-
11th November 2016, 11:38 AM
#11
Junior Member
Senior Hubber
நெஞ்சத் திரையில் நடிகர் திலகம் -11
-----------------------------------------------------------------
தினம் தினம் திருவிழாவைக் கொண்டு வருகிறார்
நடிகர் திலகம்.
"சிவந்த மண்" பார்த்து சிலிர்த்த விழிகளில் அடுத்த ஆனந்தம் விதைக்க நேற்று "அண்ணன் ஒரு கோயில்" ஆயிற்று.
இதோ.. இதனடியில் நான் இணைத்திருக்கிற
காட்சியைப் பார்த்து ரசிக்காதவர்களின் ஐநூறு,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமலே போகக் கடவது.
இணைந்த இந்த காட்சித் துண்டில் நான் குறிப்பிடும் இடம் ஒரு அழைப்பு மணிச் சத்தத்தோடு துவங்குகிறது. நம்மைச் சிறந்ததோர்
ரசனை உலகத்திற்குள் அழைக்கும் அழைப்பு மணி
அது.
மாடிப்படியிலிருந்து வேகமாய் இறங்கி வரும்
ஜெய்கணேஷ் கதவு திறக்க, தலைவர் பரபரப்பாய்
உள்ளே நுழைவார்.
போலீசாரால் தீவிரமாக தேடப்படும் டாக்டர் ரமேஷ்,
அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஒரு
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியிருப்பார்.
ஜெய்கணேஷிடம் அந்தக் குழந்தையின் நலம் விசாரிக்கும் அக்கறையாகட்டும்..
"ஆபரேஷன் செஞ்சது நீங்க.. நல்ல பேரென்னவோ
எனக்கு" என்று ஜெய்கணேஷிடமிருந்து அடிக்கும்
பாராட்டுச் சாரலில் கொஞ்சமும் நனையாது,
கடமையாய் காகிதமெடுத்து மருந்து எழுதுவதாகட்டும்..
ஒரு கண்ணியமான மருத்துவர் கம்பீரமாகத் திரைக்கு வருவார்.
நண்பனான மருத்துவரிடம் கெஞ்சி அனுமதி பெற்று, பழசத்தனையும் மறந்து படுத்திருக்கும்
தங்கையைப் பார்க்கச் செல்லும் துடிப்பென்ன?
கவலை பூசிய கை விரல்கள் கொண்டு தங்கையின் தலைகோதும் மென்மையென்ன?
கண்விழித்துப் பார்க்கும் நா வறண்ட தங்கை தண்ணீர் கேட்க.. தங்கையின் இன்றைய நிலையை ஜீரணிக்கவியலாதவராய் எச்சில் கூட்டி
(ஒரு டாக்டர் விழுங்கும் கசப்பு மாத்திரை..?) விழுங்குவதென்ன?
உள்ளிருந்து பொங்கித் திரண்டு வரும் கண்ணீர்த் துளி தங்கை முகம் வீழ்ந்து தெறிக்க.. விழிக்கும்
தங்கை "நீங்க யாரு" என்று கேட்க.. உடைந்து நொறுங்கிய ஒரு குரலில் "டாக்டர்" என்று சொல்வதென்ன?
தன்னையே மறந்து விட்ட தங்கையை நினைந்தழும், நீரோடு பானை விழுந்துடையும்
சத்தத்தோடு வரும் அந்த அழுகையென்ன?
அழுகையோடு கலந்த தன்னிரக்கமென்ன?
இயலாமையைக் குறிப்பதென்ன? இடை விடாத
புலம்பலென்ன?
நினைத்து,நினைத்து அழும் போது நீல நிற கைக்குட்டையை மீண்டும் மீண்டும் பார்ப்பதென்ன?
ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தவள் அடங்கிப் படுத்திருக்கும் நிலையை சிரித்தும் அழுதும் செப்புவதென்ன?
ஒரு ஐந்து நிமிட நேரத்திற்குள் ஆயிரம் பாவங்கள்
காட்டி நம்மை நடிகர் திலகம் தன் உலகத்துள் இட்டுச் செல்வதென்ன?
"அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தை
அதன் தினமான நேற்று பார்க்கும் ஆர்வத்தைத்
தூண்டி விட்ட ராகவேந்திரா சாருக்கும், முரளி சாருக்குமான நன்றிகள் என் நெஞ்சோடு கனப்பதென்ன?
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th November 2016 11:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks