Page 343 of 400 FirstFirst ... 243293333341342343344345353393 ... LastLast
Results 3,421 to 3,430 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3421
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post

    3. சோ

    இவரும் புரட்சித் தலைவர் இருந்தபோது அவரை தனது பத்திரிகையிலும் பேட்டியிலும் கூட்டங்களிலும் எவ்வளவு கேலி செய்திருக்கிறார். அவரது ஆட்சியை கேலி செய்தார். சத்துணவு திட்டத்தை குறை கூறினார். 1980வது வருசம் தேர்தலில் மட்டும் புரட்சித் தலைவரை ஆதரித்தார். தேர்தலுக்குப் பின் மறுபடியும் புரட்சித் தலைவரை குறை கூறினார்.

    பின்னர், புரட்சித் தலைவியை ஆதரித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தாலும் பின்னர் மறுபடியும் புரட்சித் தலைவியை சோ தீவிரமாக ஆதரித்தார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையும் ஆதரித்தார். புரட்சித் தலைவியின், அதிமுகவின் ஜால்ரா பத்திரிகை துக்ளக் என்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்தன. புரட்சித் தலைவி இலவச திட்டங்களை கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். நமது நாட்டில் ஏழைகள் உள்ளவரை இதுபோன்ற திட்டங்கள் தேவை என்றார். சத்துணவுத் திட்டமும் நல்ல திட்டம் என்பதை இப்போது உணர்கிறேன் என்றார். புரட்சித் தலைவர் இருந்தபோது இதை உணரவில்லை. புரட்சித் தலைவருக்கு ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் பட்டம் கொடுக்கப்பட்டதை கூட தனது பத்திரிகையில் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

    போனவாரம் கூட சோவின் மகன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்வரின் உடல்நிலையை விசாரித்தார் என்ற செய்திகள் வந்தது. இதில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம்தான். ஆனால், இந்த சோவின் மகன் புரட்சித் தலைவியின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்று சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த கம்பெனி நிர்வாகிகளில் சோவின் மகன் பெயர் உள்ளதை அந்த கம்பெனியின் சான்றிதழோடு போட்டோ காப்பியை வெளியிட்டார்கள். அந்த பத்திரிகைக்கு சோ மறுப்பு தெரிவிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையிலும் மறுத்து எழுதவில்லை.

    புரட்சித் தலைவர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடந்ததாக சோ துள்ளிக் குதித்தார். பின்னர், விசாரணை கமிஷனில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வெளியானது. அந்த சமயத்தில் சோவின் தந்தை எரிசாராய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அதையும் இப்போது மிடாஸ் மதுபான ஆலையில் சோவின் மகன் ஒரு நிர்வாகியாக இருப்பதையும் நினைத்துப் பாருங்கள். அதற்காக மிடாஸ் மதுபான ஆலையில் ஊழல் என்று நான் சொல்லவில்லை. முறைப்படி அனுமதியோடு நடத்துகிறார்கள். ஆனால், சாராய ஆலை என்றாலே சோ குடும்பத்துக்கு தீட்டு என்று அர்த்தமில்லை, அதிலும் 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி ஊழல் செய்கிறார் என்று திமுகவை ஆதரித்தவர் இப்போது தன் மகன் அவர்கள் நிறுவனத்தில் பங்கேற்றதை தவறாக நினைக்கவில்லை என்பதைப் பாருங்கள்.

    ஆனால் ஒன்று, புரட்சித் தலைவரின் வள்ளல்தன்மையை சோ எப்போதும் பாராட்டி வந்திருக்கிறார். 6-7-2016 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் புரட்சித் தலைவரின் தர்ம சிந்தனை வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று வாசகர்களின் கேள்விக்கு தானே பதில் அளிக்கும் கேள்வி பதில் பகுதியில் சோ பாராட்டியுள்ளார். அதை இங்கே தருகிறேன்.




    இப்போதும் இரா. செழியன் பேட்டி மூலம் புரட்சித் தலைவருக்கு ஆதரவான கருத்துக்களை தனது பத்திரிகையில் சோ வெளியிடுகிறார்.

    ஆக இதிலிருந்து ஒன்று புரியுது. புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது.

    தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.

    அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போது அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.

    மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள் தருவார்.

    போன அக்டோபர் மாதம் 21ம் தேதி புரட்சித் தலைவரை தூற்றிய கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்கள் இப்போது போற்றுகிறார்கள் என்று நான் போட்ட பதிவில் இது ஒரு பகுதி. சோ அவர்களைப் பற்றி மட்டும் உள்ள பகுதி.

    சோ அவர்களின் மறைவு வருத்தம் தரக்கூடியதுதான். ஆனால், முன்னர் அவர் புரட்சித் தலைவரைப் பற்றி எழுதியதையும் கிண்டல் செய்ததையும் மறக்க முடியவில்லை. அடிப்படையிலேயே, அவர் திமுக எதிர்ப்பாளர். அது அவரின் ரத்தத்தில் ஊறிய பரம்பரை குணம். அவரது அப்பாவும் திமுக எதிர்ப்பாளர். பழைய காங்கிரஸ்காரர். அந்த குணம்தான் புரட்சித் தலைவர் திமுகவில் இருந்ததால் அவர் மீதும் சோவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

    ஆனால், கால மாற்றத்தில் 1980ம் ஆண்டு தேர்தலில் புரட்சித் தலைவரை சோ ஆதரித்தார். திமுகவில் இருந்து தலைவர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கிவிட்டார் என்பதும் காரணம். தேர்தலுக்குப் பின் புரட்சித் தலைவரைப் பற்றி மீண்டும் கிண்டல் கேலி தொடர்ந்தது. திமுகவைத்தான் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தாச்சே. அப்புறம் என்ன? 1984ம் ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. விருப்பப்பட்டவர்களுக்கு வாசகர்கள் சிந்தித்து ஓட்டளியுங்கள் என்றார். புரட்சித் தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எப்படியும் அவர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார், திமுக தோற்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.

    தலைவர் மறைந்தவுடன் 1989-ல் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். 1991-ல் புரட்சித் தலைவி தலைமைக்கு ஆதரவு. 1996-ல் புரட்சித் தலைவி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அப்போது புரட்சித் தலைவியை ஆதரித்தால் தன் நடுநிலை பிம்பம் சிதறிவிடும் என்பதால் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். மூப்பனார் தமாகாவை தொடங்க தூபம் போட்டு அவருக்காக அறிவாலயம் சென்று பேசினார். ஏதோ அதற்குமுன் மூப்பனாருக்கும் கருணாநிதிக்கும் அறிமுகமே கிடையாது, இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார் என்பதைப்போல.

    எல்லாம் சீட் பேரத்துக்குத்தான். தலைவர்களுக்கும் இவ்வளவு சீட் கொடுங்கள் என்று நேரடியாக கேட்கவும், இவ்வளவுதான் கொடுப்போம் என்று நேரடியாக சொல்வதற்கும் தயக்கம் இருக்கும். சோ போன்றவர்களை தூதராக பயன்படுத்திக் கொள்வார்கள். 2001-ம் ஆண்டு மீண்டும் நம் பக்கம் வந்துவிட்டார். அதே மூப்பனாரை பேசிப் பேசி நமது கூட்டணிக்கும் கொண்டு வந்துவிட்டார். அப்போதில் இருந்து கடைசி வரை தீவிர அதிமுக ஆதரவாளராகவே சோ இருந்தார். அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை. அகில இந்திய அளவில் அவர் பா.ஜ.க. ஆதரவாளர். அந்த விசுவாசத்துக்காக ராஜ்யசபா எம்.பி. பதவியும் பெற்றார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆதரவாளர்.

    2011 தேர்தலில் விஜயகாந்தை சந்தித்துப் பேசி அதிமுக பக்கம் கொண்டு வந்தார். சுருக்கமாக சொன்னால் சோ ஒரு பவர் புரோக்கர். இந்த வருசம் ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டு விழாவிலும் வரும் சட்டசபை தேர்தலில் (அதாவது போன மே மாதம் நடந்த தேர்தல்) அதிமுகவே வெற்றி பெற்று புரட்சித் தலைவி முதல்வராக வேண்டும் என்று பேசினார்.

    இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஊழல்வாதி என்று புரட்சித் தலைவியை 1996-ல் சொன்ன அதே சோ – தான் பின்னர் தீவிரமாக ஆதரித்தார். இதற்கு காரணம், ஒன்று புரட்சித் தலைவி நிரபராதி, ஊழலே செய்யாதவர் என்று அவர் நம்பியிருக்க வேண்டும். அல்லது திமுகவை தோற்கடிப்பதற்காக புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும் இல்லையா? இரண்டாவதுதான் அவரது நிலைமை. ஆக,அவரைப் பொறுத்த அளவில் தன்னால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றாலும் தேவை என்றால் ஊழலில் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர்தான் சோ என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

    புரட்சித் தலைவியின் தோழி சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 நிறுவனங்களுக்கு எம்.டி.யாக இருந்தார் சோ. இதைச் சொன்னவர் சாதாரணர் இல்லை. ஆம் ஆத்மி கட்சியில் இருந்த இந்தியாவின் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண். சென்னையிலேயே வைத்து இதைச் சொன்னார். அந்த செய்திக்கான லிங்க் :
    http://tamil.oneindia.com/news/tamil...98-269198.html

    அதை சோ மறுக்கவில்லை. இப்போதும் மிடாஸ் நிறுவனத்தில் சோவின் மகன் ஒரு இயக்குநர். நான் ஏற்கனவே மேலே உள்ள பதிவில் சொன்னபடி சில மாதங்கள் முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் இது செய்தியாக வந்தது. இதையும் சோ மறுக்கவில்லை. சோ, மற்றும் அவரது மகனின் வியாபாரத் தொடர்பை காட்டும் வரைபடம். நக்கீரன் பத்திரிகையில் வந்தது.



    இதற்கும் சோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

    சசிகலாவின் மதுபான ஆலையில் தானும் பங்கு வகித்து தன் மகனும் பங்கு பெற்று வரும் நிலையில், புரட்சித் தலைவியோ சசிகலாவோ ஊழலே செய்யவில்லை என்றாவது சோ கூறினாரா என்றால் இல்லை. வெண்டைக்காயை விளக்கெண்ணையில் தோய்த்த மாதிரி விளக்கங்கள். நேற்று (7-ம் தேதி) மறைந்த சோவின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த செய்திக்கான தினத்தந்தி பத்திரிகை லிங்க்:

    மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
    http://www.dailythanthi.com/News/Sta...a--tribute.vpf

    என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சுப்பிரமணிய சாமி போட்டிபோட்டபோது அவருக்கு ஓட்டுப் போட வாசகர்களை தனது துக்ளக் பத்திரிகையில் கேட்டுக் கொண்டார். சு.சாமி எவ்வளவு பெரிய ஜெகஜால புரட்டர் என்று இந்தியாவுக்கே தெரியும். யாராவது அப்படியா? என்று கேட்டால் விவரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த சு.சாமி, சோவுக்கு நண்பர். அந்த சு.சாமிக்கு மறைந்த சந்திரா சாமி என்ற சாமியார் நண்பர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பி விட்டு ஊரை ஏமாற்றியவர் சந்திரா சாமி. அவரும் ஒரு அரசியல் புரோக்கர்.

    இப்படிப்பட்ட சோ, கடந்த காலங்களில் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் இப்போது திமுகவையும் காங்கிரசையும் பார்த்து ஊழல் என்று கூப்பாடு போட்டார் என்றால், அதைச் சொல்ல சோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தயவு செய்து சிந்தியுங்கள்.

    இப்போது எதற்கு இதெல்லாம் என்று தோன்றலாம். கடைசி காலத்தில் சோ நமது கட்சிக்கு ஆதரவாகத்தான் இருந்தார் என்றாலும் கடந்த காலங்களில் இவர், அதுவும் நேர்மையாளர் நடுநிலையாளர் என்ற போர்வையில் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் பற்றி பேசியதும் எழுதியதும் மனதில் ரணமாக உள்ளன. அதனால்தான் இந்தக் குமுறல்.

    என்றாலும் ஒருவர் இறந்துவிட்டால் எதிரியாவே இருந்தாலும் இரங்கல் தெரிவிப்பது தமிழனின் பண்பாடு. சோ-வின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    Last edited by SUNDARA PANDIYAN; 8th December 2016 at 02:53 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3422
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    1996-ம் ஆண்டு தேர்தலில் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’’ என்று பேசிய நடிகர் ரஜினி காந்த்,(சோவின் அறிவுரையால்) புரட்சித் தலைவியின் உடல் அருகே தலை வைத்து வணங்கி அஞ்சலி செலுத்துகிறார்.

    புரட்சித் தலைவர் போலவே இறந்த பின்னும் புரட்சித் தலைவிக்கு வெற்றி.

  4. #3423
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நேரத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அகால மறைவு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது .ஒரு வேளை அவர் குணமடைந்து மீண்டும் புது வேகத்துடன் ஆட்சியை தொடர்ந்து இருந்தால் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட அறிவிப்புகள் செய்திருப்பார் . ஏமாற்றம்தான் .
    தற்போதைய முதல்வர் திரு பன்னீர் செல்வம் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
    எஸ்.வி. அய்யா, என்ன இப்படி சந்தேகப்படுகிறீர்கள்? சந்தேகமே வேண்டாம். இவர்கள் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக...... கொண்டாட மாட்டார்கள். புரட்சித் தலைவி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது டி.வி.யில் நான் பார்த்து உணர்ந்ததை சொல்கிறேன். எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருந்ததோ. ஒவ்வொருவர் பார்வையும் வித்தியாசப்படும்.

    எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். புரட்சித் தலைவியின் உடலை சுற்றி இருந்தவர்களின் முகங்களில் பெரிய அளவுக்கு வருத்தம் இல்லை. பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த வந்தபோது மட்டும் லேசாக அழுகை. மற்றபடி, புரட்சித் தலைவி உடல் அருகிலேயே காலை முதல் இருந்த பாஜ வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கயா நாயுடு முகத்தில் இருந்த வருத்தம் கூட சுற்றி இருந்தவர்கள் முகத்தில் இல்லை என்று எனக்கு பட்டது. இப்படிப்பட்டவர்கள் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.

    புரட்சித் தலைவருக்கும் புரட்சித் தலைவிக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. தலைவரைப் பொறுத்தவரை உடல் நிலை சரியில்லாத காலத்திலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பார். அவரைப் பற்றி சொல்வார்கள். ஒருவரிடம் ஒரு காரியத்தை செய்ய சொல்லிவிட்டு அதை அவர் செய்கிறாரா என்று கண்காணிக்க 3 வெவ்வேறு நபர்களை தனித்தனியே அனுப்புவார். பின்னர் 3 பேரும் சொல்லும் தகவல்கள் ஒன்றுபோல இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வார் என்று சொல்வார்கள். இந்த மாதிரி ராஜதந்திரத்தால் அவரை யாரும் ஏமாற்ற முடியாது. ஆனால், புரட்சித் தலைவி பாவம், சுற்றி உள்ளவர்களை நம்பினார்.

    இனி நாமே புரட்சித் தலைவர் பிறந்த நாள், நினைவு நாளில் வீட்டில் அவர் படத்துக்கு பூஜை செய்து படையல் போட்டு வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டியதுதான். அதைத்தான் புரட்சித் தலைவரும் விரும்புவார்.

  5. #3424
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    *ஜெயலலிதா ஜெயராம்*

    ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவரான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாக காண்போம்.
    பிறப்பு: 24 பிப்ரவரி 1948
    பிறந்த இடம்: மைசூர், இந்தியா
    தொழில் துறை: நடிகை மற்றும் அரசியல்வாதி
    ஆரம்ப வாழ்க்கை:
    ‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.
    சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.
    தொழில்:
    ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.
    அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி, இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும், அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
    பங்களிப்புகள்:
    அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
    விருதுகள்
    ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
    காலவரிசை
    1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.
    1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
    1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.
    1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.
    1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.
    1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.
    1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
    1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
    1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
    2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
    மே 16, 2011 முதல் செப்டம்பர் 27, 2014வரை - தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டjது),
    மே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதல்வர்
    மே 23, 2016 முதல் இன்று (டிசம்பர் 5) வரை தமிழகத்தின் 19 வது முதல்வர்.

    நன்றி : *A முக்தார் அஹமத்* முகநூல்

  6. #3425
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    கடுங் குளிர் நள்ளிரவு... வீதியில் நான்!' ஜெயலலிதா பகிர்ந்த நினைவுகள்

    திராவிட இயக்கத்தில் வேரூன்றிய வெற்றிகரமான ஒரு விழுது அ.தி.மு.க. தமது கட்சியின் தலைவரிடம் முரண்பட்டு எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதர் உருவாக்கிய அக்கட்சி கிட்டத்தட்ட பொன்விழாவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 26 ஆண்டுகளாகக் கட்டிக்காத்து, கோடிக்கணக்கான தொண்டர்களை வழிநடத்திய முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்கள் சக்திமிக்க தலைவர் மறைந்து விட்டார். அ.தி.மு.க எனும் எம்.ஜி.ஆர் கண்ட இயக்கத்தை, கட்டிக்காக்க, தான் அடைந்த துயரங்களை கடந்த 1997-ம் ஆண்டு அ.தி.மு.க வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது, கட்சியின் வெள்ளிவிழா மலரில் உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்...படிப்பவர் அனைவரது கண்களிலும் சில துளி கண்ணீரையாவது கடனாகப் பெற்று விடும் அந்த உருக்கமான கட்டுரை. அதனை இங்கு தருகிறோம்....

    "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். நிறுவி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. 1972 அக்டோபர் 17-ல் தொடங்கி, 1987 வரையில் ஒரு பதினைந்தாண்டு காலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொதுச்செயலாளராக இருந்து, கழகத்தை வழிநடத்தினார். தொடர்ந்து தலைவர் நிறுவிய இயக்கத்தைப் பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தும் வாய்ப்பை, கழக உடன்பிறப்புகள் எனக்கு வழங்கிக் கொண்டிருப்பது நான் பெற்ற நற்பேறாகவே கருதுகிறேன்.

    நினைவுபடுத்த விரும்பும் நிகழ்வுகள்!

    கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கழகமும் சந்தித்த தடைகள், தடங்கல்கள் பலவற்றையும், அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து வீறுநடை போட்டு வந்த வரலாற்றைக் குறித்து என் நினைவில் நிற்கும் சில உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணாவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கட்டிக்காக்க இயக்கம் தொடங்கிச் சிறப்புற நடத்திய தலைவருக்குப் பிறகு, இயக்கத்தைக் கட்டிக் காக்கவும், ஆட்சிக் கட்டிலில் ஏற்றவும் நான் சந்தித்த இடர்பாடுகளையும், இன்னல்களையும் ஒருவாறு இக்கட்டுரையில் ஆராயவும் முற்பட்டிருக்கிறேன்.

    அன்னை இந்திரா காந்தி அவர்கள் தனக்குப் பிறகு ராஜீவ்காந்தி அவர்களை கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க இலகுவாக வழிவகுத்துப் போனார். ஆனால் எனது நிலையோ அப்படிப்பட்டது அல்ல. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகு தலைமைப் பதவியை நான் எளிதாக அடையவில்லை. உள்ளும் புறமும் எனக்கெதிராகத் துரோகமும், பகை உணர்வுகளும் ஒரு சிலர் வளர்த்து விட்டதைப்போல அரசியலில் வேறொருவருக்கும் எதிராக உருவாக்கப்பட்டதில்லை. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்தெறிய நான் நடத்திய போராட்ட வரலாற்றையும் இதில் நினைவு கூர்ந்திட உள்ளேன்.

    பிற்பட்ட மக்களுக்குக் கல்விச் சலுகையும், வேலை ஒதுக்கீடும் வேண்டுமென்ற கொள்கையை நிலைநிறுத்த 1916-ல் சர்.பிட்டி தியாகராயரும், டி.எம்.நாயரும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். 1925-ல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் முப்பதுகளில் நீதிக் கட்சியோடு இணைந்து செயலாற்ற முன்வந்தார். 1938 மற்றும் 1940-ல் பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர், அண்ணாவின் உறுதுணையோடு 1944-ல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். 1949-ல் செப்டம்பர் 17-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். 1949-ல் இயக்கம் கண்டாலும் 1958-ல் தான் திருச்சியில் நடந்த கழக மாநாட்டில்தான் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்தலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற அண்ணா முடிவெடுத்தார். காரணம் 1953-ல் இயக்கத்தில் இணைந்த அண்ணாவின் இதயக்கனியான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வருகையால், அன்றைய தி.மு.கழகம் ஓர் வெகுஜன இயக்கமாக உருவெடுக்க வாய்ப்புப் பெற்றமையே ஆகும்.

    1967-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஈடுபாட்டோடு செயற்படுத்த தொடங்கினார். மக்கள் நல்லன்பைத் தனது ஆட்சித் திறன் மூலம் பெறத் தொடங்கிய அண்ணா அவர்களின் திடீர் மறைவு மக்களுக்குப் பேரிழப்பாக அமைந்தது. 1969-ல் அண்ணாவுக்குப் பின் அண்ணாவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் புறந்தள்ளப்பட்டு எல்லா நிலைகளிலும் தனிமனிதர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆதிக்க மனப்பான்மை உருவானது.

    1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா பெற்ற இடங்களைவிட 1971 சட்டமன்றத் தேர்தலில் 45 இடங்கள் அதிகம் கிடைத்தது. அந்தக் கூடுதலான இடங்கள், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் செல்வாக்கினால் பெற்றவை என்பதை தலைமை மறந்து விட்டது. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் புறக்கணிக்கப்பட்டனர், அண்ணாவின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆட்சியிலும் கட்சியிலும் ஒருவரே முன்னிலைப்படுத்தப்பட்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உதாசீனப்படுத்தப்பட்டார்.

    அ.தி.மு.க உதயம்

    அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பட்ட சிலரின் குடும்பச் சொத்தாக மாறுவதை மக்கள் விரும்பவில்லை. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் மனங்கொதித்தார்கள். அண்ணாவின் கொள்கைகளைக் கட்டிக் காக்க எம்.ஜி.ஆர். உறுதிகொண்டார். கழகத்தின் வரவு, செலவுக் கணக்கைக் கேட்டார். எம்.ஜி.ஆர். எழுப்பிய போர்க்குரல் பொதுமக்களால் ஆதரிக்கப்பட்டது. அ.தி.மு.க உதயமானது. எம்.ஜி.ஆருக்கு மக்கள் ஆதரவு வளர்வது பிடிக்காமல், அவர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

    1972-ல் தொடங்கி எண்ணற்ற வழக்குகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீதும், கழக உடன்பிறப்புகள் மீதும் தொடுத்து, அப்போதுதான் அரும்பிய இயக்கத்தைத் துவண்டுவிடச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடக்கு முறைகளை எதிர்த்து நின்று, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெரு வெற்றிபெற்று அண்ணாவின் உண்மையான இயக்கம் தனது தலைமையில் இயங்குவதுதான் என்பதை நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

    மூன்று முறை (1977, 1980, 1984) தேர்தல்களில் நின்று வெற்றிபெற்ற முதலமைச்சர் என்று நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை உற்பத்தி செய்த அமுதசுரபியாக விளங்கினார். 1982-ம் ஆண்டு ஜூலை முதல் சரித்திரச் சிறப்புமிக்க சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    கட்சியில் இணைந்தேன்...

    புரட்சித்தலைவர் ஆணைக்கிணங்க, 4.6.1982 அன்று கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என்னைப் பொதுத்தொண்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஈடுபடுத்தினார். என்னை சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக்கி அகம் மகிழ்ந்தார். சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் செல்லும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்னைச் சந்திப்பார்கள், அவர்கள் மூலம் ஆட்சி நிலவரம் குறித்து அறிந்து கொள்வேன், கழக முன்னணியினர் சந்திப்பார்கள். அவர்கள் மூலம் கழகப் பணிகள் குறித்து அறிந்து, பொதுமக்கள் கோரிக்கைகளையும் பெற்றுக் கொள்வேன்.

    சென்னை திரும்பியதும் கட்சியிலும், ஆட்சியிலும் நிகழ்த்த வேண்டிய பணிகள் குறித்து புரட்சித்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன், அவற்றை ஏற்றுக்கொண்டு, புரட்சித்தலைவர் உடனடியாக அமல்படுத்தினார், நடவடிக்கை மேற்கொண்டார். 1982-ல் நடைபெற்ற கடலூர் மாநாட்டில் என்னை ‘பெண்ணின் பெருமை’ என்ற சீரிய தலைப்பில் பேசச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அரசியல் அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர்.

    கொள்கைப் பரப்புச் செயலாளர்

    1983-ம் ஆணடு ஜனவரி திங்கள் 28-ம் நாள், எம்.ஜி.ஆர்., என்னை கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம் செய்தார். அப்போது நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில்தான் புரட்சித்தலைவர் முதன்முதலாக என்னை நேரிடையாக ஈடுபடுத்தினார். திருச்செந்தூர் சென்று மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கப் பணித்தார்.

    திருச்செந்தூர் கோயில் அலுவலர் சுப்பிரமணியப் பிள்ளை சாவு குறித்து எதிர்கட்சிகள் பெரும் போராட்டமே நடத்தி முடித்திருந்தன. ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்று கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை சென்று, சுப்பிரமணிய பிள்ளை படுகொலை குறித்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். ‘வைரவேல் திருடனென்று’ ஒரு அமைச்சரைக் குற்றம்சாட்டி சுப்பிரமணியப் பிள்ளை சாவில் தொடர்புபடுத்தி பெரும் அமர்க்களமே படுத்தினார்.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. தொகுதி மக்களும் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவரிடம் அந்த அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவரை அனுப்பாதீர்கள்!’ என்றும் ‘அம்மாவை (என்னை) அனுப்பி வையுங்கள்!’ என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அந்த அமைச்சர் தொகுதிப் பக்கமே தலைக்காட்டி விடக்கூடாது எனப் புரட்சித்தலைவரே உத்தரவிட்டிருந்தார்.

    புரட்சித்தலைவர் ஆணையைச் சிரமேற்கொண்டு இரவு பகலாகப் பிரசாரத்தில் ஈடுபட்டேன், போகுமிடமெல்லாம் மக்கள் பேராதரவு தந்தார்கள். புரட்சித்தலைவரோடு இணைந்து பிரசாரம் செய்தேன், கழகம் வெற்றிவாகை சூடியது.

    கழகப் பணி

    தினமும் காலை பத்துமணிக்கு தலைமைக் கழகம் வருகை தந்து, கழகப் பணிகளில் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டேன், கழகப் பிரசாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் கட்டாயம் கழகப் பொதுக்கூட்டங்களில் பங்குபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    கழகப் பணி என்று வரும்போது யார் அலட்சியம் காட்டினாலும் நான் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தலைமைக் கழகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள், அவர்கள் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன். தலைமைக் கழகத்துக்குச் சென்றால் கொள்கை பரப்புச் செயலாளரைக் கண்டு, தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல முடியும் என்ற நிலையினை உருவாக்கியது தொண்டர்களுக்கு மன நிறைவைத் தந்தது.

    கழகப் பணியிலும், ஆட்சிப் பணியிலும் கழகத் தொண்டர்களுக்கும் புரட்சித்தலைவருக்கும் இணைப்புப் பாலமாக நின்று, தொண்டர்களின் உணர்வுகளைத் தலைவருக்குத் தெரிவித்து, ஆக்கபூர்வமான பணிகள் நிகழ என்னால் முடிந்ததை உளத்தூய்மையோடு செய்தேன்.

    நாடாளுமன்ற உறுப்பினர்

    இதற்கிடையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 23.4.1984-ல் புரட்சித்தலைவர் என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே இருக்கை எண் 185 எனக்கு ஒதுக்கப்பட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாத கிடைத்ததற்கரிய பேறாகவே கருதுகிறேன். நாடே வியக்கும்வகையில் அண்ணா முழங்கிய அதே இருக்கையில் நின்று, மாநிலங்களவையில் மின்சாரத்துறை சம்பந்தப்பட்ட மசோதா குறித்த விவாதத்தில் எனது உரையை முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்தேன். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி என்மீது பேரன்பு காட்டினார். எனது நடவடிக்கைகளில் சிலர் அதிர்ந்து போனார்கள்.

    தலைவருக்கு ஏற்பட்ட இக்கட்டைச் சமாளிக்க நான் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் விலக எடுத்த முடிவை, தலைவரும் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், நான் பதவி விலகிய பின்னரும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை.

    1984-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் தலைவரின் உடல் நலம் குறைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 13-ம் தேதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் என்ற வேதனைச் செய்தியால் தமிழ்நாடே துயரத்தில் வீழ்ந்தது.

    5.11.1984-ல் தலைவர், அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் திருக்கோவில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து, என் கண்கள் குளமாயின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த இருவரில் இந்திரா காந்தி மறைந்தார். தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தார்.

    1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கழகம் கூட்டணி சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார்.

    ஆண்டிப்பட்டியில் எனது பிரசாரத்தைத் தொடங்கினேன். போகும் இடமெல்லாம் என்னை ஆரவாரத்தோடு மக்கள் வரவேற்றார்கள். எதிர்க்கட்சிகளின் பொய்ப் புகார்களுக்கு ஆங்காங்கே பதிலுரைத்தேன். ‘புரட்சித் தலைவர் திரும்ப வருவார், பூரண நலம் பெற்று வருவார், நல்லாட்சி தருவார், என ஆணித்தரமாக எடுத்துரைத்தேன், ‘புரட்சித்தலைவரை மீண்டும் முதல்வராக்கி வரவேற்றிட நல்லாதரவு தாருங்கள்’ என சென்ற இடமெல்லாம் வேண்டுகோள் வைத்தேன். பொதுமக்கள் எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இயக்கம் காப்பதற்குத் துணை நின்றதிலும் கழகம் பெற்றிபெற பிரசாரம் செய்ததிலும் நான் மிகுந்த மனநிறைவு பெற்றேன். ‘தலைவர் தமிழ்நாட்டில் இல்லாத குறையை அம்மா தீர்த்து வைத்தார்கள்’ என்று பலரும் சொன்னதை என் காது குளிரக் கேட்டேன்.

    1985 பிப்ரவரித் திங்கள் 12-ம் நாள் புரட்சித்தலைவர் தாயகம் திரும்பினார். செப்டம்பர் ஆறாம் நாள் மீண்டும் என்னைக் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். 1986 ஜூலை 14, 15-ல் மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடத்த ஆணையிட்டார். மாபெரும் மன்றப் பேரணியை தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் புரட்சித்தலைவர் எனக்கு அளித்தார். மாநாட்டில் முத்தாய்ப்பாக புரட்சித்தலைவருக்கு ஆறடி உயர வெள்ளிச் செங்கோல் ஒன்றினை தலைமைக் கழகத்தின் சார்பில், அவரிடம் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். செங்கோலினைப் தலைவர் கரங்களில் அளித்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன், அந்த வெள்ளிச் செங்கோலை புரட்சித் தலைவர் என்னிடமே திருப்பி அளித்தபோது மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் அச்செய்கையை வரவேற்றுச் செய்த கரவொலி இன்றும் என் உள்ளத்தில் பசுமை மாறாத மகிழ்ச்சி நினைவாக உள்ளது.

    அந்நிகழ்ச்சியினைத் தான்தமிழ்நாட்டு மக்கள் தனக்குப் பின் தான் வகித்த பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டியது யார் எனப் புரட்சித்தலைவர் அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக கருதினர். 1986 செப்டம்பரில் தலைவர் உடல் நலம் மீண்டும் சீர்கெட்டது, எதிர்பாராத நேரத்தில் தமிழக ஒளிவிளக்கு அணைந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24-ம் நாள் மறைந்தார். தலைவர் மறைந்த துயரச் செய்தி என் காதுகளில் பேரிடியாக விழுந்தது.

    இராமாவரம் தோட்டத்தில் தலைவர் திருமுகத்தைப் பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. இராஜாஜி மண்டபத்தில் தலைவர் திருவுடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இரண்டு தினங்கள் தலைவர் தலைமாட்டிலேயே நின்றிருந்தேன். தலைவர் மறைவில் தளர்ந்து போன என் மீது இராஜாஜி மண்டபத்தில் பழிச் சொற்கள் என்னும் தேள் கொண்டு கொட்டினார்கள், இராணுவ வண்டியில் ஏறிய என்னைப் பிடித்திழுத்து கீழே தள்ளியதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

    என் உள்ளத்தில் புதிய உறுதிப்பாடு பூத்தது. கழக வரலாற்றில் ஓர் புத்தெழுச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிறுவிய இயக்கத்தையும் கழகத் தொண்டர்களையும் காப்பாற்ற எந்தத் தொல்லையையும் எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதென்று முடிவெடுத்தேன். ‘தற்காலிக முதல்வரான நாவலர் அந்தப் பொறுப்பில் தொடரட்டும், புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அப்படியே நீடிக்கட்டும், கட்சியில் யார், யார், எந்ததெந்தப் பொறுப்புகள் வகித்தனரோ அதே பொறுப்புகளில் அவர்களும் இருக்கட்டும்’ என்று தலைவர் நிறுவிய இயக்கத்தைக் கட்டிக்காக்க முயன்ற என் முயற்சியைக் கழகத்தில் சிலர் ஏற்கவில்லை.

    1987 டிசம்பர் 31-ம் நாள் நாவலர் முதலான மூத்த தலைவர்கள் கூடி முடிவு எடுத்து, கழகத்தின் பொதுச்செயலாளராக நான் பெறுப்பேற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் நள்ளிரவு 12 மணிக்கு நான் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப்பட்டேன். அதே வேகத்தோடு 1988 ஜனவரி முதல் நாள் காலையில் தலைமைக் கழகத்தில் கூடிய தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என் பெயரை பொதுச்செயலாளர் என முடிவெடுத்து அறிவித்தனர்.

    1988 ஜனவரி இரண்டாம் நாள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். கவர்னர் குரானா, ஜானகி அம்மையாரை அமைச்சரவை அமைக்க அழைத்தார், ஜானகி அம்மையார் முதலமைச்சரான சூழ்நிலையில் தான் என்னையும் கழக நிர்வாகிகளையும் தலைமைக் கழகத்தை விட்டு வெளியேற்றி தலைமைக் கழகம் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது.

    தலைமைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய என்னைக் கைது செய்து வேனில் ஏற்றினார்கள், சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்ததற்கு நேர்மாறாக என் இல்லத்திலே கொண்டு வந்து விட்டு விட்டு காவல் துறையினர் சென்றனர். புரட்சித்தலைவர் இயக்கத்தைக் காக்க நான் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘நால்வர் அணி’ என்ற பெயரில் சிலர் நம்மிடமிருந்து பிரிந்தனர். பூட்டிச் சீல் வைக்கப்பட்ட தலைமைக் கழகம் என் தலைமையில் அமைந்த கழகத்துக்கே சொந்தமென்ற தீர்ப்பு கிடைத்தது. தொண்டர்களிடம் புதிய உற்சாகம் பிறந்தது. தமிழ்நாட்டில் 1989-ம் ஆண்டு தேர்தலில், நான்கு முனைப் போட்டி நடந்தது.

    எதிர்க்கட்சித் தலைவர்

    1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நான் மக்களைச் சந்தித்து வந்த நிலையில், போடி நாயக்கனூரில் வெற்றி பெற்ற எனக்குப் பொது மக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான முதல் பெண் என்ற பெருமையைத் தந்தார்கள்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுப் பொலிவு பெற்றது. 1989-ல் இரண்டு அணிகளும் அதிகாரபூர்வமான முறையில் இணைந்து விட்டதால் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி சட்டமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு பெண்ணென்றும் பாராமல் என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்.

    ‘என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை, இனிமேல் இந்த ஆட்சி கலைக்கப்பட்ட பின்னால் தான் சட்டமன்றத்திற்கு வருவேன், அதுவும் முதலமைச்சராகத் தான் வருவேன்’ என்று சபதம் செய்து வெளியேறினேன்.

    1989 நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு. கழகத்துக்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் கழகக் கூட்டணி போட்டியிட்ட பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் 39-ஐ வென்றது. என்னைக் கொல்ல மேற்கொண்ட சதி வெற்றிபெறவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையால் மே 24-ம் நாள் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கழகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்தது.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இலட்சியத்தையும் கட்சியையும் கட்டிக்க காக்க என் மீது பகைவர்களும், ஏன்? சில நேரங்களில் கழகத்திலிருந்து வெளியேறியவர்களும் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொண்டுள்ளேன்.

    ஜானகி அம்மையார் அணி என்றும், ‘நால்வர் அணி’ என்றும் ‘எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம்’ என்றும், ‘போட்டி அண்ணா தி.மு.க.’ என்றும் வேறுபட்டவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் திரும்பிக் கழகத்தில் இணைய விரும்பிய போது இன்று வரை பெரிய உள்ளத்தோடு நடந்து கொண்டுள்ளேன் என்பது கழக வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும்.

    இப்படிக்கு உங்களின் அன்புச் சகோதரி,

    செல்வி ஜெ. ஜெயலலிதா.

    கே.சங்கர் அஇஅதிமுக சென்னை முகநூல்

  7. #3426
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    இந்தியாவின் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண். சென்னையிலேயே வைத்து இதைச் சொன்னார். அந்த செய்திக்கான லிங்க் :
    http://tamil.oneindia.com/news/tamil...98-269198.html

    அதை சோ மறுக்கவில்லை. இப்போதும் மிடாஸ் நிறுவனத்தில் சோவின் மகன் ஒரு இயக்குநர். நான் ஏற்கனவே மேலே உள்ள பதிவில் சொன்னபடி சில மாதங்கள் முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் இது செய்தியாக வந்தது. இதையும் சோ மறுக்கவில்லை. சோ, மற்றும் அவரது மகனின் வியாபாரத் தொடர்பை காட்டும் வரைபடம். நக்கீரன் பத்திரிகையில் வந்தது.



    இதற்கும் சோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

    நேற்று (7-ம் தேதி) மறைந்த சோவின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த செய்திக்கான தினத்தந்தி பத்திரிகை லிங்க்:

    மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
    http://www.dailythanthi.com/News/Sta...a--tribute.vpf

    என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சுப்பிரமணிய சாமி போட்டிபோட்டபோது அவருக்கு ஓட்டுப் போட வாசகர்களை தனது துக்ளக் பத்திரிகையில் கேட்டுக் கொண்டார். சு.சாமி எவ்வளவு பெரிய ஜெகஜால புரட்டர் என்று இந்தியாவுக்கே தெரியும். யாராவது அப்படியா? என்று கேட்டால் விவரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த சு.சாமி, சோவுக்கு நண்பர். அந்த சு.சாமிக்கு மறைந்த சந்திரா சாமி என்ற சாமியார் நண்பர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பி விட்டு ஊரை ஏமாற்றியவர் சந்திரா சாமி. அவரும் ஒரு அரசியல் புரோக்கர்.

    ஒருவர் இறந்துவிட்டால் எதிரியாவே இருந்தாலும் இரங்கல் தெரிவிப்பது தமிழனின் பண்பாடு. சோ-வின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு, பல விஷயங்கள தெரிஞ்சு கொள்ள முடிந்தது. நன்றி.

  8. #3427
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நண்பர் திரு. மகாலிங்கம் மூப்பனார் அவர்கள் நடிகர் சோ அவர்கள் தெரிவித்த
    (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய) கருத்துக்கள் பற்றிய பதிவுகள் அருமை.

    ராஜாஜி ஹாலில் டிசம்பர் 1987 என்பதற்கு பதிலாக 1984 என்று தவறாக
    அடுத்த பதிவில் செய்தி பதிவானதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
    நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு, முகநூலில் இருந்ததை எடுத்து போட்டுவிட்டேன். நானும் சரியா கவனிக்கவில்லை. நீங்கள் சொன்னது சரியே. 1987 என்றுதான் இருக்க வேண்டும். 1984 என்பது தவறு. முந்தைய பதிவிலும் தவறை சரி செய்து விட்டேன். கவனகப்படுத்தியதற்கு நன்றி.

  9. #3428
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!


    பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

    ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


    எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

    ‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


    வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

    ‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


    சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

    Courtesy - blaganesh - net

  10. #3429
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று மக்கள் திலகத்தின் ''பெற்றால்தான் பிள்ளையா '' 9.12.1966 பொன்விழா ஆண்டை நிறைவு செய்கிறது .
    மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் '' 9.12.1971 45 ஆன்டுகள் நிறைவு செய்கிறது .

  11. #3430
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    -‘நடிகன் குரல்’ பத்திரிகையில் எம்.ஜி.ஆர்.


    சினிமா விமர்சனங்களும், நடிகனும்..!

    கலைஞன் யார்? கலைஞனுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? பத்திரிகைகள் செய்ய வேண்டியதென்ன? இவற்றைச் சிறிது ஊன்றிக் கவனிப்போம்.

    மக்களுக்கும் கலைஞனுக்கும் பிரதிநிதியாக நின்று அவர்கள் ஒருவரோடொருவரை இணைப்பதுதான் பத்திரிகை. இந்த வகையில் பத்திரிகைகள் பல அரும்பெரும் தொண்டுகளைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பற்றிக் கவனிப்போம்.

    ஒரு பத்திரிகையில் ஒரு கட்டத்தில் எனது நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று காணப்படும். அடு்த்து ஒரு பத்திரிகையின் விமர்சனத்தில் அந்தக் கட்டத்தி்ல் எனது நடிப்பு மோசமாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். மூன்றாவது பத்திரிகையிலோ மோசம், அற்புதம் இரண்டுக்கும் பொதுவாக ‘சுமார்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.


    இந்த மூன்று விமர்சனங்களில் நடிகன் எதை நம்புவது? எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது? அவனுக்கு மூளையே குழம்பிப் போய்விடும்.

    நமது தமிழ்நாட்டில் சினிமா விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி இங்கிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கலைஞர்களைப் பற்றி எழுதுவதிலோ சில முறைகளை வரையறை செய்து கொண்டு, அதன்படி எழுத முயற்சிக்க வேண்டும்.

    தவிர, விமர்சனம் எழுதும் போது நடிகனது சூழ்நிலை, நடிக்கும் கட்டத்தின் தன்மை மற்றும் இதுபோன்ற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •