-
9th July 2015, 11:20 PM
#11
Junior Member
Diamond Hubber
ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வெளியான "பாபநாசம்' படம் அனைத்துத் தரப்பினரிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு நல்ல படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. இதை ரசிகர்களிடம் எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கும் நன்றி. அடுத்து வரும் ஒரு நல்ல படத்துக்கும் இதைச் செய்ய வேண்டும் என்பதற்கான அச்சாரம்தான் இந்த நிகழ்ச்சி. அது என் படமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திறமை மிகுந்த எந்தவொரு கலைஞனின் படமாகவும் அது இருக்கலாம்.
மோகன்லால் பரிந்துரை: நல்ல படங்களை ரசிகர்கள் இப்படி தூக்கிப் பிடிப்பது தொடருமானால், மீண்டும் மீண்டும் நல்ல படங்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கும். இந்த நேரத்தில் இன்னொரு நபருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் நடிகர் மோகன்லால். அவர்தான் இந்தப் படத்தில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அந்த பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் அவருக்கு நன்றி.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதன் காரணமாகத்தான் எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இது போன்ற கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் எல்லோருக்கும் குறைவுதான். அதனால்தான் இந்த நன்றி.
காலம் கடந்து சில படங்கள் கொண்டாடப்படும். அதனால் யாருக்கும் பயன் இல்லை. காலத்தால் செய்த நல்ல விஷயங்கள் என்னைப் போன்ற கலைஞர்களையும், தமிழ் சினிமாவையும் வாழ வைக்கும் என நினைக்கிறேன்.
சினிமாவுக்கு மொழி கிடையாது: இந்தப் படத்தில் நாங்கள் கொடுத்த அளப்பறிய உழைப்புக்கு, வியர்வைக்கு தமிழ் ரசிகர்கள் சரியான சன்மானம் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் அவர்களுக்கு நன்றி. சினிமாவுக்கு மொழி கிடையாது.
அப்படிப் பார்த்திருந்தால் எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். மொழி என்பதெல்லாம் வெறும் முகவரிதான். திறமையாகாது. கலைக்கு மட்டும்தான் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. எளிய மனிதர்களின் கதையை எடுத்துதான் என்னை முன் நிறுத்தினார் என் குரு கே.பாலசந்தர்.
"தசாவதாரம்', "விஸ்வரூபம்' போன்ற படங்களில் நான் முன் நிறுத்தப்படவில்லை. என்னை நான் குழந்தையாகப் பார்த்தவன். எனக்கு பெரிய அடையாளங்கள் இல்லை.
என்னுடைய பெயர் நடிகன் அவ்வளவுதான். கமல் என்று சொல்லும்போது ஏதோ வேறு ஒரு நபரை சொல்லுவது போல இருக்கும். நல்ல நடிகன் என்று சொல்லும்போதும், நல்ல கலைஞன் என்று சொல்லும் போதும்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
"பாபநாசம்' படத்துக்கு ஏன் வரி விலக்கு கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டு விட்டன. அந்த விளக்கங்கள் எல்லாம் நியாயமானதாகத் தெரிகிறது என்றார் கமல்ஹாசன்.
-
9th July 2015 11:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks