சில மாதங்களுக்கு முன் புரட்சித் தலைவரின் இந்தப் படத்தைப் பதிவேற்றம் செய்து இதனை வரைந்த ஓவியர் பற்றிய விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்கும் படி கேட்டிருந்தேன். மக்கள் திலகம் அவர்களுக்கு இந்தப் படத்தை அதைவரைந்த ஓவியர் அவர்களே பரிசளித்தார் என்றும் அதனைப் பார்த்துப் பிரமித்துப் போன எம்.ஜி.ஆர். தனது தாயாரின் படத்தை வரைந்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார் என்றும் அவரது கோரிக்கையை ஓவியர் நிறைவேற்றினார் என்றும் வெகு நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் படித்திருந்தேன். அதை பாதுகாப்பாகவும் வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அந்தப் பத்திரிக்கை தொகுப்பு என் கையை விட்டுச் சென்று விட்டது. அதுபற்றிய விவரங்கள் வேறு யாரிடமிருந்தாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதனை இத்திரியில் பதிவு செய்திருந்தேன். தற்போது இணையதளத்தின் மூலமாக அதுபற்றிய செய்திகள் கிடைக்கப்பெறவே அதனை இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் ஓவிய மேதை திரு.கருப்பைய்யா அவர்கள். புரட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும் அவருக்கு மேல் அறிஞர் அண்ணா அவர்களது உருவத்தையும் அழகுற வடிவமைத்திருந்தார் ஓவியர் கருப்பைய்யா. அதன் அழகில் மயங்கிய மக்கள் திலகம் தனது தாயாரின் ஓவியத்தை வரைந்து கொடுக்கும் படி பணித்தார்.
அவர் வரைந்து கொடுத்த தன் அன்னையின் ஓவியத்தை தன் வாழ்நாள் முழுவதும் தனது அலுவலகத்தின் தனது இருக்கையின் அருகிலேயே வைத்து மகிழ்ந்தார். இன்னமும் அந்த ஓவியம் மக்கள் திலகத்தின் நினைவு இல்லத்தில் காட்சிப் பொருளாக அவரது இருக்கையின் அருகிலேயே அவர் வைத்திருந்த நிலையிலேயே உள்ளது.
![]()












Bookmarks