-
16th November 2015, 12:19 AM
#11
Senior Member
Seasoned Hubber
நினைத்துப் பார்க்கிறேன்
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பாடல்கள்... நம் நெஞ்சில் அன்றாடம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சிலவோ காலம் காலமாய் மனதில் ஆழமாய்ப் பதிந்து நமக்குள் பலவிதமான எண்ணங்களையும் கற்பனைகளையும் உருவாக்கும்.
ஒரு சிவாஜி ரசிகனாய், ஏராளமான மற்ற திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இதில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் ஏற்படும். சில பாடல்களில் சில இயக்குநர்கள் காட்சியமைப்பையே நடிகர் திலகத்தை மனதில் வைத்து எடுத்திருப்பார்களோ என்று தோன்றும் வண்ணம் படமாக்கியிருப்பார்கள்.
அப்படி என்னுடைய கனவுப் பாடல்களாய், அதில் நான் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தி நினைத்துப் பார்த்து மகிழ்ந்த பாடல்களாய், இந்தத் தொடரில் என் எண்ணங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதே எண்ண ஓட்டத்தில் நம்முடைய மற்ற நணபர்களும் இருந்திருக்கலாம். அவ்வாறு எண்ண ஓட்டத்தை இங்கே பகிர்ந்து கொண்டால் நம் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்த திருப்தி கிட்டும் என்பது திண்ணம்.
தொடக்கமாக எனக்கு மிக மிக பிடித்த பாடல், சிறு வயதில் முதன் முதலில் படம் வந்த புதிதில் கேட்ட போதே ஈர்த்து விட்ட பாடல், பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண சிட்டு பாடலாகும்.
மாமா என அன்போடு அழைக்கப்படும் திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களின் சிறப்பு அவருடைய படைப்புகளில் இருக்கக் கூடிய இழையோடக் கூடிய மெலடி, அதில் உள்ளே புதைந்திருக்கும் ஜீவன். இந்தப் பாட்டைக் கேட்கும் போது யாராக இருந்தாலும் தங்களை மெய் மறந்து விடுவார்கள். அதுவும் கே.வி.எம். மின் இன்னொரு சிறப்பு, பல்லவியை மிஞ்சும் வண்ணம் சரணத்தில் அவர் புகுத்தியிருக்கக் கூடிய உட்கரு, பாடலின் பொருளை முழுதும் கொண்டு வந்து விடும்.
இந்தப் பாட்டில் மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம், படமாக்கல். அந்தப் பாட்டின் ஜீவனை, அந்தப் பாட்டின் மென்மையை, அந்தப் பாட்டின் நளினத்தை, ஒரு சதவீதம் கூட கெடுக்காமல் மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கக் கூடிய விதமே.
இரண்டு இடங்களில் எம்.ஜி.ஆரின் நடன அசைவுகள் அவ்வளவு நளினமாக கொண்டு வந்திருப்பார். இயக்குநர் யோகானந்த் நல்ல ரசனைக்கார். இந்தப் பாட்டில் வழக்கமான எம்.ஜி.ஆரைப் பார்க்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.
சாவித்திரி அன்ன நடை போடும் போது இவரும் அதே போல அன்ன நடை போட்டு கையையும் காலையும் நளினமாக வைத்து நடக்கும் போதெல்லாம் மனம் துடிக்கும், நம்முடைய தலைவருக்கு இந்தப் பாட்டு கிடைத்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கும்.
பொண்ணாப் பொறந்தா ஒரு புருஷனுக்கு நேரே வரிகளின் போதும் எம்.ஜி.ஆரின் நளினமான அசைவுகள் சிறப்பாக இருக்கும்.
காலைப் பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம் வரியின் போது கால்களை முயல் போல் தத்தி தத்தி வைத்து நடப்பது இயக்குநரின் சமயோசித புத்திக்கு சான்று. எம்.ஜி.ஆர். இந்த இடத்தில் தியேட்டராக இருந்தால் கரகோஷங்களை அள்ளிக்கொண்டு போய் விடுவார்.
பார்ப்பதும் யாரையடி அன்ன நடை போட்டு வரியின் போது இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு கால்களை மெதுவாக வைத்து அன்ன நடை போடுவது அட்டகாசமாக இருக்கும்.
பரிசு படத்தில் சாவித்திரிக்கு பல புதிய ரசிகர்கள் உருவானார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இந்தப் பாடல் காட்சியுமாகும்.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை மனதில் உருவகப் படுத்த வைக்கும் இனிமையான பாடல்.
பாடகர் திலகத்தின் குரல் ஏன் இன்றும் மக்களிடம் இந்த அளவிற்கு வரவேற்பு பெறுகிறது என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.
கவியரசரின் பாடல் வரிகள் இலக்கியம் வாய்ந்தவையாக இப்பாடலில் பரிமளிக்கும்.
Last edited by RAGHAVENDRA; 16th November 2015 at 12:24 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
16th November 2015 12:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks