-
11th May 2017, 01:33 PM
#11
அன்பு வாசுதேவன் சார்,
சற்று இடைவெளிக்குப்பின் தங்களின் புத்தம்புது பதிவான 'தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு' பாடலின் விவரணை கண்டு சொக்கிப்போனேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் பரவச நிலை, அதை தலைவர் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மட்டுமே நீங்களும், கோபால் சாரும், முரளி சாரும் தர முடியும்.
பாட்டும் பரதமும் படத்தின் அத்தனை பாடல்களும் தேன் சொட்டு என்றால் மிகையாகாது.
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
தெய்வத்தின் தேரெடுத்து
உலகம் நீயாடும் சோலை
என ஒவ்வொரு பாடலும் அருமையோ அருமை.
நடிகர்திலகத்தின் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் பெரும்பாலும் டூயட் பாடல் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒன்றேயொன்று வைப்பார்கள். இப்படத்தில் மூன்று பாடல்களில் இணையாக தோன்றுவது மனதுக்கு இதமாக இருந்தது.
இப்படத்தின் துவக்கம் முதல் அண்டர் கரண்ட் என்பது போல ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கும். அதுவே படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும்.
பாடலின் ஒவ்வொரு வரியையும் வார்த்தைகளையும் அற்புதமாக அலசியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது எழுதியவரின் படைப்பாற்றல், இசையமைத்தவரின் அசாத்திய திறமை, பாடியவரின் அபார பங்களிப்பு என்று அனைத்தையும் விவரித்துள்ளீர்கள். நிச்சயமாக டி. எம். எஸ். தவிர வேறு யாரும் இந்தப்பாடலை அவ்வளவு ஜீவனோடு பாடியிருக்க முடியவே முடியாது. உச்ச ஸ்தாயியில் 'கற்பனைக்கு மேனி தந்து' என்று அவர் துவங்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்து விடும். பாடல் முடியும் வரை அந்த பரவசம் அடங்காது. பாடலின் இடையே கதையின் முக்கிய பாத்திரங்களான மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, மனோகர் ஆகியோர் மறைந்து விட்டதை காண்பிக்கும்போது நம் சோகம் இன்னும் அதிகரிக்கும். கதாநாயகியையும் காணவில்லை, கதாபாத்திரங்களும் மறைந்து விட்டனர். மேற்கொண்டு கதை எப்படி நகருமோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள நம் ஆவல் அதிகரிக்கும்.
சிறப்பான திறனாய்வுக்கு பாராட்டுக்கள்.
இதுபோன்ற சிறப்பு பதிவுகளுடன் அடிக்கடி வருகை தாருங்கள்.
Last edited by adiram; 11th May 2017 at 01:36 PM.
-
11th May 2017 01:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks