-
21st July 2017, 08:42 AM
#11
Senior Member
Diamond Hubber
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நின்ற, நிற்கும் திலகமே!
உயர்ந்த மனிதனே!
தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான தெய்வ மகனே!
இன்று உன் நினைவு நாள்.
உன் பிள்ளைகளின் கண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆறாகப் பெருகி புனித கங்கையில் கலக்கும்.
நீ இல்லாத உலகில் நாங்கள் எதற்கு என்று இன்றும் மனம் ஓடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உதாரண புருஷன் நீ
ஒவ்வொரு நடிகனுக்கும் பேராசிரியன் நீ
ஒவ்வொரு ரசிகனுக்கும் கடவுள் நீ
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாச மலர் நீ
உனக்கும் எங்களுக்கும் ஏற்பட்டது ரத்த பந்தமல்ல
அது சுத்த பந்தம். பித்த பந்தம்.
கோவில்களுக்கு நாங்கள் சென்றது இல்லை
உன் இல்லம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு கோவில்?
உன் உள்ளம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு தெய்வம்?
எண்ணிலடங்கா அன்பு உறவுகளை அளித்துச் சென்றாய்
எவரும் எட்டாத பெருமையை எங்களுக்கு கொடுத்துச் சென்றாய்
முக்காலமும் எக்காலமும் உனை நினைக்கும் அருள் தந்தாய்
உடன் முடிவில்லா துயரத்தையும் தந்து விட்டுச் சென்றாயே!
தினம் தினம் நெஞ்சு துடித்தாலும் நேற்றிலிருந்து நெஞ்சு அடைக்கிறதே!
திரண்டு வரும் கண்ணீர்த் திவலைகளை திருப்பி அனுப்ப முடியலையே!
திரும்பிய பக்கமெல்லாம் காட்சியளிக்கும் எங்கள் திருவரங்கனே!
திக்கற்ற பிள்ளைகளாய் திகைக்க வைத்து சென்ற நாளலல்லவோ இன்று!
ஒவ்வொரு இதயமும் தெய்வமே தெய்வமே என்று கதறுகிறதே!
உன் காதில் விழவில்லையா?
தெய்வத்திற்குத்தான் கல்மனது என்றால் உனக்குமா?
ஒரே ஒரு முறை எழுந்து வந்து உன் 'ஓங்கார'மிட்டு சென்றுவிடு
'காரணமின்றி என் கண்களில் கண்ணீர் வந்தால்
நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்'
என நண்பர் திருப்பதிசாமி நேற்று பதித்திருந்தாரே
அது எவ்வளவு நிஜம்! அது அவருக்கு மட்டுமா?
உன் பிள்ளைகள் அனைவருக்கும்தானே!
மனிதப் புனிதர்கள் பலருண்டு.. சொல்லக் கேட்டிருக்கிறோம்
ஆனால் உன்னை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறோம்
பாசச் சோற்றை நடிப்புப் பாலுடன் எங்களுக்கு ஊட்டிய
எங்கள் தாயே! தந்தையே! அண்ணனே! குருவே! இறைவனே!
எமனுடன் சில நாட்கள் போராடி நீ சென்றுவிட்டாய்
நாங்கள் உன் நினைவால் தினம் தினம் அவனுடன் போராடுகிறோமே!
அது புரியாமல் நீ ஏன் அங்கு விரைந்து சென்றாய்
'சொர்க்கம்' என்றால் என்ன என்று படத்திலும், நிஜத்திலும் காட்டியவன் நீ அன்றோ!
நிஜ சொர்க்கமே நீ அங்கு போன பின்புதானே உண்மையான சொர்க்கமாயிற்று!
நாங்கள் இன்று வரை உயிரோடிருக்க காரணம் உன் காவியங்கள்தானே!
உன் நினைவுகள்தானே!
தந்தை இல்லாமல் பிரிந்த குடும்பங்கள் பல உண்டு
நீ இல்லாமல் சேர்ந்த ஒற்றுமை குடும்பங்கள் நாங்கள்
திருக்குறளுக்குப் பிறகு நீ ஒருவன்தான்
அத்தனை பேருக்கும் பொது.
நீ வராவிட்டால் போ. எங்களுக்கு ஒன்றும் இல்லை
வெறும் உன் உடலை மட்டும்தானே இழந்தோம்
அதனால் கர்வம் கொள்ளாதே
எங்களுள் புதைந்து கிடைக்கும் உன் நினைவை எவ்வாறு அழிப்பாய்?
நீ என்ன செய்திருக்க வேண்டும்?
ஒன்று எங்களுடன் இருந்திருக்க வேண்டும்...இல்லை எங்களை உன்னுடன்
கூட்டிச் சென்றிருக்க வேண்டும். செய்தாயா?
நிர்க்கதியாய் நிற்க வைத்து நிர்மூலமாக்கி நீ சென்ற நாள் இன்று
காட்டுவாசிகள் மத்தியில் கனிவான மனிதன் நீ
மதங்களைத் தாண்டிய கடவுள் நீ
மனங்களை வென்ற மகா புருஷன் நீ
மனிதரில் நீ மாணிக்கமல்ல. நீ ஒருவன்தான் மனிதனே!
உடல் குலுங்க, மனம் வெம்பி தாங்கவொண்ணாமல் அழுகிறேன்
இல்லை அழுகிறோம்... துவள்கிறோம் இன்று
கட்டுப்படுத்த முடியாமல் கதறுகிறோம் இன்று
எங்களின் கண்ணீர்க் கடலில் உன் கப்பலை விடவாவது
வந்து விடேன்.
மண்ணில் பிறந்த யாரும் நீயாக முடியாது
மனதிலிருந்து நீக்க உன்னாலும் முடியாது
முடியாமல் முடிக்கிறேன். உன் நினைவுகளோடு முடிவேன். உன் நினைவுகளோடேயே மடிவேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
21st July 2017 08:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks