-
23rd October 2012, 10:54 PM
#11
கோபால்,
நீலவானம் பற்றி பார்த்தவர்கள் எழுதலாமே என்று ஒரு வரி போட்டு விட்டீர்கள். நான் ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு நீண்ட ஆய்வை இந்த திரியில் எழுதியுள்ளேன் இந்தப் படத்தை பற்றிய ஒரு awareness பலருக்கும் ஏற்பட வேண்டும் என்று ஏராளமான நபர்களுக்கு அந்த கட்டுரையையும் அனுப்பி வைத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால ராகவேந்தர் போன்றவர்கள் என்னைப் பற்றி சொல்லும்போது இந்தப்படத்தையும் ஆண்டவன் கட்டளை படத்தையும் நான் எப்படி promote செய்தேன் என்று வெளியுலக நண்பர்களிடம் அடிக்கடி கூறுவர். அந்தளவிற்கு என்னை ஈர்த்த படம். என்னவோ தெரியவில்லை 1964 முதல் 1969 வரை வெளிவந்த சில பல நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றில் ஒரு சில பெரிய வெற்றியை பெறாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவை எனக்கு மிகவும் பிடித்தவை. அதில் நீலவானத்திற்கு தனி இடம் உண்டு.
ஆரம்பம் முதல் முடிவு வரை நாயகியை முன்னிறுத்திய படம் என்ற போதிலும் எவ்வளவு வலிமையாக தன முத்திரையை ஆழமாக அதே சமயம் அமைதியாக பதித்திருக்கிறார் நடிகர் திலகம் என்றே எனக்கு வியக்க தோன்றும். அனாயாசமான நகைச்சுவை எல்லாம் தண்ணீர் பட்ட பாடாக பண்ணியிருப்பார். ராஜஸ்ரீயிடம் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் விதம் பற்றி A ரோ B ரோ C ரோ என்ற கமன்ட், மில்லில் வேலை கிடைத்தவுடன் அறை நண்பன் I S R-யிடம் இனிமேல் டிக்கெட் கிழிக்க வேண்டியதில்லை கால் மேல் கால் போட்டு நாற்காலியில் உட்காருவேன் என்று சொல்லிக்கொண்டே மறந்து போய் ஓட்டை easy chair-ல் உட்கார்ந்து விழுவது எல்லாம் அதற்கு உதாரணம்.
குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ராமசாமி, கந்தசாமி கருப்புசாமி என தேவிகாவை கிண்டல் அடிப்பது, உங்க அப்பா பெயரை வைக்கலாம் என்று தேவிகா சொல்லிவிட்டு உங்க அப்பா பெயர் என்ன என்று கேட்க பிச்சைகண்ணு என்று சொல்லிவிட்டு நல்லாயில்லைலே என்று மீண்டும் சிரித்துக் கொண்டே கிண்டலடிப்பது எல்லாமே ரசனை.
நீங்கள் குறிப்பிட்டது போல் கொடைக்கானலில் அந்த குச்சி ஐஸ் சாப்பிடும் காட்சி கவிதை. மனைவி விரும்பி கேட்கிறாள் என்று தெரிந்தவுடன் இதுவா என்று ஒரு வித பிடிக்காத பாவத்துடன் யாராவது பார்த்து விட்டால் என்ற தர்மசங்கடத்துடன் முகத்தின் ஒரு பகுதியை கர்சீப்-பால் மூடிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவுடன் எதிரில் நிற்கும் ஆளை பார்த்தவுடன் [ஒரு குழந்தை] அப்படியே அந்த சங்கடம் நீங்கி சந்தோஷமாக சிரிப்பாரே என்ன அருமையான வெளிப்பாடு?
நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு விஷயம் வசனம். உண்மை, அந்த novaljin வசனத்தை விட்டு விட்டால் படு இயல்பு. தன் மகளை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்கும் முதலாளியிடம் பேசும் "வைத்தியம் பார்க்க வேண்டிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணறேன்-னு சொல்லுறீங்களே" அதில் ஒன்று. அதே காட்சியில் தன் காதலிக்கு துரோகம் செய்ய முடியாது என்று நடிகர் திலகம் கூற அதற்கு சஹஸ்ரநாமம் சொல்லும் "துரோகம்-ங்கிற வார்த்தையை நீ சொன்னா தியாகம்-ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல போயிடும்" மற்றொரு சாம்பிள்.
படத்தின் இறுதிப் பகுதியில் தேவிகாவிற்கு உண்மை தெரிந்தவுடன் [உண்மை என்றால் சிவாஜி ராஜஸ்ரீயை காதலித்தது, தனக்கு கான்சர் இருப்பது] அவர் நடிகர் திலகத்திடம் நான் கர்ப்பிணி என்று சொன்னதையும் பொய்னு சொல்லிடாதீங்க என்று கெஞ்சி விட்டு, பொய்யா? என்று கேட்க பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு நடிகர் திலகம் ஆமாம் என்று தலையாட்ட ஏன் அப்படி சொன்னீங்க என்று தேவிகா கேட்க நீ சந்தோஷமா இருக்கணும்-னு டாக்டர் சொன்னதனால பொய் சொன்னேன் என்று நடிகர் திலகம் சொல்ல "என்கிட்டே நீங்க பொய்யை தவிர வேற ஒண்ணுமே சொன்னதில்லையா" என்று விரக்தியாக கேட்கும் இடம் அப்படியே மனதில் தைத்து விடும்.
வாங்க என்ற வெறும் ஒரு வார்த்தையை மட்டும் பேசி ஒரு மனிதனால் அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் ஆகர்ஷிக்க முடியுமா? முடியும் என காட்டியிருப்பார் நமது நடிகர் திலகம். [இதை எழுதும் போது என் அருகில் அமர்ந்து படம் பார்த்த நமது அருமை நண்பர் பார்த்தசாரதி அடித்த கமன்ட் நினைவிற்கு வருகிறது. "நீங்க அவர் ஒரு வார்த்தை வசனம் பேசுவதற்கு போயிட்டீங்க. ஒண்ணுமே பேசாம தலையில் ஒரு round hat கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டு காலை மட்டும் வளைச்சு நிப்பார். தியேட்டரே அதிரும்"].
இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்.பிறிதொரு நாளில் பிறிதொரு நேரத்தில் பேசலாம்.
அன்புடன்
-
23rd October 2012 10:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks