-
11th December 2014, 07:56 PM
#11
Junior Member
Platinum Hubber
அடிமைப்பெண் விமர்சனம் by JEEVANANTHAM.
வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.
செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...
இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.
பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.
ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.
கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது
-
11th December 2014 07:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks