Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 161– சுதாங்கன்.




    1968ம் வருடம் வந்த இன்னொரு படம் பாலாஜி தயாரித்த `என் தம்பி.’ இந்த படம் சென்னை மிட்லண்ட் தியேட்டரில் வெளிவந்தது! மிகப்பெரிய வெற்றிப் படம் இது! விஸ்வநாதனின் இசையில் அத்தனை பாடல்களும் மிகப் பிரபலம்!
    சிவாஜிக்கு மிகவும் வித்தியாசமான பாத்திரம் இந்த படத்தில்! அதே வருடம் வந்த இன்னொரு படம்தான் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்த `தில்லானா மோகனாம்பாள்’ படம். ஆனந்த விகடனில் கலைமணி என்கிற பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல்தான் `தில்லானா மோகனாம்பாள்.’
    இந்த நாவலை தானே எடுப்பதாகத்தான் இருந்தார் ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி அதிபருமான எஸ்.எஸ். வாசன்!
    ஆனால் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்த படத்தை எடுக்க உரிமையை வாங்க நினைத்தபோது, வாசன் உடனடியாக உரிமையை வழங்கினார்.
    காரணம், ஏ.பி. நாகராஜன் மீது எஸ்.எஸ். வாசனுக்கு இருந்த அபரிமிதமான நம்பிக்கை!
    அதே போல் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கி தமிழ் சினிமா சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு படமாக அதை உருவாக்கிக் காட்டினார் ஏ.பி. நாகராஜன்!
    நாகராஜன் உருவாக்கிய `திருவிளையாடல்’ புராணப் படம் என்றாலும், அதை நவீன முறையில் வழங்கினார். அதே போல் அவர் வழங்கிய சமூகப்படங்களில் மிகச்சிறந்த படம்தான் 'தில்லானா மோகனாம்பாள்!'
    நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், நடன மங்கை மோகனாம்பாளாக பத்மினியும் திரையில் வாழ்ந்து காட்டினார்கள்.
    இந்த படத்தில் கதாபாத்திர தேர்வே இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.
    ஏவி.எம். ராஜன்,பாலாஜி, டி.எஸ். பாலையா, டி.ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், சாரங்கபாணி, எம்.என். நம்பியார் என்று அருமையான நட்சத்திர தேர்வு!
    கே.வி. மகாதேவன் இசையமைப்பில் `மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?,’ ` நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?’ மனோரமாவிற்காக `தில்லாம் டோமடி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன்’ பாடல்கள் மிகப்பிரலமாகின!
    இந்த படத்தில் இன்னொரு விசேஷம் ஆண் குரலுக்கு பாடலே கிடையாது! அதாவது இந்த படத்தில் சிவாஜிக்கு பாடலே கிடையாது! சாதாரண டைரக்டராக இருந்திருந்தால் ஒரு கனவுக் காட்சியைப் புகுத்தி சிவாஜிக்கு ஒரு பாடல் வைத்திருப்பார்!
    ஆனால், ஏ.பி. நாகராஜன் அதைச் செய்யவில்லை. காரணம் கதாநாயகன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அவனைப் பாட வைப்பது சரியாக இருக்காது என்று அவர் நினைத்ததுதான்!
    1969ல் சிவாஜியின் எட்டுப் படங்கள் வெளிவந்தன!
    'அஞ்சல் பெட்டி 520', 'அன்பளிப்பு', 'காவல் தெய்வம்', 'குருதட்சணை', 'சிவந்த மண்', 'தங்கச்சுரங்கம்', 'திருடன்', 'நிறைகுடம்'.
    இந்த படங்களில் வெற்றி படம் என்றால் 'தங்கச்சுரங்கம்', 'திருடன்', 'நிறைகுடம்' படங்களைச் சொல்லலாம்!
    மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஸ்ரீதரின் 'சிவந்த மண்'. அந்நிய நாட்டில் எடுக்கப்பட்ட படம்! சிவாஜி ஒரு புரட்சிக்காரனாக வருவார்! படத்தின் அத்தனை பாடல்களும் மிக அருமை!
    அதுவும் `ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.
    `பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ எல்.ஆர். ஈஸ்வரி குரலில் ஒலித்தபோது இந்தியாவே அந்தக் குரலை கேட்டு மிரண்டது.
    இப்படி யாராலும் பாடமுடியாது என்று உலகப்புகழ் பெற்ற லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேயும் கூட ஒப்புக்கொண்டார்கள்!
    சென்னை குளோப் தியட்டரில் வெளிவந்த அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
    இந்த வருடத்தில் வந்த படம்தான், `அன்பளிப்பு’. ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த படம் இது. படத்தின் வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார்.
    படத்திற்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன்.
    இந்த படத்தில்தான் முதல் முதலாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்டான ஜெய்சங்கரும், சிவாஜியும் இணைந்து நடித்த முதல் படம்!
    இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி சரோஜாதேவி!
    அதே போல் இந்த வருடம் வந்த 'அஞ்சல் பெட்டி 520' படத்திலும் சிவாஜிக்கு ஜோடி சரோஜாதேவி!
    பாலாஜி தயாரித்த படம்தான் `திருடன்.’ இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா! இந்த படத்திற்கும் இசை, எம்.எஸ். விஸ்வநாதன்!
    ஏ.பி. நாகராஜன் இயக்கிய இன்னொரு சமூகப்படம் `குருதட்சணை.’ இந்த படத்தில் சிவாஜி, ஜெயலலிதா, பத்மினி நடித்திருந்தார்கள்! படம் எடுபடவில்லை!
    இந்த வருடம் சிவாஜிக்கு கிடைத்த மிக வித்தியாசமான கதாபாத்திரம் 'தங்கச் சுரங்கம்’ படத்தில்தான்.
    அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது! ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் சிவாஜிக்கு!
    ஓர் உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரம் அவருக்கு! இந்த படத்தை டி.ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்த படம் இது!
    எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு மர்மக் கதை கொண்ட படம்தான் இது! இதில் சிவாஜியின் நடை, உடை , பாவனை எல்லாமே மாறுபாட்டிருந்தன! இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி, பாரதி! படத்தின் இசை, டி.கே. ராமமூர்த்தி! அத்தனை பாடல்களுமே அருமையாக அமைந்த படம் இது!
    சென்னை சாந்தி தியேட்டரில் வெளியாகி வெற்றி கண்ட படம் இது! `நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது’ என்று நாகரீக உடையில் சிவாஜி தன் கிராமத்துக்கு பாடிக்கொண்டு வரும்போதே கொட்டகையில் விசில் சத்தம் பிளக்கும்!
    ராமண்ணாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு! ஒரு சின்ன இடத்திற்குள் ஒரு டூயட் பாடலை அமைப்பார்! இந்த சென்டிமென்ட் அவருக்கு எம்.ஜி.ஆர். நடித்த `பணத்தோட்டம்’ படத்திலிருந்து ஆரம்பமானது! `தங்கச்சுரங்கம்’ படத்தில் கிணற்றுக்குள் ஒரு டூயட் அமைத்திருப்பார்!
    `சந்தனக் குடத்துக்குள்ளே வண்டுகள் புகுந்து கொண்டு விளையாடுது’ பாடல் அப்போது படுபிரபலம்!
    சிவாஜியின் தந்தை ஓ.ஏ.கே. தேவர்தான் படத்தின் வில்லன்!
    தந்தையையே கைது செய்ய வேண்டிய உளவுத்துறை அதிகாரி வேடம் சிவாஜிக்கு!
    தாயார் வேடத்தில் எஸ். வரலட்சுமி கலக்கியிருப்பார்!
    அடுத்து வந்த மிகப்பெரிய வெற்றிப்படம்தான் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த `தெய்வ மகன்’ படம்!
    சிவாஜிக்கு மூன்று வேடங்கள்!
    மூன்று பாத்திரங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டி கலக்கியிருப்பார் சிவாஜி. ஒரு வங்காளக் கதையின் தமிழாக்கம்தான் இந்த படம்! சிவாஜியின் திரைவாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்!
    அப்பா சிவாஜிக்கு ஒரு பணக்கார மிடுக்கு! தந்தையைப் போல் அவலட்சணமான முகம் கொண்டதால் புறக்கணித்து ஒரு அனாதை விடுதியில் விடப்பட்ட மகன் சிவாஜி!
    பணக்கார தந்தையின் மிகச் செல்ல பிள்ளையான இன்னொரு சிவாஜி! சிவாஜி ரசிகர்களுக்கு சரியான விருந்து இந்த படம்!
    (தொடரும்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •