-
26th March 2016, 02:45 PM
#11
Junior Member
Diamond Hubber
மும்பையில் மாதுங்கா, டெல்லி யில் கரோல்பாக் போல கொல் கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.
விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.
எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.
மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.
அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.
அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பை யும் வெளிப்படுத்தினர்
அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.
தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா வுக்கு மறுநாள் காலை, திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்.ஜி.ஆர். நடக்க ஆரம்பித்து விட்டார். அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரோடு நடந்தனர். சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் ‘‘பழம் என்ன விலை?’’ என்று ஜாலியாக கேட்டார். அந்த மூதாட்டியும் சளைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி, ‘‘உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக் குத்தான் எடுத்துக்கோ’’ என்று கூறினார்.
அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத தொகையை அவர் கையில் திணித்த எம்.ஜி.ஆர்., கூடையில் இருந்த பழங் களை எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து ‘‘நீயும் சாப்பிடு’’ என்றார். அந்த மூதாட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘நீ நல்லா இருக்கணும் ராசா’’ என்று கூறிக் கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.!
‘நாடோடி மன்னன்' படத்தில் நாடோடி யாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க் கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.’’
- தி இந்து .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th March 2016 02:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks