Member
Senior Hubber
//பாடல்: "அருணகிரணம் அணியும் உதயம்..."
திரைப்படம்: கிழக்குணரும் பக்ஷி (1991)
வரிகள்: கே. ஜெயகுமார்
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
ராகம்: லவங்கி //
நல்ல பாட்டு ராகதேவன்.. முழுக்கக் கேட்டேன்..லவங்கியில் தமிழ் ப்பாடல் ஏதும் உண்டா.. ந.பா.கொடுத்ததற்கு தாங்க்ஸ்..
-
20th December 2014, 04:18 PM
#2270
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
வார்த்தைகளே வரவில்லை தங்களைப் பாராட்ட...
முரளி சார் சொன்னது போல் சூப்பர்... இதைத் தான் மனம் உடனே சொல்லத் துடிக்கிறது.
ரஜினியின் முள்ளும் மலரும், தங்கள் எழுத்தால் கல்லும் கனியாகும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks