-
30th September 2015, 11:02 PM
#11
Junior Member
Veteran Hubber
அன்புள்ளம் கொண்ட நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கு, முதலில் நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
சமீப காலமாக நடிகர் திலகம் திரியினில், மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் அரசியல் ஈடுபாடு பற்றி சில சர்ச்சைகளும், வாதங்களும் நடைபெற்று வருகின்றன. என்னைப் பொருத்தவரை இந்த வாதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறவன். இந்த சர்ச்சைகளை மேலும் வளர்க்க்காமல், ஊக்குவிக்கமால் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இருப்பினும், இந்த அரசியல் விவாதங்களில், என்னுடைய பெயரும் இடம் பெற்றிருப்பதால், ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னைப்பற்றி முழுவதும் அறிந்த அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள், நடிகர் திலகம் அவர்களின் தமிழர் முன்னேற்ற முன்னணி வெற்றிக்காக எந்த அளவு பாடுபட்டேன் என்று எழுதியதற்கு பதிலுரையாக, சகோதரர் திரு. திருச்சி பாஸ்கர் அவர்கள், " மாற்று திரி நண்பர் செலவு செய்தால் என்ன செலவு செய்யா விட்டால் என்ன, அதைப்பற்றி கவலையில்லை " என்ற தொனியில், விமர்சனம் செய்துள்ளார்.
நான் பணிபுரிந்த, மணலியில் உள்ள, சென்னை எண்ணெய் சுத்திகரிப்பாலை நிறுவனத்தில் ENCASHMENT OF EARNED LEAVE FACILITY இருந்தும், பல நாட்கள் தொடர்ந்து ஈட்டிய விடுப்பு (EARNED LEAVE) எடுத்துக்கொண்டு, உறக்கத்தை துறந்து, BONUS, INCENTIVE, FESTIVAL ADVANCE, LTA போன்றவைகள் மூலம் பெற்ற என் சொந்த பணத்தை அதிகமாக செலவழித்தது. எங்கள் புரட்சித்தலைவரின் அருமை மனைவி அன்னை ஜானகி அணியின் வேட்பாளருக்கல்ல ! இரட்டைபுறா சின்னத்துக்கும் அல்ல. நடிகர் திலகம் கட்சியான தமிழர் முன்னேற்ற முன்னணி சார்பாக ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் திரு. கே. வி. பி. பூமிநாதன் அவர்களுக்காக !
இதே போன்று, சிவாஜி ரசிகர்கள் அன்னை ஜானகி அணி வேட்பாளர்களுக்கு செலவு செய்திருந்தால் எனக்கென்ன ? என்று நான் திருப்பி கேட்டால், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கண்ட கூட்டணியின் தர்மத்துக்கு விரோதம் ஆகாதா ? இப்படி கேட்கும் ரசிகர்களை வைத்துக் கொண்டுதான் நடிகர் திலகமும் தேர்தலை சந்தித்துள்ளார். பின் எப்படி வெற்றி எதிர் பார்க்க முடியும் ?
காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலிருந்த காலத்தில் கூட,, கருவேப்பிலை மாதிரி தன்னை பயன்படுத்தி கொண்ட காலத்தில் கூட, சகிப்பு தன்மையுடன் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், அன்னை ஜானகி அவர்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில், அந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, அவருக்கு உறுதுணையாக உதவ முன் வந்த செயலினால் என் போன்ற மக்கள் திலகத்தின் தீவிர பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுவான அரசியல் நோக்கர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தது நிதர்சனமான உண்மை, அவரின் இந்த செயலினால் அவர் உயர்ந்துதான் நின்றார்.
அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம். நடிகர் திலகம் அவர்களும், அன்னை ஜானகி அவர்களும் முதன் முறையாக சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள். 1957ல் வெற்றி பெற்ற எங்கள் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962ல் தோற்க வில்லையா ? 1962ல் வெற்றி பெற்ற மறைதிரு. காமராஜர் 1967ல் தோற்க வில்லையா ? இத்தனைக்கும் இவர்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர்கள். அதனால் அவர்கள் அரசியல் ஈடுபாட்டை விமர்சனம் செய்ய முடியுமா ? உடனே, அவர்களுக்கு அரசியல்தான் முழு நேர தொழில் என்று நினைப்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும், தமிழகத்தில் கலைவாணர் முதற்கொண்டு இன்றைய நடிகர் விஜயகாந்த் வரை நடிகர்களின் அரசியல் ஈடுபாட்டினை மக்கள் ஒப்புக்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். இல்லையெனில், 1962;ல் இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் வெற்றி கண்டிருப்பாரா ?
ஆந்திர மாநிலத்தில் என்.டி. ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் வெற்றி பெற வில்லையா என்று ஒரு விதண்டா வாத ஒப்பீடு ! மறைதிரு. என்.டி. ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்து, தேர்தலை சந்தித்த போது ஆந்திர மாநிலத்தில் இருந்த சூழ்நிலை - தினம் ஒரு முதல் மந்திரியை (அஞ்சையா முதற் கொண்டு சென்னா ரெட்டி வரை) டெல்லி தலைமை மாற்றியதாலும், நிரவாகத்திறமை குன்றியதாலும், காங்கிரஸ் கட்சி முற்றிலும் செல்வாக்கிழந்திருந்தது. மேலும், அபோது ஆந்திர மாநிலத்தில் பலம் வாய்ந்த எதிர் கட்சி இல்லாமல் போனது தான். இந்த சாதகமான சூழ்நிலை நிலவிய போதுதான் மறைதிரு. என்.டி. ஆர். அவர்கள் வெற்றி பெற முடிந்தது. ஆனால், அவரும், அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றுப் போனார். ஆனால், தமிழகத்தில், நான்கு முனை போட்டி இருந்தது. பலம் வாய்ந்த கட்சிகள் இருந்தன.
பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனச்செம்மல் அவர்கள், காலமாவதற்கு சில நாட்கள் முன்பு, அவருக்கு துரோகம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்து, " தம்பி உனக்கு ஒரு பெரிய பொறுப்பினை வழங்கப் போகிறேன்" என்று கூறியதாக, சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், தமிழக அரசியலில் நடிகர் திலகம் அவர்கள் பிரகாசித்திருப்பார்.
எங்கள் மக்கள் திலகம் 1972ல் தி. மு. க. வை விட்டு நீக்கப்பட்ட பின்பு, என் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் நிர்ப்பந்தத்தால் புதிய கட்சி ஆரம்பித்தார். அதற்கு பிறகு, அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் எங்கள் வேத வாக்கு. அவர் 1980ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்த போதும் ரசிகர்கள் அனைவரும் அவரை விமர்சனம் செய்ததில்லை. சில பதவி சுகம் கண்ட அரசியல் வாதிகளான துரோகிகள் மட்டுமே விலகினர். எந்த ஒரு எம். ஜி. ஆர். ரசிகனும் அவரை விட்டு விலக வில்லை. இன்னும், சொல்லப்போனால், முன்பை விட அதி தீவிர விசுவாசிகளாக மாறினர். இதையெல்லாம், எதற்கு சொல்கிறேன் என்றால், தலைவர் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதனை உறுதியாக பின்பற்றுவன்தான் உண்மையான தொண்டன். அதை விடுத்து, இறந்த பின்பு, நடிகர் திலகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவன் உண்மையான சிவாஜி ரசிகனாக இருக்க மாட்டான்.
அவரை பற்றிய மரியாதைக்குறைவான விமர்சனம் செய்வதற்கு (அதுவும் நடிகர் திலகம் திரியினிலேயே) , சிவாஜி ரசிகன் என்ற போர்வை தேவை தானா ? அப்படி தாங்கள் விமர்சிப்பதை மறைப்பதற்காக, நாங்கள் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை எதோ நாங்கள் கடுமையாக விமர்சிப்பது போல ஒரு போலித்தோற்றத்தை உருவாக்குவது சரிதானா ? நீங்கள் நடிகர் திலகத்தை குற்றம் சாட்டும் அளவுக்கு கூட நாங்கள் விமர்சனம் செய்ததில்லை. அதுவும், நீங்கள் மக்கள் திலகத்தை விமர்சிக்கும் போதுதான் சில உணர்ச்சிகரமான, ஆக்ரோஷமான பதில் கூற நேர்கிறது.
திரு. ராகவேந்திரா மற்றும் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் நட்புணர்வுடன் இருப்பது பிடிக்க வில்லை போல் தெரிகிறது. இரு திரிகளுக்குள்ளும், சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
நடிகர் திலகத்தை உண்மையிலேயே நேசிக்கும் அவரது ரசிகர்களே ! சற்று சிந்திப்பீர் !
Last edited by makkal thilagam mgr; 30th September 2015 at 11:14 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
30th September 2015 11:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks