பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part II
இனி இரண்டாம் பகுதியாக பாச மலர் படம் எப்படி உருவாக்கப்பட்டிருகின்றது என்பதை காண்போம்.
பாச மலர் என்று சொன்னால் அனைவரும் அறிவர் அது சகோதர பாசத்தை முன்னிறுத்திய குடும்ப சூழலில் நடைபெறும் கதை. கருப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட காவியம். அன்றைய நாளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடக்கூடிய படம்.
இன்று வரை அதன் நெகடிவ் நல்ல முறையில் நல்ல condition-ல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதே மகிழ்வுக்குரிய செய்தி. படத்தை அதன் தரம் குறையாமல், வீரியம் கெடாமல் ஸ்கோப் format -ல் மாற்றியிருக்கிறார்கள். திருவிளையாடலை தவிர்த்து விட்டு பார்த்தால் பாச மலர்தான் அடுத்த இடத்தை பிடிக்கும். யார் யார் யார் அவள் யாரோ பாடலில் ஒரு சில நொடிகள் வந்து போகும் இரண்டு ஷாட்களை தவிர வேறு எந்த frame-ம் conversion-ல் அடிபடவில்லை.
கருப்பு வெள்ளை படங்களுக்கே ஒரு depth உண்டு. அது இந்த format-ல் சரியாக அமைந்திருக்கிறது. படத்தின் நீளம் தற்கால தேவைக்கேற்ப குறைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற trimming செய்யும் போது பொதுவாக ஹீரோவின் ஸின்களில் கத்திரி வைக்க மாட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அல்லவா நமது நடிகர் திலகம். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் நீளமும் trim செய்யப்பட்டிருக்கிறது. பாட்டொன்று கேட்டேன் பாடலில் ஓரு சில ஷாட்கள் பாடலின் அனுபல்லவி repeat ஆகும் இடங்கள், நடிகர் திலகம் நம்பியாரிடம் கோவப்பட்டு பேசிய காட்சிக்கு அடுத்து நம்பியார் தன சொத்தையெல்லாம் தங்கை ராஜத்தின் பெயருக்கு மாற்றி கொண்டு கொடுக்கும் காட்சியின் தொடக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டு மூன்று ஷாட்கள் நீக்கப்பட்டு நம்பியார் எம்.என்.ராஜத்திற்கு வெளிநாட்டில் போய் படிக்கும் வாய்ப்பு வந்திருக்கும் லெட்டரை கொடுக்கும் காட்சிக்கு நேராக சென்று விடுவது போல் எடிட் செய்யப்பட்டிருகிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் ரீ ரெகார்டிங் போன்ற முக்கியமான விஷயங்களில் கை வைக்கவில்லை எனபது பெரும் மகிழ்வுக்கு உரிய விஷயம். அதில் கை வைக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை, ஏற்பட அந்த நாட்களிலேயே மெல்லிசை மன்னர்கள் விடவில்லை என்பதுதான் உண்மை. படத்தின் முக்கியமான பாடல்கள் குறிப்பாக மலர்ந்தும் மலராத, மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் போன்ற பாடல்கள் அகண்ட திரையில் ஓடும் படத்தோடு கச்சிதமாக பொருந்தி கேட்ட இனிமை இருக்கிறதே. அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அதிலும் குறிப்பாக இசையரசியின் குரல் தேனாக வந்து காதில் ஒலிக்கின்றது.
அன்றைய நாளில் படத்திற்கு தேவையாக இருந்தது தங்கவேலு எம்.சரோஜா நகைசுவை காட்சிகள். இன்றைய நாட்களில் அந்த காட்சிகள் எங்கெல்லாம் சற்று தொய்வை ஏற்படுத்துமோ அந்த இடங்களிலெல்லாம் நீளத்தை சற்றே குறைத்து ட்ரிம் செய்திருக்கிறார்கள்.
இதுவரையில் 35 mm-ல் மட்டுமே பார்த்திருந்த இந்த படத்தை சினிமாஸ்கோப் வடிவில் பார்த்தபோதும் வசனங்களையும் பாடல்களையும் stereo sound-ல் கேட்கும்போது அற்புதமாக இருந்தது. குறிப்பாக திலகம் மற்றும் ஜெமினி இடையில் தொழிற்சாலையில் வைத்து நடைபெறும் வாக்குவாத காட்சி, தோட்டத்தில் ஜெமினியும் சாவித்திரியும் பேசிக் கொண்டிருக்க நடிகர் திலகம் ஆத்திரத்துடன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து விட்டு தங்கையின் பேச்சை கேட்டு மனம் மாறும் காட்சி, சாவித்திரியின் பிறந்த நாள் காட்சியில் வரும் சில காமிரா கோணங்கள், மலர்ந்தும் மலராத பாடல் காட்சி இவை அனைத்தும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
ஆக scope format, கருப்பு வெள்ளையின் depth, தேவையான trimming ஆனால் படத்தின் மெயின் கதைக்கோ காட்சிகளுக்கோ பங்கம் வராமல், சேதமில்லாமல் செய்யப்பட்ட மெருகேற்றல் என்று அனைத்து அம்சங்களும் நிறைவாக அமைந்திருக்கின்றன. பாசமலர் படத்திற்கு ஸ்கோப் தேவையா என்று தொடுக்கப்பட்ட கேள்விக்கு கூட பதில் என்னவென்றால் இது போன்ற கருப்பு வெள்ளை காவியங்களுக்கும் கூட மெருகேற்றல் நடந்தால் அது அடுத்து வரும் தலைமுறைகளிடம் பத்திரமாக சரியான முறையில் போய் சேரும் எனபதுதான்.
(தொடரும்)
அன்புடன்