-
16th March 2015, 09:17 PM
#11
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
இந்த விவாதத்தை நான் வளர்க்க விரும்பவில்லை. தவறான புரிதலை தடுக்க ஒரு சில விளக்கங்கள் மட்டும்.
நண்பர் வினோத் வேண்டுமென்றே சொன்னார் என்பதை குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. நான் மீள் பதிவு செய்த சகோதரர் லோகநாதனின் பதிவு 2014 ஆகஸ்ட் 23 அன்றே எம்ஜிஆர் திரியின் பாகம் 10-ல் வந்து விட்டது. அதை பார்த்த பிறகும் எத்தனை நாட்கள் என்ற விவரம் அவருக்கு exact -ஆக தெரிந்தும் கூட இப்படி எழுதுகிறாரே என்ற எண்ணத்தைதான் வேதனையோடு குறிப்பிடுகிறோம் என்று சொல்லியிருந்தேன்.
தினத்தந்தி விளம்பரம் பற்றி - பத்திரிக்கை விளமபரம் என்பது விநியோகஸ்தர் கொடுப்பது. அவர் அதை சரியாக கொடுத்தால் அது ஆவணமாக மாறுகிறது. தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அது சர்ச்சைக்குரிய ஒன்றாக போய்விடுகிறது. சத்யம் அரங்கில் 20.08.2014 புதன்கிழமையன்று ஆயிரத்தில் ஒருவன் கடைசி நாளாக திரையிடப்பட்டது. அதற்கு பிறகும் விளம்பரத்தில் அரங்கத்தின் பெயரை உள்படுத்துவது வெளியிட்டாளரின் மனசாட்சியை பொறுத்த விஷயம்.
இது ஒரு குறிப்பிட்ட வெளியிட்டாளரின் குற்றமாக சொல்ல விரும்பவில்லை. சில வெளியிட்டாளர்கள் தாங்கள் திரையிட்ட படம் அரங்கிலிருந்து எடுக்கப்பட்ட பிறகும் விளம்பரங்களில் தொடர்ந்து அரங்குகளின் பெயரை உள்படுத்துவது என்பது நாம் கண்டு வருவதுதான். இரண்டு உதாரணங்களை சொல்லலாம். சென்ற வருட இறுதியில் திரையிடப்பட ஒரு படம் ஆல்பட் வளாகத்தில் ஓடுவதாக விளமபரம் வருகிறது. ஆனால் அரங்கிற்கு சென்றால் படம் இல்லை என்று சொல்கிறார்கள். அதே போன்று சென்ற வெள்ளி முதல் சங்கராபரணம் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு கண்டிருக்கிறது. விளமபரத்தில் சத்யம் அரங்கின் பெயர் இருக்கிறது. ஆனால் சத்யம் குழுமமே தினசரி பத்திரிக்கைகளில் கொடுக்கும் விளம்பரத்தில் சங்கராபரணம் இல்லை.
மாலைமலர் இதழில் விழா பற்றி வந்த செய்தி- ஒரு பத்திரிக்கையில் ஒரு செய்தி எப்படி வருகிறது எப்படி வரவழைக்கலாம் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு தேர்ந்த ஊடக தொடர்பாளர் இருந்தால் அவர் பத்திரிக்கைகளுக்கு கொடுக்கும் ஒரே செய்தியை [அவை சரியா தவறா என்று கூட சரி பார்க்காமல்] அப்படியே பல ஊடகங்கள் வெளியிடுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
ஆகஸ்ட் 31 அன்று சத்யம் அரங்கின் ஸ்டேடஸ் பற்றி - விழா நடந்தது செப்டம்பர் 1 அன்று. அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையில் ஒரு சிறப்புக் காட்சியாக படம் திரையிடப்பட்டது. அதன் ஆன் லைன் புக்கிங் ஸ்டேடஸ் [Online Booking Status ] பற்றிய பதிவைத்தான் நண்பர் ரூப்குமார் பதிவிட்டிருந்தார். அது ஒரு one day one off screening.
இனி வியாழக்கிழமைகளில் சத்யம் அரங்கில் நடக்கும் blind date screening. போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக சத்யத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இதுதான் நிலைமை என்று ஒரு வரி எழுதிவிட்டு போகிறீர்கள். நீங்கள் எதை உத்தேசித்து இதை எழுதியிருக்கிறீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
முதலில் Blind Date concept .பற்றி பேசி விடுவோம். முன்பே இதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை மீண்டும் எழுத காரணம் சத்யத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இது பாதகமாகும் என்று சொல்லி மறைமுகமாக கர்ணன் திரைப்படத்தையும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் நடவடிக்கையை தடுக்கவே.
Blind Date என்றால் டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கினுள் செல்லும் ரசிகனுக்கு படம் ஆரம்பிக்கும் வரை அது என்ன படம் என்பதே தெரியாது. வியாழக்கிழமைகளில் சத்யம் அரங்கில் நடக்கும் blind date ஸ்க்ரீனிங்ல் மாலைக் காட்சியில் மட்டும் மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் ஆங்கில படம் அல்லது சில நேரங்களில் ஹிந்தி படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்த முறையில் தமிழ் படம் திரையிடப்படாது.
சத்யம் வளாகத்தில் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. இதில் இருப்பதிலேயே பெரிய ஸ்க்ரீன்-லும் அதற்கடுத்த capacity உடைய ஸ்க்ரீன்-லும் இந்த Blind Date ஸ்க்ரீனிங் இடம் பெறாது. மீதமுள்ள capacity குறைந்த 4 அரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மாலைக் காட்சி மட்டும் இந்த திரையிடல் நடக்கும்.
கர்ணன் படத்திற்கு ஏன் இந்த இடையூறு வரவில்லையென்றால் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கர்ணன் படத்திற்கு நல்ல கூட்டம் இருந்தது. டிக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. இரண்டாவது காரணம் கர்ணன் மாலைக் காட்சியில் மட்டுமே ஓடவில்லை. ஒரு வாரம் மாலைக் காட்சி, அடுத்த வாரம் பகல் காட்சி, அதற்கடுத்த வாரம் நண்பகல் காட்சி பிறகு இரவுக் காட்சி என்று மாறி மாறி வந்தது. ஆனால் காட்சி நேரங்கள் எப்படி மாறினாலும் அனைத்துக் காட்சிகளுக்கும் கூட்டம் தானாக வந்தது.
இதை சொல்லும்போது கர்ணன் ஓடும்போது நடந்த ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. என்னுடன் வேலை செய்பவர் ஒரு நாள் இரவு காட்சிக்கு தன் மனைவியுடன் சத்யம் வளாகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்தை காண்பதற்காக ஸ்கூட்டரில் சென்ற அவர் வளாக வாசலில் தன் மனைவியை இறக்கி விட்டு படத்தின் பெயர் சொல்லி டிக்கெட் வாங்க சொல்லியிருக்கிறார். அருகில் நின்றிருந்த அரங்க ஊழியர் அந்தப் படம் எடுக்கப்பட்டு விட்டது என்பதை சொல்லியிருக்கிறார். எந்தப் படங்கள் ஓடுகிறது எதற்கு டிக்கெட் இருக்கிறது என்பதை டிக்கெட் கவுன்டரில் விசாரிக்கும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு நண்பர் ஸ்கூட்டரை நிறுத்த போயிருக்கிறார்.
வண்டியை நிறுத்தி விட்டு கவுன்ட்டர் இருக்கும் இடத்திற்கு சென்ற அவரிடம் அவர் மனைவி கர்ணன் படத்தை தவிர மற்ற அனைத்துப் படங்களுக்கும் டிக்கெட் இருப்பதாக சொல்ல அலுவலக நண்பர் நீ தப்பாக கேட்டிருப்பாய். கர்ணன் படத்திற்கு மட்டும் டிக்கெட் available -ஆக இருக்கும் என்று கமன்ட் அடிக்க கவுன்டரில் இருந்த ஊழியர் இல்லே சார், அவங்க சொன்னதுதான் சரி. கர்ணன் ஹவுஸ் புல். மத்த படத்துக்கெல்லாம் டிக்கெட் இருக்கு என்று சொல்ல அசந்து விட்டார் நண்பர். அவர் அப்படி ஆச்சரியபடுவதற்கு மற்றொரு காரணம் அப்போது கர்ணன் 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருந்த நேரம். மறுநாள் காலை அலுவலகம் வந்தவுடன் முதல் வேலையாக என்னை கூப்பிட்டு இந்த செய்தியை பகிர்ந்துக் கொண்டார். .
இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால் SPI Cinemas என்ற பெயரில் இயங்கும் சத்யம் குழுமம் வாராவாரம் தங்கள் அரங்குகளில் ஓடும் படங்கள பற்றிய விவரங்களை காட்சி நேரங்களை குறிப்பிட்டு அந்த தகவலை பெற விரும்பும் சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புவது வழக்கம். எனக்கும் வரும். அதில் சென்ற ஆகஸ்ட் 22 வெள்ளி முதல் ஓடும் படங்களின் விவரங்கள் இருக்கின்றன. அதில் ஆயிரத்தில் ஒருவன் இடம் பெறவில்லை. அதை கூட நான் உங்களுக்கு அனுப்ப தயார்.
நான் முதலில் சொன்னது போல் இந்த வாதத்தை நான் தொடர விரும்பவில்லை. நீங்கள் சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்ததால் இந்த நீண்ட பதில். இனி நீங்கள் இதற்கு என்ன எதிர் வினையாற்றினாலும் நான் அமைதி காப்பேன்
நன்றிகள் பல!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
16th March 2015 09:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks