-
9th June 2015, 07:30 PM
#11
Junior Member
Seasoned Hubber

முடிசூடிய மன்னன்
எஸ்.வி. சார்,
நேற்று நீங்கள் 1980-ம் ஆண்டு தேர்தலில் மதுரை மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் தலைவர் வெற்றி பெற்றார் என்றும் மதுரை மக்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்த பதிவை சற்று முன்னர்தான் பார்த்தேன். இதையடுத்து, மதுரைக்கும் தலைவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து விட்ட சில சரித்திர நிகழ்வுகள் மனதில் தோன்றின. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் (அதற்கு முன் சில படங்கள் வெள்ளி விழா கண்டவை என்றாலும் அவற்றில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை) என்ற பெருமையை பெற்றது மதுரை வீரன். அந்தப் படத்தின் பெயரிலேயே மதுரை அமைந்திருப்பது சிறப்பு. பல ஊர்களில் மதுரை வீரன் 100 நாட்கள் ஓடினாலும் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது.
1958ம் ஆண்டு தமிழ் திரையுலகமே பெருமை கொள்ளத்தக்க நாடோடி மன்னனின் அசுர வெற்றி. கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்ததோடு அல்லாமல், படத்தை தயாரித்து இயக்கிய தலைவருக்கு பாராட்டு விழா நடந்த இடம் மதுரை. 16-10-1958ம் ஆண்டு 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியிலே மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்புகளுக்கும் இடையே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் தலைவர். விழா மேடையில் தலைவருக்கு தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. பலருக்கும் தெரிந்திருக்கும், 110 சவரனில் ஆனது அந்த தங்க வாள். இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ ரூ.22 லட்சம்.
மதுரையில் சினிப்ரியா தியேட்டர் திறக்கப்பட்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட படம் தலைவரின் உரிமைக்குரல். 200 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடி வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய படம். தலைவர் திரையுலகில் இருக்கும் வரை இந்த வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை.
தலைவரின் நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய இரண்டு படங்களும் 100 நாள் படங்கள் என்ற சிறப்பை (முறையே மீனாட்சி, நியூ சினிமா) கொடுத்தது மதுரை.
அதிமுகவை தொடங்கிய பின் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரை சென்ற தலைவரின் ரயில், மக்கள் ஆங்காங்கே அளித்த வரவேற்பால் 16 மணி நேரம் தாமதமானது வரலாற்றுச் சாதனை.
இன்றுவரை தொடரும் அதிமுகவின் வெற்றிக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திண்டுக்கல் மக்களவை தேர்தல் வெற்றி. அப்போது திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. எனவே, புரட்சித் தலைவர் தலைமையில் நம்பிக்கை வைத்து அதிமுகவின் முதல் எம்.பி.யை மக்கள் தேர்ந்தெடுத்த பெருமையும் மதுரைக்கே.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கூறிய மதுரை முத்துவை மன்னித்து ஏற்றுக் கொண்டார் தலைவர். அவரை மேயராக்கி சிறப்பித்தார் எதிரிகளையும் மன்னிக்கும் அந்த மனித தெய்வம். அதிமுகவுக்கு முதல் மேயரை கொடுத்த பெருமை மதுரை மண்ணுக்கே.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1980-ம் ஆண்டு தேர்தல் முடிந்த 6 மாதங்களில் (1981 ஜனவரியில்) உலகத் தமிழ் மாநாட்டை முதல்வராக இருந்த தலைவர் நடத்தினார்.
‘அதிமுக உடல் என்றால் எம்ஜிஆர் மன்றம் உயிர்’ என்று தலைவரே கூறியுள்ளார். அப்படி உயிரான எம்ஜிஆர் மன்றத்தின் மாநாடு ‘பார் சிறுத்ததோ படை பெருத்ததோ’ என்று பாரே வியக்கும் வகையில் 1986-ம் ஆண்டு நடந்த இடம் மதுரை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒன்று உண்டு. 1980-ம் ஆண்டு புரட்சித் தலைவரின் அரசு எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே (கோபிச்செட்டிபாளையம், சிவகாசி) பெற்றதால் இதோடு தலைவரின் அரசியல் வாழ்வு முடிந்தது என்று பத்திரிகைகள் ஆரூடம் கூறின. அப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளில், தான் போட்டியிடுவதற்காக தலைவர் தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு. அந்த அளவுக்கு மதுரை மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு வெற்றியை பரிசளித்ததன் மூலம் மக்களும் அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
இதில் ஒரு சிறப்பை கவனித்தீர்களா நண்பர்களே? தனது கணவன் பாண்டிய மன்னனால் அநியாயமாக கொல்லப்பட்டதற்காக கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை. அதனால்தானோ என்னவோ? தனது ஆட்சி ஜனநாயக படுகொலைக்கு பலியானதற்காக தலைவரும் மதுரையிலே நின்று நீதி கேட்டார்.
நேற்று கூட நான் குறிப்பிட்டதைப் போல, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் , ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’ என்று தலைவர் கேட்பாரே? அந்த நீதி கேட்ட கண்ணகி காவியத்தை கூறும் சிலப்பதிகார காதையை மனதில் கொண்டு, தலைவர் திட்டமிட்டே மதுரையில் நின்றாரா? எதேச்சையாக நடந்ததா? என்று தெரியவில்லை. அந்த தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், தலைவர் முதல்வர் ஆவதற்காக அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி அழகு பார்த்தது மதுரை.
அந்த வகையில், 80-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வீரனாக வெற்றி பெற்ற தலைவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராக முடிசூடி பதவியேற்று சரித்திரம் படைத்த நாள் இன்று .
இந்த நாளில் தலைவருக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆனந்த நினைவுகளை அசைபோட வைத்ததற்கு காரணமாக இருந்த எஸ்.வி.சாருக்கு நன்றி.
சொல்ல விட்டுவிட்டேன், 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, இழந்த ஆட்சியை மீட்டு தமிழகத்தை மீண்டும் ஆள வந்த தலைவர், கடைசியாக நடித்த திரைப்படம்... ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 9th June 2015 at 07:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th June 2015 07:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks