-
14th September 2015, 09:45 AM
#11
Senior Member
Seasoned Hubber
சரியாகச் சொன்னீர்கள் வாசு சார்.
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களின் பார்வையில் சிவந்த மண்ணைப் பற்றிய அணுகுமுறை வியப்பூட்டுகிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல சிவந்த மண் பெற்ற வெற்றி உலகளந்த ஒன்று. ஆனால் அதற்கு ஈடான வெற்றியை வட மாநிலங்களில் தர்த்தி திரைப்படமும் பெற்றது பலருக்குத் தெரியாத விஷயம். ஸ்க்ரீன் ஆங்கிலப்பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இடம் பெற்றவை தர்த்தி படத்தின் வெற்றியைப் பற்றிய விளம்பரங்கள். அது மட்டுமல்ல, தர்த்தியில் நடிகர் திலகத்தின் பாத்திரம் வட மாநிலங்களில் பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அது ஹிந்திப்படவுலகையும் விட்டு வைக்கவில்லை. தேஷ் ப்ரெமி என்கின்ற புதிய ஹிந்திப்படத்தில் நடிகர் திலகத்தை நடிக்க விரும்பிக் கேட்டு அவரும் கால்ஷீட் எப்போது தோதாக வாய்க்கிறதோ அப்போது தான் தர முடியும் என்று சொல்லி அதற்கும் தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டு (மன்மோகன் தேசாய் என நினைக்கிறேன்) விளம்பரமும் வெளிவந்தது. அதுவும் ஸ்க்ரீனில் நடுப்பக்கத்தில் இரண்டு பக்கத்திற்கு ஸ்ப்ரெட் செய்து வந்த விளம்பரத்தில் நடிகர் திலகத்தின் -ஒரு போர் வீரன் வேடம் என நினைவு - அருமையான ஸ்டில் இடம் பெற்றது.
வாசு சார் சொன்னது போல், அர்த்தமற்ற வகையில் செலவு செய்து பொருளாதாரத்தில் திட்டமிடல் இல்லாமல் படம் எடுத்ததும் ஸ்ரீதரின் கைங்கர்யத்தில் ஒன்று. அதுவும் அந்த நீர்ச்சுனை ஒரு முறை செட் போடப்பட்டது. சுற்றிப் போடப்ப்ட்ட தடுப்பு மண்சுவர் சரிந்து தண்ணீரெல்லாம் வீணாகி அதற்காக போடப்ப்ட்ட அந்த செட்டும் பாழாகி விட்டது. அதில் அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாய் நஷ்டம். மீண்டும் அதே செட்டைப் போட்டார்கள்.
இத்தனைக்கும் அப்போது ஸ்ரீதர் அவர்களின் தாயார் உடல் நலமின்றி இருந்த நேரம். நடிகர் திலகம் ஸ்ரீதரை அழைத்து, வெளிநாடு சென்று வரும் செலவே நிறைய ஆகும், முடிந்த வரையில் வெளிப்புறப்படப்பிடிப்பிலேயே படத்தை முடித்து விடு, திரும்பவும் செட் போட்டு மேலும் பணத்தை வீணாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். தயாரிப்பாளரின் பொருளாதார நிலைமை அறிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கி தன்னுடைய உழைப்பையும் அதற்கேற்ப சலிக்காமல் தந்த உத்தம புருஷர் நடிகர் திலகம்.
நடிகர் திலகத்தின் ஆலோசனையை ஏற்றிருந்தால் மேலும் செலவு செய்ததை தவிர்த்திருக்கலாம்.
ஆனால் இத்தனையும் மீறி ஸ்ரீதருக்கு எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அதிக அளவில் லாபத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த படம் சிவந்த மண்.
நடிகர் திலகம் திரியைப் பொறுத்த மட்டில் நம்முடைய நண்பர்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. அது மட்டுமின்றி இந்த வசூல் விவகாரங்களில் நான் ஈடுபடுவதும் இல்லை.
என்றாலும் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிப்படத்தால் பெரும் லாபம் ஈட்டிய ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் படத்தால் நஷ்டம் ஏற்பட்டு அதற்காக எம்.ஜி.ஆரிடம் சென்றார் என்பதை மனசாட்சியுள்ள எந்த சிவாஜி ரசிகனும் ஏற்கமாட்டான்.
குளோப் தியேட்டரில் வெள்ளி விழாவை மிக எளிதாக கடந்திருக்கக் கூடிய சிவந்தமண் படத்தை ஓட்டக்கூடாது என்று திரையரங்கை நிர்பந்தித்ததெல்லாம் அந்நாளைய வரலாறு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறை சொல்லவரவில்லை. ஆனால் அவர் தங்களிடம் இருக்கிறார் என்பதற்காக நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ, நல்ல வசூல் செய்தும் அவர் படத்தைத் தோல்வி என்று எந்த அளவிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் சார்ந்த இயக்கத்தினர் செய்தும் அதனையெல்லாம் சந்தித்து வெற்றி கொண்டு தான் இறந்தும் 14 ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைவன் இறவாப்புகழுடன் இருக்கிறார்.
நான் மீண்டும் மீண்டும் கலை மற்றும் அன்புமிக்க எம்.ஜி.ஆர். ரசிகர் நண்பர்களிடமும் நம்முடைய நடிகர் திலகம் ரசிக நண்பர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஒப்பீட்டை அறவே தவிருங்கள். நடிகர் திலகம் சாதனை படைத்தவையெல்லாம் யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இன்றில்லாவிட்டாலும் இன்னோர் நாள் நமக்கு ஆவணங்கள் கிடைக்காமல் போகாது. அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டு எதிர்காலத் தலைமுறைக்கு நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்வோம். ஒவ்வொரு ஆவணத்திற்கும் நேரம், உழைப்பு, காலம் இவையெல்லாம் பெருமளவில் செலவிட வேண்டும். இவற்றையெல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் நமக்களித்த பம்மலாரின் சேவையைப் பாராட்டாவிட்டாலும் மனம் வருத்தம் செய்து அனுப்பி விட்டோம். இனிமேலாவது இங்கு பங்கேற்கும் ஒரு சிவாஜி ரசிகனும் மனம் நோகாமல் தொடர்ந்து பங்காற்ற உறுதுணையும் ஆதரவும் ஊக்கமும் நீங்கள் ஒவ்வொருவரும் அளிப்பதே தாங்கள் நடிகர் திலக்ததின் மேல் வைத்துள்ள பக்தியின் உண்மையான பிரதிபலிப்பு.
சிவந்த மண்ணைப் பொறுத்த மட்டில் குளோப் திரையரங்கில் 84 பைசா, ரூ. 1.25, மற்றும் ரூ. 1.66 மூன்று வகுப்புகளும் கடைசி நாளன்று மாலை மற்றும் பகல் காட்சிகளில் நிறைவடைந்து வசூல் குறையாமல் வெற்றி நடை போட்டது. கடைசி நாளன்று ரூ.1.66 டிக்கெட்டில் வகுப்பு நிறைவு ஆடியன்ஸில் நானும் ஒருவன் என்கிற வகையில் இது மறுக்க முடியாத உண்மையாகக் கூறுகிறேன். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தைப் பற்றி இனிமேலும் யாருக்கும் சந்தேகம் வரத்தேவையில்லை.
என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.
Last edited by RAGHAVENDRA; 14th September 2015 at 09:59 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
14th September 2015 09:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks