-
17th July 2014, 07:07 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
'ஜஸ்ட் ரிலாக்ஸ் இயக்குனர்கள்' வரிசையில் இளமை இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்களின் மற்றும் ஒரு அருமையான பாடலான 'எல்லோருக்கும் காலம் வரும்' பாடலை மிகச்சிறப்பாக ஆய்வு செய்து பதித்திருக்கிறீர்கள். எனது வேண்டுகோளை ஏற்று இப்பாடலை ஆய்வு செய்தமைக்கு மிக்க நன்றி.
பாடலில் இடம்பெறும் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்று விடாமல் நினைவுக்குக் கொண்டுவந்து பதிவை சிறப்பாக்கியிருக்கிறீர்கள்.
நீங்கள் சொன்னதுபோல இந்தப்பாடலில் எல்லோருடைய ஆட்டத்தையும் கவனித்தாலும், முக்கால்வாசி கவனம் ஜெய்குமாரி மீதுதான். அவருடைய அலுங்காத நடனமும் அந்த உடையும் கொள்ளை அழகு. இத்தனைக்கும் உடலை முழுவதுமாக மூடிய உடை. அதிலேயே அவ்வளவு அழகு. குறிப்பாக அந்த கூரான மூக்கு, அழகிய சிரிக்கும் கண்கள், வெகுளித்தனமான முக அமைப்பு அனைத்தும் சேர்ந்து நம்மை கிறங்க வைக்கும்.
ஆனால் அவருடைய இன்றைய நிலையை நினைக்கையில் அவர்மீது கொண்ட அபிமானம் அனைத்தும் அனுதாபமாக மாறும். 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்' என்ற ஆதங்கம் ஏற்படும். இத்தனைக்கும் ஓராண்டுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவ்வளவாக முதிர்ச்சியோ, முகமாற்றமோ இல்லாமல் அதே பழைய கள்ளமில்லா முகமும், வெகுளித்தனமான பேச்சுமாகவே இருந்தார்.
அவருடைய வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறியதற்குக் காரணம் கதாசிரியரும் இயக்குனருமான ஒருவர். திரைப்படங்களில் சிறிய வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடித்துக்கொண்டு, தன் கணவருடனும், குழந்தைகளுடனும் தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்றிருந்தவரை துர்ப்போதனை செய்து வம்பில் இழுத்துவிட்டவர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம். தன்னிடம் அருமையான கதையிருப்பதாகவும், தன்னுடைய இயக்கத்தில் அதை படமாக தயாரித்து வெளியிட்டால் நன்றாக வெற்றியடையும் எனவும் ஜெய்குமாரியிடமும் அவரது கணவரிடமும் தூபம் போட்டு தயாரிப்பு துறையில் இறக்கிவிட்டார். இவர்களும் அதைநம்பி தயாரிப்பில் இறங்கி இருந்த மொத்தப்பணத்தையும் அதில் முதலீடு செய்தனர்.
(நமது நடிகர் நடிகையரிடம் ஒரு ஏமாற்றமான கணிப்பு இதுதான். சொந்தப்படம் எடுப்பவர்கள் எல்லாம் நடிகர்திலகமாகவும், மக்கள்திலகமாகவும், பாலாஜியாகவும் ஆகிவிட முடியாது. சொந்தப்படம் எடுத்து வெற்றியடைந்த நட்சத்திரங்கள் 10 சதவீதம் என்றால் தோற்றவர்கள் 90 சதவீதத்தினர். இதை அவர்கள் உணர்வதே இல்லை.)
பேராசிரியரின் கதை, வசனம், இயக்கத்தில் "முன்னொரு காலத்திலே" என்ற பெயரில் அந்தப்படம் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஜெய்குமாரியின் கணவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் தொழிலதிபர். சொந்தப்படம் காரணமாக சென்னையிலேயே தங்கியதால், சிங்கப்பூர் போக்குவரவு நின்றுபோனது. ஜெய்குமாரியும் தன் பணம் மொத்தத்தையும் அப்படத்தில் முடக்கியதுடன், வெளியிலும் கடன்பெற்று முதலீடு செய்தார். வெளிப்புறப் படப்பிடிப்புகளெல்லாம் நடந்தன.
இந்நிலையில் பாதிப்படம் முடிவடைந்த நிலையில் இயக்குனர் பிரகாசம் தன் சுயரூபத்தைக் காட்டினார். ஒழுங்காக ஷூட்டிங் நடத்துவதில்லை. வேறு படங்களை ஒப்புக்கொண்டுவிட்டு மாதக்கணக்கில் ஜெய்குமாரியின் படத்தைக் கிடப்பில் போட்டார். பின்னர் ஒரேயடியாக படப்பிடிப்பு நின்று போனது. கடன் கொடுத்தவர்களின் நெருக்குதல் காரணமாக வீடு, கார் என்று ஒவ்வொன்றாக இழந்தார் ஜெய்குமாரி. தயாரிப்பில் கவனம் சிதறியதால் மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களும் கைநழுவிப் போயின. அப்படியும் கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளில் நடித்து குடும்பத்தை ஓட்டினார். ஆனாலும் சொந்தப்படத்தின் கடன்சுமை அழுத்த, வேறு வழியின்றி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் மீது ஜெய்குமாரி புகார் செய்தார்.
சங்கத்தினர் புகாரை விசாரித்து, இயக்குனர் பிரகாசத்தைக் கண்டித்து, உடனடியாக படத்தை முடித்துக் கொடுக்க உத்தரவிட்டனர். ஜெய்குமாரியும் அவர் கணவரும் கடன் வாங்கி மீண்டும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இரண்டு மூன்று முறை படப்பிடிப்புக்கு வந்ததோடு மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் வேறு படங்களின் ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டார் பிரகாசம்.
மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த பணத்துக்காக விநியோகஸ்தர்களை அணுக, ஏற்கெனவே இப்படத்தைப் பற்றிக்கேள்விப்பட்டிருந்த அவர்கள், படம் எடுக்கப்பட்டவரை போட்டுப்பார்த்தால்தான் பணம் தரமுடியுமென்று கூற, ஜெய்குமாரியும் தெரிந்தவர்களை வைத்து, லேபை அணுகி நெகட்டிவிலிருந்து ஒரு பாசிட்டிவ் பிரிண்ட் எடுத்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக்காட்ட, பிரகாசம் படம் எடுத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்த அவர்கள், படம் திருப்தியில்லையென்றும் அதனால் பணம் தரமுடியாதென்றும் கைவிரிக்க கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போனது. போட்ட பணம் அத்தனையும் படத்தில் முடங்கிப்போக வறுமையின் பிடியில் சிக்கினார்கள்.
தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகள் கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே பேரிடியாக ஜெய்குமாரியின் கணவர் மறைந்தார். செய்வதறியாது தவித்து நின்ற ஜெய்குமாரிக்கு மேஜர் உள்ளிட்ட திரையுலகத்தினர் சிலர் சிறிது காலம் உதவினர். இத்தனைக்கும் காரணமான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எதையுமே கண்டுகொள்ளவில்லை.
ஜெய்குமாரியின் சொந்தப்படமான "முன்னொரு காலத்திலே" கடைசி வரை வெளிவரவே இல்லை. அதில் போட்ட அத்தனை முதலீடும் நாசமானது. திரையுலக வாய்ப்புகளும் நின்று போனதால், சிறு வாடகை வீட்டில் நான்கு பெண்குழந்தைகளுடன் வசித்து வரும் ஜெய்குமாரி, ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் அலுவலகங்களை கூட்டிப்பெருக்கி, தண்ணீர் எடுத்து வைக்கும் பணியாள் வேலை செய்து வருகிறார். முதல் பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டார்.
சில மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெய்குமாரி, தற்போது யாராவது திரைப்படங்களில் / சீரியல்களில் அம்மா ரோல் அல்லது ஏதாவது சிறு வேடம் கொடுத்தாலும் நடிக்கத்தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு தரும்படியும் வேண்டினார்.
அவரது வாழ்க்கைப்போராட்டத்தை படித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது..
-
17th July 2014 07:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks