அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி
.நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகர் கொடுத்திருக்க வேண்டிய முதல் படம்.(ஜூரிகள் பார்வையில்)(இரண்டாவது மோட்டார் சுந்தரம் பிள்ளை,மூன்றாவது தில்லானா மோகனம்பாள்,நாலாவது முதல் மரியாதை)-உலக தரத்தில் பார்த்து முடிவு செய்தாலும் இந்த படங்களுக்கு அவசியம் அவருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)
சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.
நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.
நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.
எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
இந்த 2016-ல் மாநகர் மதுரை வாழ் ரசிகர்களுக்கு பொது மக்களுக்கு நான்காவது போனஸ்.
தங்கைக்காக, வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன் இவற்றை தொடர்ந்து கூடல் மாநகர் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் என்றென்றும் அமைய நல்வாழ்த்து கூறி விஜயம் செய்கிறார் தியாக சுடர் சாரதி. மே 6 முதல் மதுரை சென்ட்ரலில் பச்சை விளக்கு.
அன்புடன்
மன்னிக்கவும். கர்ணனையும் சேர்த்து ஐந்தாவது போனஸ்.
Last edited by Murali Srinivas; 27th April 2016 at 11:59 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
கவிஞரின் புரோகிராம்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தபோது, ‘எல்லா கம்பெனிகளும் பேசுகிறார்கள். ஆனால், சிவாஜி படம் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் இருந்து மட்டும் யாரும் பேசுவதே இல்லையே ஏன்?’ என்று கேள்வி எழுந்தது. `ஏதாவது கட்சித் தகராறால் வர்றது இல்லைபோலிருக்கு' என நினைத்தேன். ஒருநாள் கவிஞரிடமே அதைக் கேட்டுவிட்டேன். அப்போதுதான் தனக்கும் சிவாஜிக்குமான அந்தப் பிரச்னையைப் பற்றி கவிஞர் கூறினார்.
விக்ரம் ஸ்டுடியோ அதிபர் பி.எஸ்.ரங்கா, ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர். கன்னடத்துக்காரர். இவர், சிவாஜியை வைத்து `தெனாலிராமன்’ படம் தொடங்கியிருந்தார். அதற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியது கவிஞர்தான்.
அப்போது சிவாஜி-எம்ஜி.ஆர்-கவிஞர் மூவரும் தி.மு.க-வில் இருந்தனர். கட்சியிலும் சினிமாவிலும் அவர்கள் வளர்ந்துகொண்டிருந்த நேரம். அந்தச் சமயத்தில் சிவாஜி ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘ஒரு பகுத்தறிவுப் பிரதிநிதி எப்படி புராணப் படத்தில் நடிக்கலாம்’ என தி.மு.க-வில் ஒரு பிரிவினர் சிவாஜியை எதிர்த்திருக்கின்றனர். ‘தொழில் வேறு... கட்சி வேறு’ - இது சிவாஜியின் வாதம். அதுமட்டும் அல்லாமல் அவர் தன் திருமணத்துக்குப் பிறகு திருப்பதிக்குப் போய் வந்ததும், கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘உங்களைக் கட்சியைவிட்டு விலக்குவோம்’ என்று சிலர் சொல்லவும், ‘நீங்க என்ன விலக்குறது, நானே விலகிக்கிறேன்’ என்று சிவாஜி தி.மு.க-வில் இருந்து விலகியிருக்கிறார்.
அந்தச் சமயத்தில் கவிஞர் ‘தென்றல் திரை’ என்ற பத்திரிகையில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதிவந்தார். அதன் ஆசிரியர், பதிப்பாளர் கே.ஆர்.பாலன். பிறகு, அந்தப் பத்திரிகையையும் கவிஞரே விலைக்கு வாங்கி நடத்தினார் என்பது வேறு விஷயம்.
அது `தெனாலிராமன்' படம் ஷூட்டிங் முடிந்த சமயம். தெனாலிராமனை, மன்னர் ஒரு குழியில் புதைத்து யானையைவிட்டு சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார். அப்போது அந்த வழியாக வரும் ஒரு கூனனிடம், ‘எனக்கு லேசாகக் கூன். இப்படிப் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்துவிடும். வேண்டும் என்றால் என்னை வெளியே எடுத்துப் பார். நான் நேராகியிருப்பேன். பிறகு, அந்தக் குழிக்குள் நீ புதைந்திருந்தால் உன் கூனலும் நிமிர்ந்துவிடும்’ என்பார். அந்தக் கூனனும் இதை நம்பி சிவாஜியை விடுவித்துவிட்டு அவன் புதைந்துகொள்வான். இது படத்தின் ஒரு காட்சி. அந்தப் படக் காட்சி சம்பந்தப்பட்ட போட்டோ ஒன்றை `தென்றல் திரை' பத்திரிகையில் போட்டு, ‘சிவாஜி கணேசா... இதுதான் உன் எதிர்காலமா?’ என கவிஞர் எழுதியிருக்கிறார். பத்திரிகை வெளிவந்த பிறகு சிவாஜிக்கு, கவிஞர் மேல் கடும்கோபம்.
அந்தச் சமயத்தில் கவிஞர் ஒரு வேலையாக வாஹினி ஸ்டுடியோவுக்குப் போயிருக்கிறார். அங்கு ஒரு ஃப்ளோரில் என்.எஸ்.கே பட ஷூட்டிங்; இன்னொரு ஃப்ளோரில் சிவாஜி பட ஷூட்டிங். கவிஞர், வாஹினிக்கு வந்திருக்கிற விஷயம் சிவாஜிக்குத் தெரிந்திருக்கிறது. கோபமாக வெளியே வந்தவர் ‘டேய் கண்ணதாசா, நில்லுடா’ என்று கவிஞரைத் துரத்திச் சென்றிருக்கிறார். சிவாஜி திடீரெனத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்ததும் கவிஞருக்கு அதிர்ச்சி. கோபத்தில் அடிதடியாகி விட்டால் அசிங்கமாகிவிடுமே என யோசித்தவர், என்.எஸ்.கே இருந்த செட்டுக்குள் ஓடியிருக்கிறார்.
‘டேய்... டேய்... என்னடா பிரச்னை, ஏன்டா ஓடுறீங்க?’ என இருவரையும் என்.எஸ்கே தடுத்திருக்கிறார். அப்போது சினிமா உலகில் என்.எஸ்.கே-தான் மூத்தவர். அவரின் வார்த்தைக்கு, பெரிய மரியாதை உண்டு. ‘இன்னைக்கு இவனை அடிக்காம விட மாட்டேன். ஒரு அறையாவது அறையணும்ணே’ சிவாஜிக்குக் கடும்கோபம். ‘கணேசா, அறிவு இல்லாமப் பேசாத. என்ன விஷயம்னு சொல்லு...’ - இப்படி அடித்துக்கொள்கிறார்களே என என்.எஸ்.கே-வுக்கு வருத்தம். ‘என்னைப் பத்தி என்ன எழுதியிருந்தான்னு தெரியுமாண்ணே? என்னைக் குழியில வெச்சுப் புதைக்கப் பார்க்கிறான்ணே இவன்.
கட்சியில ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள் இருக்கலாம். அதுக்காக `புதைஞ்சுபோ’னு எழுதுறது என்னண்ணே நியாயம்?’ - சிவாஜிக்குக் கோபம் தீரவில்லை.
‘பத்திரிகையில் எழுதினதால உன் மதிப்பு குறைஞ்சிடுமா என்ன? உனக்கு தன்னம்பிக்கை இல்லையா? விட்டுக்கொடுத்துப் போ கணேசா’ - சிவாஜியை என்.எஸ்.கே சமாதானம்செய்து அனுப்பியிருக்கிறார். சிவாஜி போனதும், ‘நேரடியா கட்சியில் ஈடுபடலைனாலும் நானும் தி.மு.க-காரன்தான். சிலர் கட்சியில் தீவிரமாவும் சிலர் மிதமாவும் இருப்பாங்க. உனக்கு அவங்க கொள்கை பிடிக்கலைனா ஒதுங்கிப் போ. நீ பத்திரிகைகாரனா மட்டும் இருந்தா பிரச்னை இல்லை. ஆனா, நீ சினிமாவிலும் இருக்க. அவனை ஏன் பகைச்சுக்கிற? யாரைத் திட்டுறதா இருந்தாலும் அதை அவங்களே ரசிக்கிற மாதிரி திட்டு’ - கவிஞருக்கு அழகாக புத்திமதி சொல்லியிருக்கிறார் என்.எஸ்.கே. இவை எல்லாம் கவிஞர் சொல்லி நான் கேள்விப்பட்டவை.
அந்த விரட்டல், துரத்தல், சண்டை இன்றையச் சூழலில் நடந்திருந்தால், அவர்கள் இருவரும் காலத்துக்கும் சேராததுபோல் செய்திருப்பார்கள் இன்றைய சமூக வலைதளப் போராளிகள். ஆனால், அன்று எந்தப் பத்திரிகையிலும் அந்தச் செய்தி வரவில்லை. சினிமா உலகத்துக்கு மட்டும் தெரியும். ஆனால், ‘நான் சிவாஜி படங்களுக்கு எழுத மாட்டேன்’ எனக் கவிஞரோ, `என் படங்களுக்கு கண்ணதாசன் எழுதக் கூடாது’ என சிவாஜியோ சொல்லவில்லை. இருவருக்கும் பிடிக்காது என்பதால், சிவாஜி படங்களுக்கு எழுதச்சொல்லி கவிஞரை அழைக்க மாட்டார்கள்.
அந்தச் சமயத்தில் சிவாஜி படத்துக்குப் பாட்டு எழுத கவிஞரை அழைத்தார்கள். அது இயக்குநர் பீம்சிங் ஓஹோவென வந்திருந்த நேரம். பீம்சிங் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். நான் சென்னைக்கு வந்த புதிதில் என்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளும்படி அவரிடம் கேட்டிருக்கிறேன். அப்போது அவர், ‘செந்தாமரை’ இயக்கிக் கொண்டிருந்தார். ‘இது எனக்கு முதல் படம். அதுவும் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியலை. இந்தப் படம் வரட்டும். பிறகு பார்ப்போம்’ எனச் சொல்லியிருந்தார். நான் கவிஞரிடம் சேர்ந்த பிறகும்கூட ‘நல்லா வாடா பஞ்சு’ என உற்சாகப்படுத்துவார். தொடர்ந்து அவர் கலைஞரின் கதை-வசனத்தில் ‘ராஜா ராணி’ இயக்கினார். அது ஓஹோவென ஓடியது. பிறகு, எம்.எஸ்.வி., சோலைமலை, வேலுமணி ஆகியோருடன் சேர்ந்து ‘புத்தா பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியைத் தொடங்கினார்கள். அந்த நால்வரில் வேலுமணி, புரொடக்*ஷன் மேனேஜராக இருந்து முன்னுக்கு வந்தவர். ஒருங்கிணைப்பதில் கெட்டிக்காரர். ‘சிவாஜியும் ஜெமினியும் நடிச்சா நல்லா இருக்கும். ரெண்டு பேரும் ஒப்புக்குவாங்களா?’ என பீம்சிங் யோசித்தால், ‘பீம் பாய், உங்களுக்கு சிவாஜி, ஜெமினி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும். அவ்வளவுதானே... நான் பார்த்துக்கிறேன், விடுங்க.’ இப்படி என்ன சொன்னாலும் ‘என்கிட்ட விட்ருங்க’ என்பதாகத்தான் இருக்கும் வேலுமணியின் பதில். இவர்கள் தயாரித்த முதல் படம் ‘பதிபக்தி’. பீம்சிங் இயக்கினார். எல்லா பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். படம், மிகப் பெரிய வெற்றி.
இதற்கிடையில் ‘எங்களுக்கு சினிமா தயாரிப்பில் ஆர்வம் இல்லை’ என எம்.எஸ்.வி-யும் சோலைமலையும் ‘பதிபக்தி’ லாபத்தில் தங்கள் பங்கைப் பெற்றுக்கொண்டு கம்பெனியில் இருந்து விலகிவிட்டனர். அந்தச் சமயத்தில் வேலுமணியும் பீம்சிங்கும் சேர்ந்து சிவாஜியை வைத்து ‘பாகப்பிரிவினை’ படத்தைத் தொடங்கியிருந்தனர். ஓர் இக்கட்டான சூழலில் அந்தப் படத்துக்கு, கவிஞர் பாட்டெழுத வேண்டும் என்பது பீம்சிங்கின் விருப்பம். ஆனால், கவிஞர்தான் சிவாஜியின் படத்துக்கு எழுத மாட்டாரே? வழக்கம்போல் வேலுமணி, ‘இந்தப் படத்துக்கு கவிஞர் பாட்டு எழுதணும் அவ்வளவுதானே... விட்ருங்க, நான் பார்த்துக்குறேன்’ என்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் கவிஞரை அவரால் சம்மதிக்கவைக்க முடியவில்லை.
சிவாஜி படத்துக்கு எழுதவே முடியாது என்று மறுத்த கவிஞரை ‘பாகப்பிரிவி’னைக்கு பாட்டெழுத நான் சம்மதிக்கவைத்த அந்தத் தருணம், என் வாழ்க்கையின் பெரும் பாக்கியம்.
தொடரும்...
Last edited by Barani; 28th April 2016 at 07:40 PM.
குழந்தை போல, மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அவளுக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள்.
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பச்சை இளம் கிளிமொழி நீ சொல்வது உண்மை,
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு
தெய்வமும் அஞ்சும்,
தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ.....
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்,,
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ,
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ,
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்,
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்......
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரிஅம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
'களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ!
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்'
என்று கோபம் தலை உச்சிக்கேற, ஊரார் அவளை 'புரிந்து கொள்ளவில்லையே' என்ற ஆதங்கத்தில் கடிந்து கொள்வதைப் பாருங்கள். வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து, உள்மனதில் ஊராரின் பொய்யுரைகளை நினைத்து நெஞ்சடைத்து, ஆத்திரம் பொங்க, சண்டைக்கு வருவது போல வரிந்து கட்டிக் கொண்டு, சாவித்திரி குழந்தைக்காக 'பாவிகளா!அப்படியெல்லாம் அந்தப் பெண் மீது அபாண்டப் பழி சுமத்தாதீங்கய்யா... உருப்படவே மாட்டீங்க' என்று உயர்த்திய வேட்டியை கால்களுக்கு மத்தியில் சைட் போஸில் லாவகமாக செருகி, ஆட்காட்டி விரலை உயர்த்தி, 'உதை' பாவம் காட்டி, அதிலேயே கடுங்கோபத்தையும் காட்டி, அதற்கு மேல் விழி பெருக்கி, அதில் நீர் தேக்கி, கண்களின் உருட்டல்களிலேயே அவள் புனிதமானவள் என்று ஊரார்க்கும், நமக்கும் உணர்த்தி, அந்த வெகுளிப் பெண்ணுக்காக உருகுவதை கண் இமைக்காமல் பாருங்கள். இவ்வளவும் பத்தே நொடிகளுக்குள் முடிந்துவிடும். 'பச்'சென்று மனதில் பதிந்து விடும். பத்து யுகங்களானாலும் மறக்க இயலாது. ஒவ்வொரு நொடிக்கும் மனதின் கோப,தாபங்கள், விருப்பு, வெறுப்பு, அந்தப் பெண்ணின் மீது தமக்குள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை, அவள் மீதுள்ள கனிவு கண்ணீராக மாறி (பாடலின் முடிவில் மிக அழகாக விழிநீர் துடைப்பார்). பழிச்சொல் பேசுவோரின் மீது பொங்கும் பக்கா கோபம், 'போங்கடா! டோன்ட் கேர்' என்ற அலட்சியப்படுத்தல், அந்த அலட்சியத்தை அதற்கு முன்னம் இழந்திருத்தல் என்று நொடிகளுக்குள் நூறாயிரம் முக, உடல்பாவங்கள் காட்டி உலக உயிர் அணுக்களில் நிறைய நம் 'கைகொடுத்த தெய்வ'த்தை விட்டால் யார்? சாவித்திரி பற்றி சிலாகித்துப் பாடும்போது சந்திரனாக முகம் மலர்ந்திருக்கும். புன்னகையும், சிரிப்பும், களிப்பும், பெருமையும் அதில் தெரியும். களங்கம் சொல்பவர் பற்றி பாடும் போது கட்டுக்கடங்கா கோபம் தென்படும். இவ்விரண்டும் பாடல் முழுக்க மாறி மாறி மிகச் சரியாக, சரிசமமாக பிரதிபலிக்கும்.
சவால் விடுகிறேன். ஒவ்வொரு நொடிக்கும் காட்சிக்கான பாவங்களை இப்படி அருமையாக அள்ளி வழங்க வேறு நடிகர்கள் எவராவது இருக்கிறீர்களா? ஒருவர்?....ஒரே ஒருவர்?...ம்...சொல்லுங்கள். ஒவ்வொரு நொடிக்கும் நிஜமான கைத்தட்டல்களை உண்மையான....உண்மையான நடிப்புக்காக பெறும் பெரும் நடிகர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஒவ்வொரு நொடிக்கும் உள்ளம் கலங்க வைக்கும், உருக வைக்கும் நடிகர்கள் வேறு யாரேனும் இருக்கிறீர்களா? மனம் தொட்டு சொல்லுங்கள்.
இந்த ஒரு பாடலின் அந்தக் குறிப்பிட்டக் காட்சியை மட்டுமே காணுங்கள். பிறகு உங்கள் திறமைகளைப் பற்றி நீங்களே உணர்ந்து தலை கவிழுவீர்கள். நடிப்பு என்னவென்றால் என்னவென்று தெரிந்து புரிந்து பிறகு 'நான் நடிகன்' என்று கர்வப்படுங்கள். அப்படி நடிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள இந்தக் காட்சியை மட்டும் பாருங்கள். அப்புறம் மெருகேறுவீர்கள்.
பிறகு உணருவீர்கள்.
அவர் ஆயிரத்தில் ஒருவரல்ல...
லட்சத்தில் ஒருவரல்ல...
கோடியில் ஒருவரல்ல....
அந்த ஒருவர் ஒருவர்தான். வேறு எவரும், எதுவும் அவருக்கு இணை, ஈடு இல்லை.
.
Last edited by vasudevan31355; 29th April 2016 at 10:39 PM.
வாசு சார்
மதுர கானம் திரியில் தங்களுடைய உள்ளத்தில் குழந்தையடி குறுந்தொடர் தங்களுடைய அபார உழைப்பையும் அதற்கான கருவைத் தேர்ந்தெடுக்கும் தங்களுடைய தனித்திறமையினையும் மிகவும் ரசித்துப் பாராட்டி எழுத வேண்டும் என எத்தனித்தேன். முத்தாய்ப்பாக தலைவரின் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலும் இடம் பெறும் என எதிர்பார்த்தேன். ஏமாற்றாதது மட்டுமல்ல, இதை விட சிறப்பாக இப்பாடலைப் பற்றி யாரும் எழுதி விட முடியாது என்கிற அளவிற்கு எழுதி இம்மய்யத்தில் தங்களுடைய உயர்ந்த இடத்தை அப்படியே ஸ்திரப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்.
அது மட்டுமல்ல
அவர் ஆயிரத்தில் ஒருவரல்ல...
லட்சத்தில் ஒருவரல்ல...
கோடியில் ஒருவரல்ல....
அந்த ஒருவர் ஒருவர்தான். வேறு எவரும், எதுவும் அவருக்கு இணை, ஈடு இல்லை.
இந்த வரிகளின் மூலம் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் குளிரச் செய்து விட்டீர்கள்.
உண்மையிலேயே உள்ளத்தில் குழந்தையான நாயகனுக்கு, இப்பாடலின் மூலம் இதை விட சிறந்த அஞ்சலி செய்ய முடியுமா என்பது ஐயமே.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks