-
26th February 2016, 07:56 PM
#11
சாரதா ஸ்பெஷல்
நாளை மறுநாள் மதுரையில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க இயக்குனர் சிவிஆர் அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தோம். மிகுந்த மகிழ்வோடு எங்களை வரவேற்ற அவர் பல விஷயங்களைப் பற்றி சுவையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
கலாட்டா கல்யாணம் முதல் வாழ்க்கை வரை நடிகர் திலகத்துடனான பயணத்தை அந்த குறுகிய நேர சந்திப்பிலும் அவர் பகிர்ந்துக் கொண்டதை சொல்ல வேண்டும்.
ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்தது பிறகு தனியாக வந்து அனுபவம் புதுமை செய்தது [அதில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பை மிகவும் சிலாகித்தார்] கலாட்டா கல்யாணம் படத்திற்கு தன்னை இயக்குனராக போட்டது இவை அனைத்தும் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயங்கள் என்றாலும் அவர் வாயாலே கேட்டது ஒரு தனி சுவை
ராகவேந்தர் சார் உடனே அவரது பேவரிட் படத்திற்கு தாவ அடுத்த சில பல நிமிடங்களுக்கு மதுவும் சுந்தரியும் பற்றிதான் பேச்சு. பெரும்பாலானோர் அந்த இடத்தில இருந்திருந்தால் கட்டம் போட்ட சட்டை பாடலை பற்றி பேசியிருப்பார்கள். நாம்தான் வித்தியாசமாயிற்றே! ஒயிட் அண்ட் ஒயிட் பாடல் பற்றி பேசினோம். பௌலிங் ஆக்க்ஷன், ஜெஜெ பக்கவாட்டில் நடனமாடி போக நேர்கோட்டில் நடிகர் திலகம் நடந்து வரும் ஷாட் பற்றியெல்லாம் பேசினோம். கலாட்டா கல்யாணம் படத்திற்கு போடப்பட்ட பாடலா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் வந்தது. வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்றும் அதை இந்த படத்திற்காக டெவலப் செய்தோம் என்றார். பிறகு நமது அடுத்த பேவரிட் பாடலான இசையரசியின் பாடலுக்கு டிஸ்கஷன் போனது. நான் எப்போதும் குறிப்பிடும் தேயிலை தோட்டத்தின் மேலிருந்து காமிரா கீழே வெகு தூரத்தில் இருக்கும் ஹேர் பின் வளைவில் பஸ் திரும்புவதை துல்லியமாக படம் பிடித்திருக்கும் தம்புவின் தொழில் நேர்த்தியை பற்றி பேசினோம்.
அடுத்து கோபாலின் பேவரிட் படமான பொன்னுஞ்சல். கதையின் அடிப்படை கான்செப்ட் பற்றி தனக்கு இருந்த தயக்கத்தையும் அதை நடிகர் திலகத்திடம் எடுத்துக் கூறியதையும் சொன்னார் சிவிஆர். ஆனால் தங்களது கிராமங்களில் இது போன்ற நடைமுறைகள் [யார் தாலிக்கு சொந்தகாரனோ அவனே அந்த தாலியை முடிந்துக் கொள்ளும் பெண்ணிற்கு கணவன்] இருந்ததை நடிகர் திலகம் சொன்னதையும் அதுவும் தவிர கதையாசிரியர் சக்தி கிருஷ்ணஸ்வாமி மேல் நடிகர் திலகத்திற்கு இருந்த பிரியமும்தான் அந்த கதையை எடுக்க காரணம் என்பதையும் குறிப்பிட்டார் சிவிஆர். ஆகாயப் பந்தலிலே பாடலின் இமாலய பாப்புலாரிட்டி பற்றி பேச்சு வந்தது அந்தளவிற்கு பாடல் பிரபலமாகி விட்ட பிறகு அந்த பாடலை எப்படி படமாக்கினால் மக்களுக்கு பிடிக்கும் என்பது எப்படி மலைப்பாக இருந்தது என்பதையும் சொன்னார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும், முத்து சரம் சூடி வரும் மற்றும் வருவான் மோகன ரூபன் பற்றியும் சிலாகித்து சொன்னவர் தன்னுடைய படங்களுக்கு எம்எஸ்வி கொடுத்த பாடல்கள் அனைத்தும் பிரமாதம் என்றார்.
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பற்றி பேச்சு வந்தது. கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி சொன்னார். இடையில் நில் கவனி காதலி பற்றி பேச்சு வந்தது. Under water படமாக்கம் பற்றி சொன்னார். கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு டப்பில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் அவர்களை காமிராவோடு உட்கார வைத்து படமாக்க முற்பட்டதையும் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கண்ணாடி விரிசல் விட்டு உடைந்து பிஎன் சுந்தரம் காலில் வெட்டியதையும் பற்றி சொன்னார். பிறகு பிளாஸ்டிக்கில் அதே போல் டப் [மிதவை] செய்து அதை படமாக்கியதையும் சுவையாக வெளிப்படுத்தினார்.
அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல். செட்டில் படமாக்காமல் முதன் முறையாக சென்னை மாநகரில் ஒரு வீட்டின் டெரசில் [terrace] அவர் படமாக்கியதை நான் புகழ்ந்து சொல்ல அவருக்கு சந்தோசம். இதையெல்லாம் இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
அவரை சந்திப்பதற்கு முதல் நாள்தான் திருச்சியில் ராஜாவின் வெற்றி செய்தி வந்திருந்தது. அதை அவரிடம் சொல்ல மிகவும் சந்தோஷப்பட்டார். நான் அப்போது டிசம்பர் மாதம் மதுரையில் சென்ட்ரலில் ராஜா தூள் கிளப்பியதை அவரிடம் சொன்னேன். ராஜா முதல் ரிலீசில் வெளியான அதே சென்ட்ரல் தியேட்டர் என்று சொன்னவுடன் சிவந்த மண் வெளியாயிற்றே அந்த அரங்கம்தானே என்று கேட்டார். 1969 சிவந்த மண் ஓபனிங் ஷோ மதுரை சென்ட்ரலில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். \
இறுதியாக சிவகாமியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. ஆராதனா ரீமேக் சாயலையும் மீறி படமாக்க வேண்டியிருந்ததைப் பற்றி சொன்ன அவர் அந்த விஷயத்தில் மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்களைப் பற்றியும் சொன்னார். படம் ஓடியதைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் அதே தவறான எண்ணம் அவருக்கும் இருக்கிறது என்பது தெரிய வந்தது. நான் படம் பல ஊர்களில் எப்படி ஓடியது என்பது பற்றி எடுத்து சொன்னேன். மதுரையில் தொடர்ந்து 104 காட்சிகள் அரங்கம் நிறைந்ததையும் 10 வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ருபாய் வசூல் வந்ததையும் விநியோகஸ்தர் பங்கு மதுரை நகரில் மட்டும் முக்கால லட்சம் வந்ததையும் சொல்லும்போது அவருக்கு ஒரே ஆச்சரியம். அப்படியா என்று கேட்டவரிடம் சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 11 வாரங்கள் ஓடியது பற்றி சொல்லி விட்டு அந்த படம் எடுக்கப்பட்டதற்கு நீங்கள்தான் சார் வில்லன் என்றவுடன் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். ஆமாம் சார். உங்கள் இயக்கத்தில் இதே சிவாஜி வாணிஸ்ரீ இணையாக நடித்த வாணி ராணி 1974 ஏப்ரல் 12-ந் தேதி அதே தேவி பாரடைஸ் அரங்கில் வெளியானது. அதனால்தான் இந்த படத்தின் 100- நாள் ஓட்டம் தடைப்பட்டது என்று விளக்கியவுடன் அப்படியா அப்படியா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.
மதுரைக்கு விழாவில் கலந்து கொள்ள ஆசைதான். ஆனால் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை என்றார். படம் வெளியாகும்போது அவசியம் வருகிறேன் என்றார். மதுரையில் எந்த திரையரங்கில் விழா என்று கேட்டவரிடம் சினிப்ரியா வளாகம் என்று சொல்லிவிட்டு சார் அங்கேதான் சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடியது அந்த 175-வது நாள் விழா அந்த அரங்கில் நடந்ததே அதற்கு கூட நீங்கள் வந்திருந்தீர்கள் என்று நினைவுபடுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மக்களை காக்கும் பணியில் தன்னுயிர் நீத்த IAF Pilot பிரவீன் அவர்களுக்கு இந்த படம் dedicate செய்யபடுகிறது என்றவுடன் அவர் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டார். விழாவிற்கு வாழ்த்துக்களை சொன்ன அவரிடம் விடை பெற்று கிளம்பினோம்.
வாசலில் அவரிடம் சொன்னேன் எங்கள் விவாத மன்றத்தில் ஒரு நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நீங்கள்தான் டார்லிங் என்று சொன்னவுடன் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.
எனவேதான் இந்த பதிவு சாரதா ஸ்பெஷல்
அன்புடன்
-
Post Thanks / Like - 5 Thanks, 8 Likes
-
26th February 2016 07:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks