-
31st March 2012, 07:43 AM
#11
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
திருச்சியில் கொடைவள்ளல் நம் கர்ணன் அவர்கள் காட்டிய வழியில் சமூகநலப் பேரவை அமைப்பின் மூலம் ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியிருப்பது ஒவ்வொரு தலைவர் ரசிகரும் காலரைத் தூக்கி பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம். நிஜமாகவே இதயம் மகிழ்கிறது. இந்த அரிய பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
பள்ளிக் குழந்தைகள் வரிசையாக கர்ணனை தரிசிக்கச் செல்லுக் காட்சி அருமையிலும் அருமை. குழந்தைகளோடு குடும்ப சகிதம் படம் பார்க்க நடிகர் திலகம் படங்களை விட்டால் வேறு ஏது?
சிறுவயதில் நாங்கள் பள்ளியில் படிக்கையில் பள்ளி நிர்வாகம் சில படங்களுக்கு எங்களை அழைத்துப் போய் இருக்கிறது. அவை யாவுமே தலைவர் படங்கள்தாம். அவற்றுள் முக்கியமானவை கப்பலோட்டிய தமிழனும், அந்தநாளும். நன்றாக நினைவிருக்கிறது. அனைத்து பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மகிழ்ந்து படம் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விஷயம்? அந்த மகிழ்ச்சிக்கு வித்திட்டவர் நம் இதய தெய்வம் அல்லவோ! அந்தாள் ஞாபகம் தாங்கள் பதிவிட்ட அந்த செய்தித்தாள் நிழற்படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் கண்டிப்பாக குழந்தைகளை கர்ணன் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். நல்ல படங்களை குழந்தைகள் பார்த்திருக்கவே முடியாது. அதற்கான சந்தர்ப்பமும், சரியான தருணமும் இதுதான். பெரியவர்களும் குழந்தைகளுடன் படம் பார்க்கையில் நெளியாமல், முகம் சுழிக்காமல், 'ஏண்டா குழந்தைகளுடன் படம் பார்க்க வந்தோம்?' என்று தர்மசங்கடப் படாமல் அருமையாக குழந்தைகளுக்கு கதை சொல்லியபடியே நடிகர் திலகத்தின் உன்னதமான அசைவுகளையும் ரசித்துப் பார்த்தபடி மகிழலாம்.
அரசாங்கம் கப்பலோட்டிய தமிழனுக்கு வரிவிலக்கு அளித்தது போல கர்ணனுக்கும் வரிவிலக்கு அளிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. மறு வெளியீட்டு படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக கர்ணனுக்கு வரிவிலக்கு தரலாம். குறைந்த கட்டணத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் கர்ணனைக் கண்டுகளிக்க வசதியாக இருக்கும்.
திரும்பத் திரும்ப சிவாஜி என்ற நல்ல சுனாமி நாற்புறமும் சுழன்று அடித்துக் கொண்டேதான் இருக்கும். அதைத் தடுக்க வல்லவர் எவரும் இல்லை. திறமைகளின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் அவர். இப்போது கர்ணன். நாளை வீரபாண்டியக் கட்டபொம்மன். காலாகாலத்திற்கும் அவர் சாம்ராஜ்யம்தான் கொடிகட்டிப் பறக்கும். குத்தாட்டத்திலும் பஞ்ச் வசனங்களிலும், ஆபாச அசிங்கங்களிலும் மூழ்கிக் கிடக்கும் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற கர்ணனாய் கல்கி அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் திலகம். ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தி எல்லோர் முகத்திலுமே மகிழ்ச்சி அலையாய் பரவியிருப்பதை கர்ணன் பார்த்து விட்டு திரும்புவர்களிடம் காண முடிகிறது. குறிப்பாக தாய்மார்களிடம். இளைஞர்களும் சிவாஜி இவ்வளவு பெரிய திறமைசாலியா என்று வியக்கின்றனர்.
அருமையான பதிவுகள் இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 31st March 2012 at 10:48 AM.
-
31st March 2012 07:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks